மதன மோக ரூப சுந்தரி – 5 15

சிறிது நேரத்தில்.. தூரத்தில் அம்மன் ஊர்வலம் வருவது தெரிந்தது..!! ஆற்றில் நீராடியிருந்த அம்மன்.. அழகுற அலங்காரம் செய்துகொண்டு.. பல்லக்கு மீதேறி அமர்ந்து.. பவனி வந்து கொண்டிருந்தாள்.. கோயில் நோக்கி..!! நீண்ட அந்த சாலையில் நிதானமாக நகர்ந்து வந்த ஊர்வலத்தின் முன்பாக.. சில இளம்பெண்கள் நடனமாடி வந்தனர்..!! அகழி கிராமத்தின் வழக்கங்களில் ஒன்று அந்த நடனம்.. கும்மியாட்டத்தையும் ஒயிலாட்டத்தையும் கலந்த மாதிரியான ஒரு நடனம்..!!

“வாங்கம்மா.. நீங்களும் எங்ககூட வந்து ஆடுங்க..!! ம்ம்.. வாங்க..!!” ஆடிவந்த கன்னிப்பெண்களில் சிலர் ஆதிராவை வற்புறுத்தினர்.

“இ..இல்ல.. வேணாம்.. பரவால..!!” ஆதிரா லேசாக தயங்கினாள்.

“ப்ச்.. ஆடு.. போ..!!”

சிபியும் மற்றவர்களுடன் சேர்ந்து வற்புறுத்த, ஆதிரா தயக்கத்துடனே அவர்களுடன் சேர்ந்துகொண்டாள்..!! ஆரம்பத்தில் சற்று தடுமாறியவள்.. சீக்கிரமே.. இடுப்பையும், கைகளையும் அசைத்து நளினமாக நடனமாட ஆரம்பித்தாள்..!! அவளுக்கு மிகவும் பழக்கப்பட்ட நடனம்தான்.. அதனால் இயல்பாக அவர்களுடன் சேர்ந்து ஆடமுடிந்தது..!! ஆனால்.. அவளது காலில் ஏற்பட்டிருந்த காயத்தில்தான் அவ்வப்போது சுருக் சுருக்கென்று வலி..!! அந்த வலியை பொறுத்துக்கொண்டு.. வேதனையின் சாயலை கொஞ்சம் கூட முகத்தில் காட்டாமல்.. ஒரு பூரிப்புடனும் ஆர்வத்துடனுமே ஆடினாள் ஆதிரா..!!

கோயிலில் இப்போது கூட்டம் அதிகமாயிருந்தது.. மக்கள் நெருக்கியடித்து அம்மனின் அழகையும், ஆட்டத்தின் அழகையும் கண்டு ரசித்துக் கொண்டிருந்தனர்..!! ஆடிமுடித்த ஆதிரா கணவனை தேடினாள்.. அவன் சற்று தொலைவில் கும்பலுக்குள் நின்றிருந்தான்..!! கூட்டத்திற்குள் நுழைந்து கணவன் இருந்த திசை நோக்கி நகர்ந்தாள்.. அவ்வாறு நகர்ந்தவள் படாரென யார் மீதோ மோதிக்கொண்டாள்..!!

“ஸா..ஸாரி..!!”

என்றவாறு நிமிர்ந்தாள்.. முகிலன்..!! தான் இடித்துக்கொண்டது முகிலனை என்று அறிந்ததும்.. அவன் தன்னை முறைத்துப் பார்க்கிறான் என்பதை உணர்ந்ததும்..

“ஸா..ஸாரி.. ஸாரித்தான்..!!” என சற்றே தடுமாறினாள். முகிலனோ இறுக்கமான குரலில் பதிலுக்கு பேசினான்.

“ஹ்ம்ம்.. ஆட்டம்லாம் ரொம்ப பலமா இருக்கு..?? கொஞ்சம் கொறைச்சுக்கிட்டா நல்லா இருக்கும்..!!” என்று குதர்க்கமாக சொன்னான்.

“எ..என்ன சொல்றீங்க..??”

“ஹ்ஹ.. புரியாதமாதிரி நடிக்காத..!!”

“இ..இல்ல.. நெஜமாவே எனக்கு எதுவும் புரியல..!!”

” ஹ்ம்ம்ம்.. அந்த ப்ரொஃபஸரையும், ஸ்டேஷன் மாஸ்டரையும் போய் பார்த்ததா கேள்விப்பட்டேன்..??”

“ஆ..ஆமாம்.. அதுக்கு என்ன..??”

“அதுக்கு என்னவா..?? தங்கச்சி விட்டதை அக்காக்காரி ஆரம்பிக்கிறியா..?? பாத்து.. அவளுக்கு ஆன மாதிரி உனக்கும் ஏதாவது ஆகிடப் போகுது..!!” முகிலனின் அந்தப்பேச்சில் ஆதிரா இப்போது சற்றே எரிச்சலானாள்.

“என்ன.. மெரட்றிங்களா..??” என்றவாறு அவனுடைய கண்களை கூர்மையாக பார்த்தாள்.

“மெரட்டலாம் இல்ல.. மனசுல பட்டதை சொன்னேன்..!!”

“…………………………..”

“நம்ம குடும்பத்துக்குன்னு ஒரு மதிப்பும் கௌரவமும் இருக்கு ஆதிரா..!! பாக்குற எல்லாரும் உன்னை கையெடுத்து கும்பிட்ருப்பாங்களே.. அவங்கல்லாம் காறி துப்பினா பரவாலயா உனக்கு..??”

“…………………………..” – ஆதிரா பதிலேதும் சொல்லாமல் முகிலனை முறைத்து பார்த்தவாறே நின்றிருந்தாள்.

“போதும்..!! அந்த ஆராய்ச்சியை பத்தி ஆராய்ச்சி பண்றதை இத்தோட நிறுத்திக்க..!! மூடி கெடக்குறதை தோண்ட நெனச்சா.. அது அவ்வளவு நல்லா இருக்காது பாத்துக்கோ.. நான் சொல்லவேண்டியதை சொல்லிட்டேன்.. அப்புறம் உன் இஷ்டம்..!!”

“…………………………..”

“என்ன.. ஒன்னுமே சொல்ல மாட்டேன்ற..??”

முகிலன் அவ்வாறு கேட்டதும், ஆதிரா இப்போது வாய் திறந்தாள்.. உடம்பை விரைத்துக்கொண்டு முறைப்பாக சொன்னாள்..!!

“இங்க பாருங்க.. அந்த ஆராய்ச்சி பத்திலாம் எனக்கு எந்த கவலையும் இல்ல.. ஆனா என் தங்கச்சியைப் பத்தின அக்கறை இருக்கு..!! அவளுக்கு என்னாச்சுன்னு தெரியாம நான் ஓயமாட்டேன்.. அவ காணாமப் போனதுக்கு அந்த ஆராய்ச்சிதான் காரணம்னா, அதையும் வெட்டவெளிச்சமாக்க தயங்க மாட்டேன்..!!”

சொல்லிவிட்டு முகிலனின் பதிலை கூட எதிர்பாராமல் விடுவிடுவென நடந்தாள்.. ‘ஏய்’ என்று முதுகுப்புறமாக அவன் கத்தியதைக் கூட அவள் பொருட்படுத்தவில்லை..!! அதற்குள்ளாகவே.. இவர்களது வாக்குவாதத்தை தூரத்தில் இருந்து பார்க்க நேர்ந்த சிபி.. நகர்ந்து இவளை நெருங்கியிருந்தான்..!!

“என்ன ஆதிரா.. என்னாச்சு..??” என்று குழப்பமாக கேட்டான்.

“ஒ..ஒன்னுல்லத்தான்.. விடுங்க..!!”

அமர்த்தலாக சொன்ன ஆதிரா, அவனது கையை இறுக்கமாக பற்றிக்கொண்டாள்.. பல்லக்கில் வீற்றிருக்கிற அம்மனையே கூர்மையாக வெறிக்க ஆரம்பித்தாள்.. காரிய சித்தி வேண்டுமென கண்மூடி வேண்டிக்கொண்டாள்..!!

அன்று மாலை ஐந்தரை மணி.. சிங்கமலையை ஒட்டிய ஆளரவமற்ற வனப்பகுதி..!! வானில் திரண்டிருந்த மேகக்கூட்டங்களும், நெருக்கமாய் வளர்ந்திருந்த காட்டுமரங்களும்.. சூரியனின் வெளிச்சத்தையும், வெப்பத்தையும் சுத்தமாக வற்றிப்போக வைத்திருந்தன..!! மெலிதாக படர ஆரம்பித்திருந்த மாலைப்பனி.. காற்றின் ஈரப்பதத்தை சற்று அதிகரிக்க வைத்திருந்தது..!! இங்குவரை கேட்ட கோயில் ஒலிப்பெருக்கியின் சன்னமான சப்தத்தை தவிர.. சூழ்நிலையை சுற்றிலும் ஒரு கெட்டியான நிசப்தம்..!!