மதன மோக ரூப சுந்தரி – 5 15

மணிமாறனோ அந்த வாசனை மாற்றத்தை கண்டுகொள்ளாமல் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தார்..!!

“ஆங்.. வந்ததுல இருந்தே உன்கிட்ட ஒன்னு சொல்லனும்னு நெனச்சுட்டு இருந்தேன்..!! உன் தங்கச்சி தாமிரா இருக்காள்ல.. அவ..” அவர் சொல்லிக்கொண்டிருக்கையிலேயே, அவரது பேச்சை தடைசெய்கிற வகையில்..

“க்க்க்கர்ர்ர்ர்ர்.. க்க்க்ககர்ர்ர்ர்ர்..!!!!!” அறைக்கு வெளியே இருந்து அந்த சப்தம்.. ஏதோ காட்டுவிலங்கின் உறுமல் மாதிரி..!!

மணிமாறன் சற்றே நிதானித்தார்.. ஆதிராவை பிடித்திருந்த பிடியை கொஞ்சம் தளர்த்தியவர், காதுகளை கூர்மையாக்கி அந்த சப்தத்தை கவனித்தார்..!!

“க்க்க்கர்ர்ர்ர்ர்.. க்க்க்ககர்ர்ர்ர்ர்..!!!!!”

அந்த சப்தம் இப்போது இன்னுமே தெளிவாக கேட்டது.. ஆனால் அது என்ன சப்தம் என்று மணிமாறனுக்கு பிடிபடவில்லை..!! தொடர்ந்து அந்த சப்தம் கேட்டுக்கொண்டே இருக்க.. ஓரிரு வினாடிகள் யோசித்த மணிமாறன், பிறகு கையிலிருந்த உளியை பட்டென ட்ரேயில் போட்டார்..!! கையுறைகளையும், கழுத்தில் கட்டியிருந்த துணியையும் அவிழ்த்து மேஜையில் விசிறினார்.. மெல்ல நடந்து சென்று படிக்கட்டு ஏறினார்.. கதவை திறந்து வெளியில் பார்வையை வீசினார்..!! அவ்வாறு பார்வையை வீசிய அடுத்தநொடியே.. வெளியே அவர் கண்ட காட்சியில் அப்படியே பக்கென அதிர்ந்து போனார்..!!

அந்த கதவிலிருந்து நீண்டிருந்த நீளமான காரிடாரில்.. அங்கிருந்து சற்றே தூரமாக.. காரிடாருக்கு குறுக்குவாட்டில் படுத்திருந்தது அந்த காட்டுப்புலி..!! அந்த புலிக்கருகே.. காரிடாரின் மையமாக.. தலையை குனிந்தவாறு நின்றிருந்தது, சிவப்பு அங்கி போர்த்திய அந்த உருவம்..!!

அசைவெதுவும் இல்லாமல் அந்த உருவம் அப்படியே உறைந்துபோய் நின்றிருக்க.. அதன் காலடியில் படுத்திருந்த புலிதான் வாயை அகலமாக திறந்து உறுமிக் கொண்டிருந்தது..!!

“க்க்க்கர்ர்ர்ர்ர்.. க்க்க்ககர்ர்ர்ர்ர்..!!!!!”

கண்ணால் காண்பதை மணிமாறனால் நம்பவே முடியவில்லை.. அதிர்ச்சியில் திக்கித்துப்போய் அசையாமல் நின்றிருந்தார்..!! அந்த புலி இப்போது எழுந்தது.. தலையை சுழற்றி “க்க்க்கர்ர்ர்ர்ர்..” என்று ஒருமுறை கர்ஜித்தது.. வரிவரியாய் இருந்த உடம்பை ஒருமுறை குலுக்கிவிட்டுக்கொண்டது.. இவரை நோக்கி மெல்ல அடி எடுத்து வைத்தது..!!

மணிமாறன் இப்போது சற்றே சுதாரித்துக் கொண்டார்.. ஏதோ விபரீதம் என்று உணர்ந்துகொண்ட அவரது மூளை பட்டென சுறுசுறுப்பானது.. அறைக்கதவை சாத்திவிட சொல்லி அவருக்கு ஆணையிட்டது..!! அதேநேரத்தில்.. நடந்து வந்துகொண்டிருந்த வரிப்புலி கொஞ்சம் கொஞ்சமாய் வேகமெடுத்து.. அறையை நோக்கி ஓடிவர ஆரம்பித்தது..!! சட்டென தரையில் இருந்து எழும்பி, சரக்கென ஒரே பாய்ச்சலாய் பாயவும்.. மணிமாறன் கதவுகளை படக்கென சாத்தவும் சரியாக இருந்தது..!! கதவுகள் மூடிக்கொள்வதற்கு முன்பாக.. அந்த புலியின் ஒற்றைக்கால் மட்டும் உள்ளே நீண்டு.. அதன் கூரிய நகங்கள் மணிமாறனின் முகத்தை பிறாண்டியன..!!

“ஆஆஆஆஆஆ…!!”

கதவை மூடிய மணிமாறன், தடுமாறிப்போய் கீழே சரிந்தார்.. படிக்கட்டில் கடகடவென உருண்டு தளத்தில் வந்து விழுந்தார்..!! ஆதிராவுக்கு எதுவும் புரியவில்லை.. உள்ளே வந்து விழுந்த மணிமாறனை குழப்பமும், திகைப்புமாக பார்த்தாள்..!!

“த்த்தட்ட்டார்ர்ர்.. த்த்தட்ட்டார்ர்ர்.. த்த்தட்ட்டார்ர்ர்..!!!”

அந்த புலி சற்றும் சளைக்காமல்.. அறைக்கதவின் மீது திரும்ப திரும்ப பலமாக மோதிக்கொண்டே இருந்தது.. முட்டி முட்டியே கதவை திறந்துவிட முயன்றது..!! வலுவற்ற அந்த கதவும் எந்த நேரமும் திறந்துகொள்வது போல.. தளர்ந்துகொண்டே சென்றது..!!

அத்தனை நேரம் மிக நிதானமாக இயங்கிக்கொண்டிருந்த மணிமாறன் இப்போது படக்கென சுறுசுறுப்பானார்.. அவசரம் தொற்றிக் கொண்டவராய் எழுந்து ஓடிவந்தார்.. மரமேஜையின் ட்ராவை இழுத்தார்.. உள்ளிருந்து அந்த கைத்துப்பாக்கியை எடுத்தார்.. பதற்றத்தில் நடுங்குகிற விரல்களோடு தோட்டாக்களை நிரப்பினார்..!! ஒருசில தோட்டாக்கள் அவரது கையிலிருந்து நழுவி.. தரையில் விழுந்து ‘டங்.. டணார்ர்ர்..!!’ என்று சப்தம் எழுப்பின..!! ஆதிரா எல்லாவற்றையும் அதிர்ச்சியாக, மிரட்சியாக பார்த்துக் கொண்டிருந்தாள்..!!