மதன மோக ரூப சுந்தரி – 5 15

தீவிரமாக அவரை கடித்துக் குதறிக்கொண்டிருந்த புலி, இப்போது திடீரென அமைதியானது.. ‘க்க்க்கர்ர்ர்ர்ர்..’ என்று ஒரு உறுமலை மட்டும் வெளிப்படுத்திவிட்டு, கொஞ்சம் கொஞ்சமாய் பின்வாங்கியது..!! ரிவர்சில் நான்கைந்து ஸ்டெப்ஸ் எடுத்து வைத்து.. அப்படியே உடல் குறுகிப்போய் தரையில் படுத்துக்கொண்டது.. மிகவும் அப்பாவியான ஒரு பூனைக்குட்டியைப் போல..!!

மணிமாறன் குற்றுயிரும் குலையுயிருமாக கிடந்தார்.. அவரிடம் உயிர் இன்னும் மிச்சமிருக்கிறது என்பது தெளிவாக தெரிந்தது.. அவரது தொண்டைக்குழி ‘விழுக் விழுக்’ என்று துடித்தது.. ஒரு கை மட்டும் ‘வெடுக் வெடுக்’ என வெட்டிக்கொண்டு கிடந்தது..!!

ஆதிராவுக்கு ஒன்றுமே புரியவில்லை.. ‘ஏன்.. என்னாச்சு அந்த புலிக்கு.. எதற்காக இப்படி செய்கிறது..?’ என்பது மாதிரியாக அவளுக்குள் கேள்விகள்.. வித்தியாசமாக பார்த்தாள்..!!

அவள் அவ்வாறு பார்த்துக் கொண்டிருக்கும்போதே.. மணிமாறனின் தலைக்கருகே வந்து நின்றது அந்த உருவம்.. முகத்தில் கூந்தல்க்கற்றையோடு, சிவப்பு அங்கி போர்த்திய அந்த உருவம்..!! அதைப்பார்த்ததுமே திக்கென்று இருந்தது ஆதிராவுக்கு.. நெஞ்சுக்குள் ஏதோ பந்து ஒன்று அடைத்துக்கொண்ட மாதிரியாக ஒரு உணர்வு..!! அதிர்ச்சியில் அவளது உதடுகள் ‘ஓ’வென்று திறந்துகொள்ள.. வாய்விட்டு அலறக்கூட தோன்றாமல் உறைந்துபோய் நின்றிருந்தாள்..!!

அந்த உருவம் இப்போது குனிந்தது.. சாகாமல் துடிதுடித்துக் கொண்டிருந்த மணிமாறனை அள்ளி தோளில் போட்டுக்கொண்டது.. திறந்திருந்த காம்பவுண்ட் கேட் நோக்கி மெல்ல நடந்தது..!! படுத்திருந்த புலியும் இப்போது எழுந்துகொண்டது.. தலையை தொங்கப்போட்டவாறு அந்த உருவத்தின் பின்னால் நடந்தது.. மிகவும் விசுவாசனமான ஒரு வேலைக்காரனைப் போல..!!

ஆதிரா நடப்பதை எல்லாம் நம்பமுடியாதவளாய்.. இமைகளை விரித்துவைத்து ஜன்னல் வழியே பார்த்துக்கொண்டிருந்தாள்..!! கேட்-க்கு அருகே சென்றதும் அந்த உருவம் சற்று நின்றது.. அப்படியே சரக்கென திரும்பி, ஆதிராவை கூர்மையாக ஒரு பார்வை பார்த்தது..!! ஆதிராவுக்கோ தண்டுவடத்தில் ஜிவ்வென்று ஒரு சிலிர்ப்பு.. பக்கென்று இருதயத்தை யாரோ இறுகப்பற்றியது போலொரு உணர்வு..!!

ஓரிரு வினாடிகள்தான்..!! அந்த உருவம் மீண்டும் அந்தப்பக்கம் திரும்பியது.. தோளில் மணிமாறன், காலுக்கடியில் காட்டுப்புலி.. கேட்-க்கு வெளியே நடந்தது.. காட்டுக்குள் சென்று மறைந்தது..!!