மதன மோக ரூப சுந்தரி – 5 15

அதன்பிறகு சில நிமிடங்கள் கழித்து..!! வேறு திசையில் ஓடிய மற்ற இரு பெண்களும்.. அகழி செல்கிற சாலையில் ஆளுக்கொரு இடத்தில் இணைந்தனர்..!! பிறகு அதே சாலையில் தனித்தனியே ஓடியவர்கள்.. ஓரிடத்தில் ஒன்றாக சந்தித்துக் கொண்டனர்..!! பார்த்ததுமே ஓடிவந்து அணைத்துக் கொண்டனர்.. ஒருவரை ஒருவர் கட்டிக்கொண்டு அழுதனர்..!! தாங்கள் சேதாரமில்லாமல் தப்பித்துவிட்டாலும்.. தங்களது தோழி மாட்டிக்கொண்டாளே என்கிற பதைபதைப்பில் இருவருக்கும் நெஞ்சடைத்தது..!!

“அரிசிமூட்டை பாவம்டி.. குறிஞ்சிகிட்ட மாட்டிக்கிட்டா..!!!” அழுது அரற்றினாள் மேகலா..!!

‘பாவம்னு இவளை சொல்லல.. குறிஞ்சியை சொன்னேன்..!!’ என்று அவள் சற்றுமுன் கேலியாக சொன்னது இப்போது நினைவுக்கு வர.. அவளது அழுகை இன்னுமே அதிகமாக பீறிட்டது..!!

“அழாதடி.. வா.. மொதல்ல ஊருக்குள்ள போய் சொல்லலாம்..!!” சற்றே துணிச்சலாக சொன்ன வாசுகி, அடுத்தவினாடியே உள்ளுக்குள் உடைந்துபோய் உதடுகள் தழதழத்தாள்..!!

‘அவளை அப்டியே புடிச்சு மலைலயிருந்து தள்ளி விடுடி..!! ஊருக்குள்ள கேட்டா குறிஞ்சி தூக்கிட்டு போயிட்டான்னு சொல்லிரலாம்..!!’

சிறிது நேரத்திற்கு முன்பு அவள் பேசிய வார்த்தைகள், இப்போது மீண்டும் அவளது காதுக்குள் ஒலிக்க.. ‘ஓ’வென்று அவளுக்கும் அழுகை பீறிட்டு கிளம்பியது..!! அப்படியே கால்கள் மடங்கிப்போய்.. தரையில் வீழ்ந்து.. முதுகுப்புறம் விம்ம விம்ம.. குலுங்கி குலுங்கி அழுதாள்..!! மேகலாவும் இப்போது தரையில் அமர்ந்து, தோழியை அணைத்துக் கொண்டாள்.. ஆதரவாக அவளது முதுகை தடவிக்கொடுத்தாள்..!!

இருட்டுக்குள் அவ்வாறு அமர்ந்திருந்த அவர்களது முகத்தில்.. திடீரென ஒரு வெளிச்ச வெள்ளம் பாய்ந்து, கண்களை கூசச்செய்தது.. ஒருவித பதற்றத்துடனே இருவரும் எழுந்துகொண்டனர்..!! அந்த சாலையில், சிறிது தூரத்தில் ஒரு கார் வந்துகொண்டிருந்தது.. அந்த காருடைய முகப்புவிளக்கின் வெளிச்சம்தான் அது..!! காருக்குள் இருந்தவர்களை இவர்களால் உடனடியாக அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது.. ஆதிராவும், சிபியும்..!! அத்தனை நேரம் கோயிலில் கழித்துவிட்டு.. அப்போதுதான் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்கள்..!!

“அக்காஆஆஆ..!!” என்று கத்திக்கொண்டு, காரைநோக்கி ஓடினார்கள் வாசுகியும் மேகலாவும்.

“அ..அத்தான்.. வண்டியை கொஞ்சம் நிறுத்துங்க..!!”

ஆதிரா பதற்றமாக சொல்லவும், சிபி சரக்கென ப்ரேக் போட்டு காரை நிறுத்தினான்..!! ஏதோ விபரீதம் என்று புரிந்துகொண்ட இருவரும்.. காரில் இருந்து அவசரமாக இறங்கினார்கள்..!! தங்களை நோக்கி மிரட்சியாக ஓடிவந்த பெண்களிடம்..

“எ..என்னம்மா.. என்னாச்சு..??” ஆதிரா பதட்டத்துடன் கேட்டாள்.

அழுகையும், மூச்சிரைப்புமாக நடந்ததை விளக்கினார்கள் வாசுகியும், மேகலாவும்..!! அவர்கள் சொன்னதை கேட்க கேட்க.. அப்படியே அதிர்ச்சியில் உறைந்துபோனார்கள் ஆதிராவும், சிபியும்..!! நடந்ததை நம்புவதற்கு சற்று கடினமாகத்தான் இருந்தது.. அதையும்மீறி அந்தப்பெண்களின் முகத்தில் கொப்பளித்த அதீத பயமும், மிரட்சியும்.. அவர்களது வார்த்தையில் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியது..!!