மதன மோக ரூப சுந்தரி – 5 15

ஆதிரா விக்கித்துப்போய் நின்றிருந்தாள்.. ‘காலையில்தானே அந்த அப்பாவிப்பெண்ணை வாயார வாழ்த்தினோம்’ என்கிற நினைவு வர.. துக்கம் தொண்டையை அடைத்து, வாயை ஒருகையால் பொத்திக் கொண்டாள்..!!

“இ..இப்போ.. எ..என்னத்தான் பண்றது..??” கணவனிடம் கவலையாக கேட்டாள். சிபி சற்று தெளிவாகத்தான் இருந்தான்.

“டென்ஷன் ஆகாத ஆதிரா.. ரிலாக்ஸ்..!! அவசரப்பட்டு நாமளா எந்த முடிவுக்கும் வரவேணாம்.. தென்றல் தப்பிச்சிருக்க கூட சான்ஸ் இருக்கு.. நான் சிங்கமலை போய் அவளை தேடிப்பாக்குறேன்.. நீ இவங்களை கூட்டிட்டு வீட்டுக்கு போ.. வனக்கொடிக்கும், கதிருக்கும் இன்ஃபார்ம் பண்ணு..!!”

“ஐயோ வேணாம்த்தான்.. நீங்க போகாதீங்க.. எனக்கு பயமா இருக்கு..!!”

“எனக்கு ஒன்னும் ஆகாதுடா.. தேவையில்லாம பயப்படாத..!!”

“ப்ளீஸ்த்தான்.. வேணாம்..!!”

“ப்ச்.. புரியாம பேசாத ஆதிரா.. நாம லேட் பண்ற ஒவ்வொரு செகண்டும் தென்றலுக்கு ஆபத்து..!! உடனே போய் தேடிப்பாக்குறது நல்லது..!!”

“அ..அப்போ.. என்னையும் உங்ககூட கூட்டிட்டு போங்க..!!”

“நீ எதுக்குடா அங்க..?? நான் மட்டும் போயிட்டு வரேன்..!!”

“இல்லத்தான்.. உங்களை தனியா அனுப்ப எனக்கு இஷ்டம் இல்ல.. நானும் வர்றேன்..!!”

மனைவியிடம் வாக்குவாதம் செய்ய நேரமில்லாமல்.. அவளையும் உடன்அழைத்துச் செல்ல சம்மதித்தான் சிபி..!! கிளம்புவதற்கு முன்.. வனக்கொடிக்கும், கதிருக்கும் உடனடியாய் விஷயத்தை தெரிவிக்குமாறு வாசுகியிடம் சொன்னான்.. தென்றலை இறுதியாக அவர்கள் பார்த்த இடத்தை பற்றி விசாரித்துக் கொண்டான்.. எந்த இடத்திற்கு சென்று தேடுவது என்று உத்தேசமாக முடிவு செய்துவிட்டே காரை கிளப்பினான்..!!

மலைப்பாதையில் ஐந்து நிமிட பயணத்திற்கு பிறகு.. தார்ச்சாலை முடிவடைந்த இடத்தில் சிபி காரை நிறுத்தினான்.. டாஷ்போர்ட் திறந்து டார்ச்லைட்டை கையில் எடுத்துக் கொண்டான்..!! இருவரும் காரில் இருந்து இறங்கி, கதவை அறைந்து சாத்தினார்கள்.. இருள் அப்பியிருந்த வனப்பகுதிக்குள் ஒருவித அவசரத்துடன் நடந்தனர்..!! மழை இப்போது ஓரளவுக்கு ஓய்ந்திருந்தது.. சில்லென்று மெலிதாக சிதறிய தூறல் மட்டுமே..!!

“தென்றல்.. தென்றல்..!!” ஆதிரா தென்றலின் பெயரை பதைபதைப்புடன் அழைத்தவாறே சென்றாள்..!!

மசமசப்பான வெளிச்சத்துடன் மரங்களின் பிம்பங்கள் மட்டுமே ஆங்காங்கே அடர்ந்து தெரிந்தன.. கையிலிருந்த டார்ச்சால் இருட்டுக்குள் வெளிச்சக்கீற்றை பாய்ச்சியவாறே நடந்தான் சிபி.. அவனுடன் நடந்த ஆதிராவின் இருதயமோ ‘திக் திக்.. திக் திக்..’ என்று பதறிக்கொண்டிருந்தது..!! சூழ்நிலையை சுற்றிலும் ஒரு அமானுஷ்ய நிசப்தம்.. காய்ந்த சருகுகள் மீது அவர்களது காலடி பதிகிற சப்தம் மட்டுமே..!!

“சர்ர்ர்ரக்.. சர்ர்ர்ரக்.. சர்ர்ர்ரக்..!!!”

இளம்பெண்கள் மூவரும் அந்த உருவத்திடம் இருந்து மிரண்டு, பக்கவாட்டில் ஓடிய அந்த பாதையில்.. இப்போது சிபியும் ஆதிராவும் சென்றுகொண்டிருந்தனர்..!! அவர்கள் ஒளிந்துகொண்ட அந்த அகன்ற அடிப்புறம் கொண்ட காட்டுமரம்.. அந்த இடத்தில் சற்று நின்று டார்ச்சை சுழற்றினான் சிபி.. தரையிலிருந்து மேல் கிளம்பி, பாதையில் படர்ந்திருந்த அந்த மரவேர் கண்ணில் பட்டது.. அந்த திசையில் மெல்ல நடந்தான்.. அவனுக்கு இரண்டடி இடைவெளி விட்டு ஆதிரா பின்தொடர்ந்தாள்..!!

“தென்றல்.. தென்றல் தென்றல்..!!”

அதே திசையில் மேலும் சிறிது நேரம் நடக்க.. அந்த மலைச்சரிவை வந்தடைந்தார்கள்..!! சரேலென்று செங்குத்தான மலைச்சரிவு.. அந்த சரிவின் அடியாழத்தில் சலசலப்புடன் ஓடுகிற குழலாற்றின் சப்தம்..!! மலைச்சரிவை ஒட்டியே குறுகலாக சென்ற அந்த பாதையில்.. சற்றே கவனமாகவும், நிதானமாகவும் நடந்தார்கள் இருவரும்..!! சிபி பாதையில் வெளிச்சத்தை தெளித்துக்கொண்டே..

“பாத்து வா ஆதிரா.. மழை பெஞ்சு ஈரமா இருக்குது.. வழுக்குது..!!” என்று மனைவியிடம் சொன்னபோதுதான்..

“ச்ச்சலீர்ர்ர்..!!!!!” ஆதிராவின் காலில் ஏதோ தட்டுப்பட்டு ஓசை கிளப்பியது.

அது என்னவென்று தலையை தாழ்த்தி பார்த்தாள்.. குனிந்து கையில் எடுத்தாள்.. அது.. ஒரு ஒற்றைக்கால் கொலுசு..!! அதை பார்த்ததுமே ஆதிராவுக்கு பட்டென்று தெரிந்து போனது..!!

“தென்றலோட கொலுசு அத்தான்..!!”

“ஓ..!! அப்போ.. இந்தப்பக்கமாத்தான் அவ போயிருக்கனும்..!!”

அதே பாதையில் இப்போது சற்று விரைவாக நடந்தார்கள்.. தென்றலை தேடுவதை தீவிரப் படுத்தினார்கள்..!! இருட்டாக இருந்த மலைச்சரிவின் பரப்பில்.. சிபியின் கையிலிருந்த டார்ச்லைட்டின் வெளிச்சவட்டம் படிந்து.. ஓரிடத்தில் நில்லாது அங்குமிங்கும் அலைபாய்ந்து கொண்டிருந்தது..!!

“டார்ச்சை குடுங்கத்தான்..!!”

ஒருவித பதற்றத்துடன் ஆதிரா அவ்வாறு திடீரென கேட்கவும்.. என்னவென்று புரியாமலே அவளுடைய கையில் டார்ச்லைட்டை திணித்தான் சிபி..!!

“என்னாச்சு ஆதிரா..??”

“ஏதோ அசைஞ்ச மாதிரி இருந்தது..!!”

“எங்க..??”

கணவனின் கேள்விக்கு பதில் சொல்லாமல்.. அவர்கள் நின்றிருந்த இடத்தில் இருந்து செங்குத்தாக கீழிறங்கிய பள்ளத்தில்.. சற்றே ஆழமாக, தூரமாக.. வெளிச்சத்தை தெளித்தாள் ஆதிரா..!! கொஞ்சம் உற்றுப் பார்க்கவும்தான் அது தெரிந்தது.. பாறை இடுக்கில் இருந்து வெளிப்பட்டு, காற்றில் மெலிதாக அசைந்துகொண்டிருந்த அந்தத் துணி.. இளமஞ்சள் நிறத்திலான துணி..!!!!

ஆதிராவின் முகத்தில் இப்போது பட்டென ஒரு மலர்ச்சி.. மனதில் ஒருவித நம்பிக்கையுடன் உற்சாகமாக கீழ்நோக்கி கத்தினாள்..!!

“தென்றல்.. தென்றல்..!!!”

அடுத்த வினாடியே கீழிருந்து பதில் வந்தது.

“அக்காஆஆஆ..!!!!”

தென்றலின் குரலை கேட்டதும்.. ஆதிராவும், சிபியும் அப்படியே பூரித்துப் போனார்கள்..!! இருவரும் ஒரே நேரத்தில் ஒரு நிம்மதிப் பெருமூச்சை வெளிப்படுத்தினார்கள்.. ஆதிரா வஜ்ரேஸ்வரி அம்மனுக்கு மனதுக்குள்ளேயே நன்றி தெரிவித்தாள்..!! குறிஞ்சிக்கு பயந்து.. அவளிடம் இருந்து தப்புவதற்காக.. தென்றல் இந்த மலைச்சரிவில் கீழிறங்கி மறைந்திருக்க வேண்டும் என்று அனுமானித்தார்கள்..!! இங்கிருந்து அவளுடைய முகத்தை காண இயலவில்லை.. அவளது குரல் மட்டும் தொடர்ந்து ஒலித்தது.. தெளிவில்லாமல் காதில் வந்து விழுந்தது..!!