மதன மோக ரூப சுந்தரி – 5 15

“அப்புறம்..??”

“ஒரு புலி..!! குறிஞ்சி கூடவே வந்த ஒரு புலி..!!”

“புலியா..??”

வில்லாளனின் முகத்தில் அப்பட்டமாய் ஒரு நம்பிக்கையின்மை தெரிந்தது.. ஆதிராவை அவர் பார்த்த பார்வையில் ஒருவித எரிச்சல் கலந்திருந்தது..!! அவரது ஏளனப்பார்வையை கண்டுகொள்ளாமல்.. இரவு நடந்த விஷயங்களை இன்னொருமுறை அவருக்கு விளக்கி சொன்னாள் ஆதிரா..!! அவள் சொன்னதையெல்லாம் நம்பிக்கையில்லாமலே கேட்டுமுடித்த வில்லாளன்.. அதன்பிறகும் சில வினாடிகள் அவளது முகத்தையே கூர்மையாக பார்த்துக் கொண்டிருந்தார்..!! பிறகு சலிப்பாக தலையசைத்தவாறே.. இல்லாத தலைமயிரை பரபரவென சொறிந்துகொண்டார்..!!

“ப்ச்.. என்னங்க பேசுறீங்க நீங்க..?? நீங்க சொல்றதுல எதாவது லாஜிக் இருக்கா..??”

“கண்ணால பாத்ததை சொல்லிட்டு இருக்கேன் ஸார்.. இதுல லாஜிக் இருக்கா இல்லையான்லாம் எனக்கு தெரியல..!!”

“புதுசு புதுசா என்னத்தயோ சொல்றிங்க.. அகழி காட்டுக்குள்ள புலிலாம் எதுவும் கெடையாது.. இதுவரை எவனும் கண்ணால பாத்தது இல்ல..!!”

“நான் பார்த்தேன் ஸார்..!! அந்த புலி அந்தாளை கடிச்சு குதர்றதை என் ரெண்டு கண்ணாலயும் பார்த்தேன்..!! அந்தாளு சாகாம துடிச்சுட்டு இருக்குறப்போவே.. குறிஞ்சி அவரை..”

“போதும் ஆதிரா.. நிறுத்துங்க.. ப்ளீஸ்..!!”

வில்லாளன் சற்றே குரலை உயர்த்தி கத்தவும்.. ஆதிரா பட்டென அமைதியானாள்..!! வெளியில் நின்றிருந்த சிபி.. உள்ளே நடந்த விசாரணையை எரிச்சல் மிகுந்த முகத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான்..!! வில்லாளன் இப்போது அருகிலிருந்த வாட்டர்பாட்டில் திறந்து.. தண்ணீரை கடகடகவென தொண்டைக்குள் சரித்துக்கொண்டார்..!! உதடுகளை கைக்குட்டையால் ஒற்றி எடுத்துவிட்டு.. ஆதிராவையே சிலவினாடிகள் உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தார்..!! பிறகு சற்றே இலகுவான குரலில் பேச ஆரம்பித்தார்..

“சரி ஆதிரா.. நீங்க ஏன் இப்படிலாம் பேசுறீங்கன்னு எனக்கு புரியுது..!!”

“ஏ..ஏன்..??” ஆதிரா நெற்றியை சுருக்கினாள்.

“ஆனா.. நீங்க பயப்படுறதுக்குலாம் ஒன்னும் தேவையே இல்ல.. உங்களுக்கு ஒரு பிரச்சினையும் வராது.. நான் கேரண்டி..!! தைரியமா உண்மையை சொல்லுங்க..!!”

“எ..என்ன சொல்றீங்க நீங்க..?? எ..எனக்கு புரியல..!!”

“கமான்.. ஒரு சைக்கோபாத்தை நீங்க கொலை பண்ணதுல எந்த தப்புமே இல்ல.. உங்க உயிரை காப்பாத்திக்கிறதுக்காக அவனை கொன்னுருக்கிங்க.. அவ்வளவுதான..??”

“வாட்..????”

“சட்டப்படி உங்களுக்கு எந்த பிரச்சினையும் வராது ஆதிரா.. அதுக்கு நான் கேரண்டி..!! அதேநேரம்.. அந்தாளோட டெட்பாடி கெடைக்காம நாங்க ஒன்னுஞ் செய்யமுடியாது.. அதை நல்லா புரிஞ்சுக்கங்க.. ப்ளீஸ்..!!”

“ஸார்.. மொதல்ல நான் சொல்றதை நீங்க புரிஞ்சுக்கங்க.. பொய் சொல்லவேண்டிய அவசியம் எனக்கு இல்ல.. நான் சொன்னதெல்லாம் உண்மை..!! குறிஞ்சிதான் அந்தாளை..”

“ப்ளீஸ் ஸ்டாப் திஸ் நான்சென்ஸ் ஆதிரா..!! கேட்டு கேட்டு காதுலாம் வலிக்குது.. போதும்..!! உண்மையை சொல்லுங்க.. எப்படி அந்த ஆள்ட்ட இருந்து தப்பிச்சிங்க.. எப்படி அவரை கொலை பண்ணுனிங்க.. என்ன வெப்பன் யூஸ் பண்ணுனிங்க.. டெட்பாடியை எங்க டிஸ்போஸ் பண்ணுனிங்க.. நீங்க மட்டுந்தானா இல்ல உங்க ஹஸ்பன்டும் உங்களுக்கு ஹெல்ப் பண்ணாரா..??”

“ஸார்.. ப்ளீஸ்ஸ்ஸ்..!!!”

11

ஆதிரா கெஞ்சலாக கத்திக்கொண்டிருக்கும்போதே.. அதற்குமேலும் பொறுமை இல்லாத சிபி அவசரமாக அறைக்குள் நுழைந்தான்..!! மனைவியின் புஜத்தை இறுகப்பற்றி.. நாற்காலியில் இருந்து அவளை மேலே தூக்கினான்..!!

“என்கொய்ரிலாம் முடிஞ்சு போச்சு ஆதிரா.. எழுந்து வா போகலாம்..!!” என்று எரிச்சலாக சொன்னான்.

“ஹலோ.. என்கொய்ரி முடிஞ்சதா இல்லையான்னு நான் சொல்லணும்..!!” இடையில் புகுந்து சூடாக சொன்னார் வில்லாளன்.

“உங்களுக்கு கோவாப்ரெட் பண்றதா வேணாமான்னு நாங்க முடிவு பண்ணனும்..!! இனிமே என் வொய்ஃப்ட்ட விசாரணை பண்ணனும்னா கோர்ட் ஆர்டரோட வாங்க.. குட்பை..!!” பதிலுக்கு சீறினான் சிபி. ஆதிராவை இழுத்துக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தான்.

“ஹலோ..!!!!!”

முதுகுக்கு பின்னாலிருந்து வில்லாளன் கத்துவதை பொருட்படுத்தாமல்.. மனைவியை அணைத்தவாறே அழைத்துச்சென்று, அந்த அறையை விட்டு வெளியேறினான்..!!

காரில் கிளம்பி இருவரும் வீட்டுக்கு வந்தார்கள்..!! வீட்டில்.. திரவியம், வனக்கொடி, கதிர், தென்றல் ஒருபக்கம்.. பகையை மறந்து வீட்டுக்குள் அடியெடுத்து வைத்திருந்த அங்கையற்கண்ணி, யாழினி, நிலவன் இன்னொருபக்கம்..!! அனைவருமே பதட்டத்தின் பிடியில் இருந்து இன்னும் மீண்டிருக்கவில்லை.. ஆனால்.. ‘ஏதோ இதுவரையில் சேதாரம் இல்லாமல் இருபெண்களும் தப்பித்தனரே’ என்பதுமாதிரியான ஒரு நிம்மதியுணர்வும் அவர்களிடம் இல்லாமல் இல்லை..!!

ஆதிராவை எல்லோருமே அன்புடன் அணுகி.. அவரவரால் இயன்ற அளவிற்கு அவளை ஆறுதல்படுத்த முயன்றனர்..!! இன்ஸ்பெக்டரின் விசாரணையை பற்றி விசாரித்து தெரிந்து கொண்டனர்.. எதைப்பற்றியும் கவலைப்படாமல் அவளை ஓய்வெடுத்துக்கொள்ள அறிவுறுத்தினர்..!!

“எனக்கு தெரிஞ்ச பையன்தான்மா.. ஏன் இப்படிலாம் பண்றான்னு தெரியல..!! கொஞ்சம் மொரடன்.. ஆனா ரொம்ப நல்லவன்..!!” வில்லாளனுக்கு சர்டிஃபிகேட் கொடுத்த திரவியம்,

“நீ ஒன்னும் கவலைப்படாதம்மா.. நான் அவன்ட்ட சொல்லி வைக்கிறேன்..!!” என்று தனது அதிகாரத்தை உபயோகப்படுத்தி, வில்லாளனை அடக்கிவாசிக்க செய்தவதாக நம்பிக்கை தெரிவித்தார்.

ஆதிரா பெரும்பாலான நேரம் தனது அறையில் ஓய்வுதான் எடுத்தாள்.. சிபிதான் அன்றுமுழுதும் செல்ஃபோனும் கையுமாகவே இருந்தான்..!! மைசூரிலிருக்கிற மாமனார், மாமியார்.. தனது பத்திரிகை நண்பர்கள்.. தனது முதலாளி நாவரசு என.. யாருக்காவது கால் செய்து பேசிக்கொண்டே இருந்தான்.. இல்லாவிட்டால் அந்தப்பக்கம் இருந்து யாராவது அழைப்பு விடுக்க, இவனது செல்ஃபோன் இங்கே கிணுகிணுக்கும்..!! தாங்கள் இருக்கிற இக்கட்டான நிலையை விளக்கி சொன்னான்.. இந்த நிலையில் இருந்து உடனே மீள்வதற்கு ஆலோசனை கேட்டான்..!!

விசாரணை முடியும்வரை அகழியை விட்டு செல்லக்கூடாது என்று வில்லாளன் அறிவுத்தியிருந்தார்.. ஆனால் சிபிக்கோ, உடனே அகழியை விட்டு சென்றுவிடவேண்டும் என்கிற எண்ணம்..!! அதற்காகத்தான் நாவரசுவின் உதவியை நாடினான்.. அவரது செல்வாக்கை காவல்த்துறையிடம் உபயோகிக்குமாறு கேட்டுக்கொண்டான்.. அடிக்கடி அவரைத்தான் தனது செல்ஃபோனில் அழைத்து பேசினான்.. ஆதிராவும் அவரிடம் சிறிது நேரம் பேசினாள்.. தான் இப்போது தைரியமாக இருப்பதாக அவரிடம் தெரிவித்தாள்..!!

அன்று மாலை செய்தித்தாள்களில் அகழி கிராமத்து பயங்கரம் முதல் பக்கத்தை பிடித்திருந்தது.. ‘தோட்டத்தை தோண்ட தோண்ட பிணங்கள்’ என்று செய்தித்தலைப்பு கிடந்து அலறியது..!! ஆதிரா மணிமாறனிடம் இருந்து தப்பித்த செய்தி வெளியாகி இருந்தது.. ஆனால் அவளது வாக்குமூலம் எதுவும் வெளியிடப்படவில்லை..!! ‘சைக்கோ கொலைகாரனின் உடல் கிடைக்காமல் போலீஸ் திண்டாட்டம்’ என்கிற ரீதியில் கிண்டல் இருந்தது.. புலி அடித்து கொன்றிருக்கலாம் என்று யூகம் தெரிவிக்கப்பட்டிருந்தது..!!