மதன மோக ரூப சுந்தரி – 5 15

“அக்காஆஆ.. நா..நான் இங்க.. கு..குறிஞ்சி என்னை.. நா..நான் அவகிட்ட..”

“எங்களுக்கு எல்லாம் தெரியும்மா.. தெரிஞ்சுதான் உன்னைத் தேடி வந்தோம்..!! குறிஞ்சி இப்போ போய்ட்டா.. இங்க யாரும் இல்ல.. நீ மேல ஏறி வா தென்றல்..!!”

“இ..இல்லக்கா.. என்னால முடியல.. ஏதோ ஒரு வேகத்துல எறங்கிட்டேன்.. இப்போ எப்படி மேல வர்றதுன்னு தெரியல.. இங்க எதைத்தொட்டாலும் வழுக்குது.. எனக்கு கால்ல வேற அடிபட்ருக்கு..!!”

தென்றல் அவ்வாறு பரிதாபமாக சொல்லவும், ஆதிராவும் சிபியும் ஒருகணம் குழம்பிப் போனார்கள்.. என்ன செய்வதென்று யோசித்தவர்கள், பட்டென ஒரு முடிவுக்கு வந்தார்கள்..!!

“சரி தென்றல்.. நீ அங்கேயே இரு.. நான் கீழ வந்து உன்னை மேல அழைச்சுட்டு வரேன்..!!”

சிபி கீழே பார்த்து கத்திவிட்டு, அந்த மலைச்சரிவில் மெதுவாக இறங்கினான்..!! ஆதிரா மேலிருந்து டார்ச் அடிக்க.. அதில் கிளம்பிய சொற்ப வெளிச்சத்தின் துணையோடு நிதானமாக கீழிறங்கினான்..!! வழுக்குப் பாறைகள் நிறைந்த மலைச்சரிவு அது.. இப்போது மழைநீரும் சேர்த்துக்கொள்ள, இன்னுமே அதிகமாக வழுக்கியது..!!

“பார்த்து அத்தான்.. பொறுமையா எறங்குங்க..!!”

மேலே நின்றிருந்த ஆதிரா, கனிவும் கவலையுமாக சொன்னாள்..!! சிபியும் மிக மிக கவனமாகவே அந்தப் பள்ளத்தில் இறங்கிக் கொண்டிருந்தான்..!! கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து.. தென்றலின் புடவை பறந்த இடத்தை அடைந்தான்..!! அருகருகே இருந்த இரண்டு பாறைகளுக்கு இடையிலான குறுகிய இடுக்கில்.. மிக வசதியாகவே பதுங்கியிருந்தாள் தென்றல்..!!

தென்றலை நெருங்கிய சிபி, ஒருகையால் அவளுடைய புஜத்தை வலுவாகப் பற்றிக்கொண்டு.. பாறையின் இடுக்கிலிருந்து அவள் வெளியே வர உதவினான்..!! அந்தப்பிடியை விடாமலே.. அவள் எளிதாக மேலேறுவதற்கு ஒருசில அறிவுரைகளை வழங்கியவாறு.. அவளுடன் சேர்ந்து தானுமே மெல்ல மெல்ல அந்த மலைச்சரிவில் இருந்து மேலேறினான்..!!

“என்னத்தான்.. போயிட்டிங்களா..??” ஆதிரா மேலிருந்து கத்த,

“ம்ம்.. வந்துட்டேன் ஆதிரா.. தென்றலை பாத்துட்டேன்.. ரெண்டு பேரும் இப்போ மேல வர்றோம்..!!” கீழிருந்து பதிலுக்கு கத்தி பதில் சொன்னான் சிபி.

“ம்ம்.. பாத்து கவனமா மேல வாங்க..!!”

39

ஆதிரா அவ்வாறு கீழே குனிந்து சொல்லிக் கொண்டிருந்தபோதுதான்.. அவளுக்கு நெருக்கமாக அந்த வித்தியாசத்தை உணர்ந்தாள்.. அவளது பின்னங்கழுத்தில் படர்ந்த அந்த உஷ்ணத்தை உணர்ந்தாள்.. யாரோ அருகில் இருந்து மூச்சு விடுவது போல..!! மார்புக் கூட்டுக்குள் இப்போது மெலிதாக ஒரு கிலி பரவ ஆரம்பிக்க.. கொஞ்சம் கொஞ்சமாய் தனது தலையை திருப்பினாள்..!! அவளது முதுகுக்கு பின்புறமாக.. மிக மிக அருகாக.. இவளையே உற்றுப் பார்த்தவாறு அது நின்று கொண்டிருந்தது.. அந்த சிவப்பு அங்கி போர்த்திய உருவம்..!!

“ஆஆஆஆஆஆஆஆ..!!!!!!”

ஆதிராவின் அலறல், மேலேறிக் கொண்டிருந்தவர்களின் காதில் விழுந்தது..!! அதைத்தொடர்ந்து.. ‘டங்.. டணார்.. டங்க்க்க்க்..’ என்ற ஓசையுடன்.. பாறைகளில் அங்குமிங்கும் மோதி மோதி.. அந்த டார்ச்லைட் மேலிருந்து பறந்து வந்தது.. அதன்பிறகும் கீழிருந்த பாறைகள் சிலவற்றில் மோதி, குழலாற்றை நோக்கி விர்ரென வீழ்ந்தது..!! சிபி இப்போது ஒரு உச்சபட்ச பதற்றத்துக்கு உள்ளானான்.. அண்ணாந்து பார்த்து பெரிதாக அலறினான்..!!

“ஆதிராஆஆஆ..!!!”

ஆதிராவிடம் இருந்து எந்த பதிலும் இல்லை..!! இன்னுமே அதிகமாக பதறி துடித்தவன்.. தென்றலை இழுத்துக்கொண்டு அவசரஅவசரமாய் மேலேறினான்.. ‘ஆதிராஆஆ.. ஆதிராஆஆ..’ என்று இடைவிடாமல் கத்திக்கொண்டே மேலேவந்தான்..!!

மலைச்சரிவில் இருந்து இருவரும் நிலப்பரப்புக்கு வந்தனர்..!! ஆதிரா நின்றிருந்த இடம் இப்போது வெறுமையாக காட்சியளித்தது.. மிரட்சி பொங்குகிற முகத்துடன், சிபி அந்த இடத்தை சுற்றிச்சுற்றி பார்த்தான்.. கண்ணுக்கெட்டிய தூரம் வரை யாரையும் காணோம்..!! இருதயத்தில் வேதனையுடனும், இயலாமை உணர்வுடனும் இங்குமங்கும் ஓடினான்.. மனைவியின் உருவம் காண துடித்தான்..!!

“ஆதிராஆஆஆ..!!! ஆதிராஆஆஆ..!!!” – அலறிக்கொண்டே இருந்தான்.

அதே நேரம்.. அங்கிருந்து சற்று தூரத்தில்.. அடர்ந்தும், இருண்டும் போயிருந்த வனத்துக்குள்.. உயர உயரமாய் நெருக்கமாக வளர்ந்திருந்த காட்டு மரங்களுக்கு இடையே.. அந்த சிவப்பு அங்கி போர்த்திய உருவம் நிதானமாக சென்றுகொண்டிருந்தது..!! அந்த உருவத்தின் தோளில் மயக்கமுற்ற நிலையில் ஆதிரா வீழ்ந்திருந்தாள்..!!

வானிலிருந்த வெண்ணிலவின் மசமசப்பான வெளிச்சத்தில்.. அந்த உருவத்தின் முன்பக்கம் இப்போது சற்றே தெளிவாக தெரிந்தது..!! முகத்தை தவிர மிச்ச பாகங்களை சிவப்பு அங்கியே மூடியிருந்தது.. முகத்திலுமே கற்றை கற்றையாய் கூந்தல் மயிர்கள் வழிந்தன.. அந்த கூந்தல் கற்றைகளுக்கு இடையே சற்று உற்றுப்பார்த்தால்.. அது தெளிவாக தெரிந்தது.. அடர்த்தியான மீசை..!!!!

ஒரு ஆணின் முகம் அது..!!