மதன மோக ரூப சுந்தரி – 5 15

ஆற்றுமணலை நீள்வாக்கில் குவித்து கரை அமைத்துக்கொண்டு.. ஆதிராவும், தாமிராவும் எதிரெதிரே அமர்ந்து கொள்வார்கள்.. தாமிராவின் கையில் ஒரு சிறிய துணித்திரி இருக்கும்..!!

“திரித்திரித்திரி பொம்முத்திரி..
திரிக்காலடி பொம்முத்திரி..
காசுகொண்டு பொம்முத்திரி..
கடையிலகொண்டு பொம்முத்திரி..!!”

என்று தாமிரா மழலைக்குரலில் பாடிக்கொண்டே.. வெண்முத்துப் பற்கள் தெரிய அழகாக சிரித்தவாறே.. கையிலிருக்கிற திரியை அந்த மணற்கரைக்குள் நுழைத்து.. நெட்டுவாக்கில் முன்னும் பின்னுமாக அலைந்து..

“நாலுகரண்டி நல்லெண்ணை..
நாப்பத்தொரு தீவட்டி..
கள்ளன் வாறான் கதவடை..
வெள்ளச்சி வாறாள் விளக்கேத்து..
வாறாரய்யா சுப்பையா..
வழிவிடம்மா மீனாட்சி..!!”

பாடல் முடிகிற சமயத்தில்.. மணற்கரையின் ஏதோ ஒரு இடத்தில் அந்தத்திரியை மறைத்து வைப்பாள்..!! கைகளை அகலமாக விரித்து, விரல்களை ஒன்றோடொன்று கோர்த்துக்கொள்ளும் ஆதிரா.. அந்த நீளமான மணற்கரையில் எவ்விடத்தில் திரி ஒளிந்திருக்கலாம் என்பதை உத்தேசமாக முடிவு செய்து.. அந்த இடத்தை விரித்த கைகளால் பொத்துவாள்..!!

“ஹாஹாஹாஹா..!! திரி அங்க இருக்குன்னு நெனச்சுட்டியா..?? அது.. இங்க இருக்கு..!! ஹாஹாஹாஹா..!!”

இவளைப்பார்த்து குட்டித்தாமிரா கைகொட்டி சிரித்தது.. இன்னுமே ஆதிராவுக்கு நன்றாக நினைவிருக்கிறது..!!

அது ஒருவகையான தேடுதல் விளையாட்டு..!! தங்கை ஒளித்துவைத்த துணித்திரியை தேடியவள்.. இப்போது தங்கையையே தேடுகிற மாதிரியான சூழ்நிலை.. விதியை நினைத்து நொந்துகொண்டாள் ஆதிரா..!!

ஆதிராவின் குடும்பத்தினருக்கு அகழியில் மிகுந்த மரியாதை உண்டு..!! அவளும், சிபியும் கோயிலை நோக்கி நடக்கும்போதே.. வழியில் எதிர்ப்பட்ட நிறையபேர் இவர்களை கையெடுத்து கும்பிட்டு வணங்கினர்.. இவர்களும் ஒரு புன்னகையுடனே எல்லோருக்கும் பதில் வணக்கம் வைத்தவாறு, கோயில் வாசலுக்கு நடந்தனர்..!! கோயில் வாசலை அடைந்ததும்.. பொங்கல் வைத்துக் கொண்டிருந்த பெண்கள் ஆதிராவை சூழ்ந்து கொண்டனர்.. ஆளாளுக்கு அவளிடம் மரியாதையாகவும், ப்ரியத்துடனும் பேசினர்..!!

“ஆதிராம்மா.. நல்லா இருக்கியாம்மா..?? அப்பா அம்மாலாம் வரலையா..??”

“எப்ப வந்த ஊர்ல இருந்து..?? எங்களைலாம் ஞாபகம் வச்சிருக்கியா..??”

“மைசூர் மகாராணிக்கு இந்த மலைக்கிராமம் மறந்து போச்சாக்கும்..?? அங்கேயே கெடந்தா எப்படி.. அடிக்கடி இங்கிட்டு வந்துட்டுப் போனாத்தான நல்லாருக்கும்..??”

“அடையாளம் தெரியுதா என்னய..?? சிட்டு இருக்காள்ல.. அவளுக்கு சின்னம்மா நானு..!!”

அன்புடன் அவர்கள் கேட்ட கேள்விக்கெல்லாம்.. அடக்கமாக பதில் சொல்லிக் கொண்டிருந்தாள் ஆதிரா..!! மனைவிக்கு கிடைக்கிற மரியாதையை.. ஓரமாக நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான் சிபி..!!

ஆதிரா அங்கேயே சிறிதுநேரம் செலவழித்தாள்.. அம்மனுக்கு பொங்கல் வைக்கிற அந்தப் பெண்களுடன் கலந்து கொண்டாள்..!! கருங்கல் அடுப்பில்.. வெண்கலப் பானையில்.. பச்சரிசிப் பொங்கல் பொங்க.. அதை குலவையிட்டு கிளறும் பெண்கள்..!! சென்ற வருடம், தானும் தனது தங்கையும் ஒன்றாக சேர்ந்து பொங்கல் வைத்தது.. ஆதிராவின் நினைவுக்கு வந்தது..!!

அவர்கள் சென்ற கொஞ்ச நேரத்திலேயே.. முகிலன் தனது குடும்பத்தாருடன் காரில் வந்து இறங்கினான்..!! அவனுடைய தலைமையில்தான் இந்த பொங்கல் திருவிழாவே நடைபெறுகிறது.. திருவிழாவுக்கான செலவில் பெரும்பங்கு அவனுடையது..!! இவர்களுக்கு கிடைத்ததை விட இரண்டு மடங்கு மரியாதையும், வரவேற்பும்.. முகிலனுக்கும், அவனது குடும்பத்தினருக்கும் கிடைத்தது..!! கோயில் தர்மகர்த்தாவும், இன்னபிற ஊர்த்தலைவர்களும்.. கார் நிறுத்தின இடத்திற்கே ஓடிச்சென்று அவர்களை வணங்கி வரவேற்றனர்..!!

அங்கையற்கண்ணியும், யாழினியும் ஆதிராவை அணுகி அன்புடன் பேசினர்.. நிலவன் ஒரு புன்னகையுடன் வணக்கம் சொன்னதோடு சரி.. முகிலன் மட்டும் இவளை முறைப்பாக பார்த்தவாறே சென்றான்.. ஆதிராவிடமும், சிபியிடமும் ஒருவார்த்தை கூட பேசவில்லை..!!