மதன மோக ரூப சுந்தரி – 5 15

“ப்பட்டாடார்ர்ர்ர்…!!!!!”

கதவு திறந்துகொண்டது.. கைத்துப்பாக்கியுடன் மணிமாறன் திரும்பினார்.. வாசலில் தோன்றிய புலி, அங்கிருந்தே ‘சர்ர்ர்ர்’ரென இவர் மீது பாய்ந்தது..!! புலியோடு சேர்ந்து தரையில் சரிந்தார் மணிமாறன்..!!

“ம்ம்க்க்க்ம்ம்.. ம்ம்க்க்க்ம்ம்.. ம்ம்க்க்க்ம்ம்..!!”

புலியை பார்த்த அதிர்ச்சியில், ஆதிரா மிரண்டுபோய் சப்தம் எழுப்பும்போதே.. பதட்டத்துடன் துப்பாக்கியின் விசையை இழுத்தார் மணிமாறன்..!!

“ட்ட்டுமீல்..!!!”

பெரும் சப்தத்துடன் துப்பாக்கி வெடித்தது.. வெளிப்பட்ட தோட்டா புலியை தாக்காமல், சுவரை பெயர்த்தது..!!

“க்க்க்கர்ர்ர்ர்ர்..”

கோபமாக உறுமிய புலி தனது வலுவான காலை தூக்கி மணிமாறனை ஓங்கி அறைந்தது.. அறைந்த வேகத்தில் ஐந்தடி தூரத்தில் போய் விழுந்தார் மணிமாறன்.. அவரது கையிலிருந்த துப்பாக்கி எங்கோ பறந்தது..!! வெலவெலத்துப்போன மணிமாறன் சரக்கென எழுந்தார்.. படிக்கட்டில் அவசரமாய் ஏறி தடதடவென வெளியே ஓடினார்..!!

நடந்ததை பார்த்த ஆதிரா திக்கித்துப்போய் அமர்ந்திருந்தாள்.. கத்தக்கூட தோன்றாமல் வாயடைத்துப்போய் உறைந்திருந்தாள்..!! அந்த புலி இப்போது மெல்ல ஆதிராவின் பக்கம் திரும்பியது.. கூர்மையான பற்களை வெளிக்காட்டி “க்க்க்கர்ர்ர்ர்ர்..” என்று ஒரு கர்ஜனை செய்தது..!!

பிறகு.. அவளை கண்டுகொள்ளாமல் திரும்பி, மெதுவாக படியேறியது.. வாசலை அடைந்ததும் கொஞ்சம் கொஞ்சமாய் வேகமெடுத்து ஓடியது.. சற்று தொலைவில் ஓடுகிற மணிமாறனை நாலுகால் பாய்ச்சலில் விரட்ட ஆரம்பித்தது..!! நீளமான வராண்டா.. முகத்தில் பீதியுடன் ஓடுகிற மணிமாறன்.. அவரை வெறியுடன் விரட்டுகிற காட்டுப்புலி.. இருவரையும் ஓடவிட்டு அவர்களுக்கு பின்னால், காற்றில் படபடக்கிற சிவப்பு அங்கியுடன் நிதானமாக நடந்துசெல்கிற அந்த உருவம்..!!

அறைக்குள் இருந்த ஆதிராவுக்கு ஐந்தாறு வினாடிகள் கழித்தே மூச்சு வந்தது.. கடைசி ஓரிரு நிமிடங்கள் நடந்த சம்பவங்களை கிரஹித்துக் கொள்ளவே அவளுக்கு சிறிது நேரம் பிடித்தது.. காட்டுப்புலி ஒன்று வீட்டுக்குள்ளேயே நுழைந்து தாக்குதல் நடத்துவதை, நம்புவதற்கே மிக கடினமாக இருந்தது..!!

அவளுடைய மூளை இப்போது சற்றே சுறுசுறுப்பாகவும்.. அடுத்து என்ன செய்யலாம் என்று அவசரமாக யோசித்தாள்.. அந்த கயவனிடம் இருந்து தப்பிக்க இதை ஒரு வாய்ப்பாக கருதினாள்..!! அப்போதுதான் அவளுடைய பார்வையில் அது பட்டது.. அறைக்குள்ளேயே வந்து புலி செய்த அட்டகாசத்தில், அலமாரி மீது ஏற்றப்பட்டிருந்த ஒரு மெழுகுவர்த்தி, இப்போது தரையில் வீழ்ந்து சுடர்விட்டுக் கொண்டிருந்தது..!!

உடம்பை முறுக்கி ஒரு துள்ளு துள்ளி, நாற்காலியை விட்டு தரையில் விழுந்தாள் ஆதிரா.. கை கால்களை உதறி உதறி, அந்த மெழுகுவர்த்தியின் அருகே நகர்ந்தாள்..!! தனது பின்புற கைக்கட்டை எரிகிற தீச்சுடரில் காட்டினாள்.. செல்லோடேப் இளக ஆரம்பித்தது.. ஆதிராவின் கையும் நெருப்பில் பொசுங்கியது.. வாய்விட்டு அலறவேண்டும் போல இருந்தது.. முடியவில்லை.. வேதனையை பொறுத்துக்கொண்டு கையை நெருப்பில் வாட்டினாள்..!!

கைகளுக்கு சுதந்திரம் கிடைத்ததுமே, வாயில் ஒட்டியிருந்த செல்லோடேப்பை அவசரமாய் பிய்த்து எடுத்தாள்.. அத்தனை நேரம் அடக்கி வைத்த வலியையும், கிலியையும் வெளிப்படுத்துகிற மாதிரி..

“ஆஆஆஆஆஆஆஆ..!!!!!!” என்று அண்ணாந்து பார்த்து வாய்விட்டு அலறினாள்.

ஒருசில விநாடிகள்தான்.. பிறகு மீண்டும் ஒரு பரபரப்பு வந்து அவளை தொற்றிக்கொண்டது..!! கால்க்கட்டை கைகளாலேயே சரசரவென பிரித்தாள்.. படிக்கட்டை அடைந்து தபதபவென மேலேறினாள்.. காரிடாரில் வெளிப்பட்டு தடதடவென ஓடினாள்..!! வீட்டைவிட்டு வெளியேறுகிற வழி எதுவென்று தெரியவில்லை.. புடவையை ஒருகையால் உயர்த்தி பிடித்துக்கொண்டு, உத்தேசமாக அந்தவழியில் ஓடினாள்..!!

காரிடாரை விட்டு வெளியேவந்து இடப்புறமாக திரும்ப..

“ஆஆஆஆஆஆஆஆ..!!!!”

எங்கிருந்தோ பறந்து வந்து, இவள் காலடியில் விழுந்தார் மணிமாறன்.. அவருடைய முகம், உடம்பெல்லாம் ரத்த விளாறுகள்.. அவரை தொடர்ந்து பாய்ந்து, அவர் மீதே வந்து விழுந்தது அந்த புலி..!!

“ஆஆஆஆஆஆஆஆ..!!!!” – மிரண்டுபோய் புறங்கையால் வாய்பொத்தி அலறினாள் ஆதிரா.

புலியை உதறித்தள்ளி, கடகடவென தரையில் உருண்டார் மணிமாறன்.. “க்க்க்கர்ர்ர்ர்ர்..” என்று புலி ஆவேசமாக சிலிர்க்க, அவர் தடுமாற்றமாக எழுந்தார்.. ஒற்றைக்காலை இழுத்து இழுத்து வேறுதிசையில் ஓடினார்.. புலி இப்போது நிதானமாக அவரை பின்தொடர்ந்தது..!! எத்தனையோ உயிர்களை, புன்னகை தவழ்கிற முகத்துடன், கொஞ்சம் கொஞ்சமாய் பறித்தவர்.. இப்போது தனது உயிரை காப்பாற்றிக்கொள்கிற உத்வேகத்தில், கிலிபிடித்த முகத்துடன் அங்கும் இங்கும் ஓடித்திரிந்தார்..!!

ஆதிராவுக்கு உடம்பெல்லாம் ஒரு வெடவெடப்பு..!! வீட்டின் பிரதான கதவு சற்று தொலைவில் தெரிந்தது.. அந்தக்கதவை நோக்கி வேகமாக ஓடினாள்..!! அவள் அவ்வாறு ஓடும்போதே.. அவ்வப்போது ‘சர்ர்ர் சர்ர்ர்’என இடையில் புகுந்து ஓடினார் மணிமாறன்.. அவர்பின்னால் உறுமிக்கொண்டே பாய்ந்தது வரிப்புலி..!! ஆதிரா ‘ஆஆ.. ஆஆ..’ என்று அவ்வப்போது பதறியடித்து கத்திக்கொண்டே.. புலியின் பாய்ச்சலுக்கு விலகி, ஏதாவது சோபா அலமாரி என்று பதுங்கி பதுங்கியேதான் அந்தக்கதவை சென்றடைய முடிந்தது..!!

பிரதான கதவு தாழிடப்பட்டிருந்தது.. ஆதிராவால் திறக்க முடியவில்லை..!! கைகள் ரெண்டையும் அகலவிரித்து, ‘படார்ர்ர் படார்ர்ர்’ என கதவை ஓங்கி தட்டினாள்..!!

“ஹெல்ப்ப்ப்.. ஹெல்ப்ப்ப்..!!!! யாராவது ஹெல்ப் பண்ணுங்க ப்ளீஸ்..!!!” என்று அழுகையோடு அலறினாள்.

வீடு இப்போது ரணகளம் ஆகியிருந்தது.. அழகாக அடுக்கி வைத்திருந்த பொருட்கள் எல்லாம் தாறுமாறாக இறைந்து கிடந்தன.. உயிருக்கு போராடி அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்தார் மணிமாறன்.. அவரை விரட்டி விரட்டி வேட்டையாடிக் கொண்டிருந்தது அந்த காட்டுவேங்கை..!! கதவை தட்டி தட்டி சோர்ந்துபோன ஆதிரா.. வேறென்ன செய்வதென்று எதுவும் புரியாமல்.. அந்தக்கதவில் சாய்ந்தவாறு அப்படியே தரையில் சரிந்தாள்..!! தனது நிலையை எண்ணி.. வாய்விட்டு ‘ஓ’வென்று கத்தினாள்..!!

அவள் அவ்வாறு கத்திக்கொண்டிருக்கும்போதே..

“ஆஆஆஆஆஆ..!!”

என்று அலறியபடியே ஓடிவந்து கதவில் மோதி உருண்டார் மணிமாறன்.. ஆதிராவுக்கு மிக அருகேதான் விழுந்து கிடந்தார்..!! பத்தடி தூரத்தில்.. சோபாவில் விருட்டென ஏறிய புலி.. அப்படியே நாலுகால் பாய்ச்சலாக இவர்களை நோக்கி பாய்ந்தது..!! பதறிப்போன ஆதிரா இருகைகளாலும் முகத்தை பொத்திக்கொள்ள.. அந்த புலி சரியாக மணிமாறனின் கழுத்தை வந்து கவ்வியது.. அவரை அப்படியே அலாக்காக தூக்கி அந்தரத்தில் விசிறியெறிந்தது..!!

“ச்ச்சலீர்ர்..!!!!!!”

கண்ணாடி ஜன்னலை உடைத்துக்கொண்டு வீட்டுக்கு வெளியே போய் விழுந்தார் மணிமாறன்.. ஒருநொடி கூட தாமதிக்காமல் அவர் பின்னாலேயே பாய்ந்தது காட்டுப்புலி..!!

ஆதிராவின் படபடப்பு குறைய சற்று நேரமானது..!! மார்புகள் சர்சர்ரென விம்மி பதற.. கொஞ்சம் கொஞ்சமாய் கைகளை விலக்கி கண்கள் திறந்து பார்த்தாள்..!!

“ஆஆஆஆ.. ஆஆஆஆ..!!”

வீட்டுக்கு வெளியே மணிமாறனின் அலறல்.. சன்னமாக தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தது..!! ஆதிரா மெல்ல எழுந்தாள்.. பொறுமையாக அடியெடுத்து வைத்தாள்.. உடைந்துபோன ஜன்னலின் வழியாக வெளியே பார்த்தாள்..!!

இரவு நேரத்து மங்கலான வெளிச்சம்.. வீட்டை சுற்றி வளர்ந்திருந்த கோரைப்புற்கள்.. அந்தப்புற்களில் அங்குமிங்கும் சோர்வாக உருண்டோடிய மணிமாறனை.. பாய்ந்து பாய்ந்து குதறிக்கொண்டிருந்தது அந்த புலி..!! “க்க்க்கர்ர்ர்ர்ர்.. க்க்க்கர்ர்ர்ர்ர்..” என்று உறுமியது.. அவர்மேலே விழுந்து கால்களால் பிறாண்டியது.. வாயால் இறுகக்கவ்வி தூக்கி விசிறியது.. சற்று தள்ளிப்போய் விழுபவர் மீது, சர்ரென மீண்டும் பாய்ந்தது.. தலையை ஆட்டி ஆட்டி கடித்து குதறியது..!!

ரத்தத்தை உறையவைக்கிற மாதிரியான கோரக்காட்சி.. ஆனால் அதைப்பார்த்த ஆதிராவிடம் அதற்குண்டான பதைபதைப்பு இப்போது இல்லை..!! அடுத்தடுத்து வரிசையாக நடந்த திகில் சம்பவங்களால்.. அவள் மிகவும் களைத்துப் போயிருந்தாள்..!! முகத்தில் எந்தவித பதற்றமும், சலனமும் காட்டாமல்.. மணிமாறன் அனுபவிக்கிற சித்திரவதைகளை இங்கிருந்து வெறித்து பார்த்தாள்..!!