மதன மோக ரூப சுந்தரி – 5 15

அத்தியாயம் 21

அடுத்தநாள் காலை அகழி கிராமம் அல்லோகலப்பட்டுக் கொண்டிருந்தது.. ‘விர்ர்ர்ர்.. விர்ர்ர்ர்..’ என காவல்துறை வாகனங்கள் ஊருக்குள் புழுதி கிளப்பி பறந்து கொண்டிருந்தன..!! நடந்த விஷயத்தை கேள்விப்பட்டு ஊர்ஜனங்கள் அதிர்ச்சியில் உறைந்து போயிருந்தனர்.. ஆங்காங்கே கூட்டம்கூட்டமாய் சேர்ந்து ரகசியக்குரலில் பேசிக்கொண்டனர்..!!

“பச்சைப்புள்ள மாதிரி இருந்துக்கிட்டு.. இப்பிடியொரு பாதகத்தை பண்ணிருக்கானே இந்தப் பாவிப்பய..!! இவனுக்குலாம் இப்பிடித்தான் வேணும்..!!”

“எனக்கு ஆரம்பத்துலயே அந்தப்பய மேல ஒரு டவுட்டப்பா.. அவன் முழியுஞ்சரியில்ல.. பேச்சுஞ்சரியில்ல..!! இப்ப இல்ல.. ரொம்பநாளுக்கு முன்னாடியே என் பொஞ்சாதிட்டகூட சொல்லிட்டு இருந்தனப்பா..!!”

“ஐயயே அந்தப்படத்தை சொல்லல..!! செவப்பு ரோஸான்னு பழைய படம்.. கமலும் சிரிதேவியும்..!!”

“மாட்டுக்கு இருக்குற மாதிரி.. பேய்க்கும் பெருசா கொம்பு இருக்குமா தாத்தா..??”

“குறிஞ்சி பேரைச்சொல்லி ஆட்டம் போட்டுட்டு இருந்திருக்கான்.. ஆடுனது போதும்னு அவளே வந்து தூக்கிட்டு போய்ட்டா..!! கொள்ளைல போக..!!”

பங்குனிப் பொங்கலின் இறுதிநாளன்று.. ஊர்மக்களின் தலையில் இடியாக வந்து இறங்கியிருந்தது அந்த சம்பவம்..!! திருவிழாவை தொடர்ந்து நடத்துவதா, வேண்டாமா என்பதே கேள்விக்குறியாக இருந்தது..!! ஊர் முக்கியஸ்தர்களின் கூட்டம், உடனடியாக அதிகாலையிலேயே கோயிலில் கூடியது.. ஆளாளுக்கு ஏதேதோ சொல்லி பெரும் சலசலப்புக்கு பிறகு..

“என்ன ஆனாலும் சரி.. திருவிழாவை நல்லபடியா நடத்தியே ஆகணும்.. இல்லனா சாமிக்குத்தம் ஆய்ரும்..!! அப்புறம் ஏதாவது ஒண்ணுன்னா எங்கிட்ட ஓடியாரக்கூடாது சொல்லிட்டேன்..!!” என்று முகிலன் கோவத்தை உதிர்த்த பின்னர்..

“ஐயா சொல்றதுதான் சரி.. என்னதான் இருந்தாலும் ஆத்தா கோவத்துக்கு ஆளாவக்கூடாதுல..!!” என்று ஊர்மக்கள் ஒப்புக்கொண்டனர். ஆனபோதிலும், மனதுக்குள் சந்தோஷம் என்பது துளியும் இல்லாமலே, கடைசிநாள் விழாவுக்கு தயாராயினர்.

விஷயம் காட்டுத்தீயாக எல்லா ஊருக்கும் பரவியிருந்தது.. அன்றைய மாலை செய்தித்தாள்களில், முதல்பக்க ஒதுக்கீடுக்கு சென்னையில் விவாதம் நடந்துகொண்டிருந்தது..!! ஆதிராவின் வீட்டுக்கு முன்பாக ஐந்தாறு பத்திரிக்கையாளர்கள் குழுமியிருந்தனர்.. கதவு எப்போது திறக்கும் என்று ஆவலுடன் காத்திருந்தனர்.. கணவனுடன் ஆதிரா வெளிப்படவும், ஓடிச்சென்று அவர்களை சூழ்ந்துகொண்டனர்.. இனிப்புப்பண்டத்தை ஈ மொய்ப்பது மாதிரி..!! கேள்விக்கணைகளால் அவளை துளைத்தெடுத்தனர்..!!

“மிஸ் ஆதிரா.. அந்த சைக்கோட்ட நீங்க எப்படி மாட்டுனிங்கன்னு கொஞ்சம் தெளிவா சொல்ல முடியுமா..??”

“அவனோட டெட்பாடி இன்னும் கெடைக்கலை.. அதைப்பத்தி நீங்க என்ன நெனைக்கிறீங்க..??”

“உயிர் போகப்போகுதுன்ற நெலமைல உங்க உணர்வுகள் எப்படி இருந்துச்சுன்னு தெரிஞ்சுக்கலாமா..??”

“அவர் உங்களை பாலியல் பலாத்காரம் செஞ்சிட்டதா சொல்றாங்களே.. அது உண்மையா..??”

11

பத்திரிக்கையாளர்களின் கேள்விகள் சிபிக்கு எரிச்சல் மூட்டின..!!

“ஹலோ.. அவ இப்போ யார்ட்டயும் பேசுற நெலமைல இல்ல.. பயங்கர ஷாக்ல இருக்கா.. அவளை கொஞ்சம் நிம்மதியா இருக்கவிடுங்க.. ப்ளீஸ்..!! புரிஞ்சுக்கங்க.. உங்களுக்கு ரிப்போர்ட் வேணும்னா போலீஸை காண்டாக்ட் பண்ணுங்க..!! வழிவிடுங்க.. ப்ளீஸ்ஸ்ஸ்..!!”

சூழ்ந்திருந்தவர்களை சமாளித்து.. ஆதிராவை அணைத்தவாறு பாதுகாப்பாக கூட்டிச்சென்று காரில் ஏற்றினான் சிபி.. அவசரமாய் காரை ஸ்டார்ட் செய்து, சர்ரென வேகமெடுத்து கிளப்பினான்..!!

“மேடம்.. ஒரே ஒரு கேள்வி மேடம்.. ஒரே ஒரு கேள்வி.. ஜஸ்ட் ஆன்சர் திஸ்..!!” லஜ்ஜையில்லாமல் காரின் பின்னால் ஓடினார்கள் பத்திரிக்கையாளர்கள்.

“ஹ்ம்ம்ம்.. எங்கிட்ட கேட்டா எல்லாக்கதையும் புட்டுப்புட்டு வைப்பேன்.. எந்தப்பய கேக்குறான்..!!” சலிப்பாக சொன்னது, வீட்டுக்கு வெளியே தனியே அமர்ந்து பல்குத்திக் கொண்டிருந்த பெருசு ஒன்று.

கார் மிதமான வேகத்தில் சென்றுகொண்டிருந்தது.. கவனத்தை சாலையில் செலுத்தி காரோட்டிக்கொண்டிருந்தான் சிபி.. கண்களை மூடி சீட்டில் தலை சாய்த்திருந்தாள் ஆதிரா.. நேற்றிரவு நடந்த சம்பவத்தின் தாக்கத்தில் இருந்து இன்னுமே அவள் மீண்டிருக்கவில்லை.. இருதயத்தில் இப்போதும் அந்த பதைபதைப்பு மிச்சமிருந்தது..!!

“அப்பா என்ன சொன்னாரு..??” கண்களை திறக்காமலே கணவனிடம் கேட்டாள் ஆதிரா.

“என்ன சொல்வாரு.. உடனே கெளம்பி மைசூர் வர சொன்னாரு..!! என்னைத்தான் ரொம்ப திட்டினாரு..!!” சாலையில் இருந்த கவனம் சிதறாமலே சொன்னான் சிபி.

“ம்ம்ம்..!!”

“இந்த போலீஸ், ப்ரஸ்லாம் பெரிய டார்ச்சர்தான் ஆதிரா.. கொஞ்சம் பொறுத்துக்கோ.. சரியா..??” சிபியின் குரலில் ஒரு கனிவு.

“ம்ம்.. சரித்தான்..!!”

மேலும் பத்துநிமிட பயணத்திற்கு பிறகு.. கார் மணிமாறனின் வீட்டை வந்தடைந்தது..!! வீட்டுக்கு வெளியே.. காம்பவுண்ட் கேட்டை சுற்றி கணிசமான அளவு ஊர்மக்கள் கூடியிருந்தனர்.. மணிமாறனின் குரூரபுத்திக்கு தங்களது குடும்பப்பெண்களை காவு கொடுத்திருந்த சொந்தபந்தங்கள், அவரை கரித்துக் கொட்டினர்.. காறி உமிழ்ந்தனர்..!!

ஆதிராவும், சிபியும் கூட்டத்தை விலக்கி வீட்டுக்குள் நுழைந்தனர்.. உள்ளே நிறைய காக்கி சட்டைகளை காணமுடிந்தது..!! காக்கிசட்டை அணியாத மற்றொரு குழு.. நேற்று மணிமாறன் கடித்துக்குதறப்பட்ட புல்வெளியை ஆய்வு செய்துகொண்டிருந்தது..!! ஊர்மக்களை உள்ளேவிடாமல் தடுத்துக் கொண்டிருந்த காவலர்.. ஆதிராவை மட்டும் அடையாளம் கண்டுகொண்டு உள்ளே அனுமதித்தார்..!!

“இன்ஸ்பெக்டர் தோட்டத்துல இருக்காரு மேடம்..!!” என்றார்.

ஆதிராவும் சிபியும் கோரைப் புற்களில் கால்பதித்து நடந்து.. வீட்டுக்கு பின்புறமாக சென்றனர்..!! தோட்டத்தில் இரைச்சல் இன்னும் அதிகமாக இருந்தது.. மணல் அள்ளுகிற பொக்லைன் இயந்திரம் பிரதானமாக காட்சியளித்தது..!! காற்றில் ஒரு துர்நாற்றம்.. தோட்டத்து பூஞ்செடிகள் எல்லாம் பிடுங்கி எறியப்பட்டிருந்தன.. கூர்மையான தனது கரத்தால் தோட்டத்து மண்ணை, தோண்டி தோண்டி அள்ளிக்கொண்டிருந்தது பொக்லைன்..!! ஏற்கனவே கண்டெடுக்கப்பட்ட ஏழெட்டு பிணங்கள் ஓரமாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.. அழுகி, சிதைந்துபோன உயிரற்ற உடல்கள்..!!

“இனிமே இதுதான் உன் இடம்.. வேற எங்கயும் போகணும்னு நெனைக்க கூடாது..!! சமத்தா இங்கயே இருக்கணும்.. என்கூடவே இருக்கணும்.. எப்போவும்..”

ஆதிரா மணிமாறனை முதன்முதலாக சந்தித்தபோது.. அவர் தோட்டத்து செடிகளுடன் பேசிக்கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது..!! அதெல்லாம் செடிகளிடம் பேசினாரா.. அல்லது.. செடிகளுக்கு அடியில் உறங்கிய பிரேதங்களிடம் பேசினாரா என்று ஆதிராவுக்குள் இப்போது ஒரு கேள்வி..!!

சுற்றிநின்ற காவலர்களுக்கு மையமாக, மஃப்டி உடையில் காட்சியளித்தார் இன்ஸ்பெக்டர் வில்லாளன்.. முகத்தை சீரியஸாக வைத்துக்கொண்டு, மும்முரமாக வேலையில் ஈடுபட்டிருந்தார்.. எல்லோருக்கும் ஏதேதோ ஆணையிட்டுக் கொண்டிருந்தார்..!! அவரிடம் ஆதிராவின் வருகையை ஒரு காவலர் உரைக்கவும்.. உடனே இவர்கள் பக்கமாக திரும்பிப் பார்த்தார்..!!

“ஒருநிமிஷம் இருங்க.. வந்துடுறேன்..!!”

என்றுவிட்டு மீண்டும் அந்தப்பக்கம் திரும்பிக்கொண்டார்.. தனக்கு கீழ் வேலை பார்க்கும் காவலர்களுக்கும், பொக்லைன் இயந்திரத்தை இயக்க வந்திருப்பவர்களுக்கும், மேலும் சில கட்டளைகளை பிறப்பித்தார்..!! அவர் சொன்ன ஒருநிமிடம் முடிவதற்கு முன்பாகவே.. ஆதிராவையும், சிபியையும் வந்து அணுகினார்..!!

“வாங்க.. உள்ள போய் பேசலாம்..!!”

வில்லாளன் இருவரையும் வீட்டுக்குள் அழைத்து சென்றார்.. மூவரும் ஹாலுக்குள் பிரவேசித்து உள்ளே நடந்தனர்..!! இடப்புறமாக தெரிந்த அந்த அறைவாசலை அடைந்ததும்..

“நீங்க இங்கயே இருங்க.. அவங்கட்ட தனியா பேசணும்..!!”

என்று சிபியை அறை வாசலிலேயே தடுத்து நிறுத்தினார் வில்லாளன்.. ஆதிராவை மட்டும் அழைத்துக்கொண்டு அறைக்குள் நுழைந்தார்..!! அறைக்குள் வேறு யாரும் இல்லை.. வாசலில் மட்டும் சிபியோடு சேர்த்து இன்னும் இரண்டு காவலர்கள்..!! உள்ளே சென்றவர்கள் எதிரெதிர் நாற்காலியில் அமர்ந்துகொண்டனர்.. வில்லாளன் அதிக நேரம் எடுத்துக்கொள்ளாமல் உடனடியாக விஷயத்திற்கு வந்தார்.. விசாரணையை ஆரம்பித்தார்..!!

“ஆர் யூ ஆல்ரைட் நவ்..??” ஆரம்பத்தில் ஒரு சம்பிரதாய கேள்வி.

“ம்ம்.. ஐ’ம் ஓகே நவ்..!!” ஆதிரா உலர்ந்துபோன குரலில் சொன்னாள்.

“ஹ்ம்ம்.. காலைல நீங்க போன்ல சொன்னதுல, நெறைய விஷயம் எனக்கு சுத்தமா புரியலைங்க.. சரி ஏதோ கொழப்பத்துல இருக்கிங்க போலன்னு விட்டுட்டேன்..!! எனக்கு இன்னும் நெறைய டவுட்டு இருக்கு.. அதான் இப்போ நேர்லயே பாத்து பேசிறலாம்னு ஆள்விட்டு வரச்சொன்னேன்..!! இப்போ கேக்கலாமா..??”

“ம்ம்.. கேளுங்க..!!”

“மொதல்ல.. அந்தாளு எப்படி உங்களை மயக்கமாக்குனான்..??”

“கைல ஏதோ ஸ்ப்ரே வச்சிருந்தாரு..!!”

“ஹ்ம்ம்.. மயக்கமாக்கியாச்சு.. வீட்டுக்கு தூக்கிட்டு வந்தாச்சு.. கட்டிப்போட்டாச்சு.. அந்த சீக்ரட் ரூமுக்கு கூட்டுப்போயாச்சு.. கைல கத்தியை எடுத்துக்கிட்டு உங்களை..”

“கத்தி இல்ல.. உளி..!!”

“ஓகே.. கைல உளியை எடுத்துக்கிட்டு உங்களை ஹர்ட் பண்ணவந்திருக்கான்.. கரெக்டா..??”

“ம்ம்.. கரெக்ட்..!!”

“அந்தமாதிரி அவ்வளவு வசமா அவன்கிட்ட மாட்டிக்கிட்டிங்க சரி.. அப்புறம் எப்படி தப்பிச்சிங்க..?? யார் ஹெல்ப் பண்ணா..??”

“அதான் காலைலயே சொன்னனே.. கு..குறிஞ்சிதான் வந்து என்னை காப்பாத்தினா..!!”

“ப்ச்..!!!!”

ஆதிராவின் பதிலைக்கேட்டு உடனடியாக ஒரு சலிப்பை உதிர்த்த வில்லாளன்.. குரலில் ஒரு கடுமையை கூட்டிக்கொண்டு தொடர்ந்து பேசினார்..!!

“இங்க பாருங்க ஆதிரா.. இந்த ஊர்க்காரய்ங்களுக்கு இனிமேயாவது நல்லபுத்தி வரப்போகுதுன்னு, நான்லாம் சந்தோஷமா நெனச்சிக்கிட்டு இருக்கேன்.. நீங்க கூடக்கொஞ்சம் அவய்ங்களை கிறுக்கய்ங்களாக்கிறாதிங்க..!! குறிஞ்சின்லாம் யாருங்கெடையாது.. எல்லாத்தையும் பண்ணிட்டு இருந்தது இந்த சைக்கோப்பயதான்..!! சொல்லுங்க.. என்ன நடந்துச்சுன்னு எதையும் மறைக்காம சொல்லுங்க..!!”

“நடந்ததைத்தான் சொல்லிட்டு இருக்கேன் ஸார்..!!”

“என்ன.. இதா நடந்துச்சு.. அந்தாளு உங்களை டார்ச்சர் பண்ண வந்தப்போ, அந்த குறிஞ்சி வந்து, அந்தாளை அடிச்சுப்போட்டு உங்களை காப்பாத்துனாளா..?? படத்துலலாம் வர்ற மாதிரி..??” வில்லாளனின் குரலில் ஒருவித ஏளனம் தொணித்தது.

“ம்ம்.. ஆமாம்..!! ஆனா அந்தாளை அடிச்சுப்போட்டது குறிஞ்சி இல்ல..” ஆதிரா இயல்பாகவே பேசிக்கொண்டிருந்தாள்.