சுந்தரி மேற்கொண்டு எதுவும் பேசாமல் சுகன்யாவை சுட்டு எரித்துவிடுவது போல் முறைத்தவள், மனதிலிருக்கும் கோபம் முகத்தில் பட்டவர்த்தனமாக தெரிய, தன் புடவை முந்தானையின் முனையை முறுக்கியபடி நின்றாள்.
“ப்ச்ச்ச்… சுந்து நீ சும்மா இரும்மா. சுகா… நீ சொல்ற மாதிரியெல்லாம் சட்டுன்னு கல்யாணத்தை எப்படி நிறுத்தறது? உங்களுக்குள்ள நடந்ததை நீ விவரமா சொன்னாத்தான் மேல என்னப் பண்றதுன்னு நாங்க ஒரு முடிவுக்கு வரமுடியும்.” இதுவரை அமைதியாக சுகன்யா கூச்சலிடுவதை கேட்டுக்கொண்டிருந்த குமாரசுவாமி, மெல்ல பேசினார்.
“அப்பா… அவங்க நிச்சயதார்த்தத்துல குடுத்த பட்டுப்புடவை, தங்கச்செயின் எல்லாத்தையும் பேக் பண்ணி ரெடியா வெச்சிருக்கேன். அந்த பார்சலை அவங்களுக்கு கூரியர்ல அனுப்பிட்டா, விவகாரம் முடிஞ்சுடும். நானும் நிம்மதியா டெல்லிக்குப் போற வேலையைப் பாப்பேன்.
“என்னம்மா இது? நீ படிச்சப் பொண்ணு. இப்படி ஒரே வழியா மொறைப்பா, அர்த்தமேயில்லாமா பேசினா எப்படீடா கண்ணு?”
கனகா பேத்தியை தன்னருகில் இழுத்து உட்காரவைத்துக்கொண்டு அவள் தலையை மெல்ல வருடினாள். இது வரை முறைப்பாக பேசிக்கொண்டிருந்த சுகன்யா, உதடுகள் துடிக்க, எதோ சொல்ல வந்தவள், சொல்லவந்ததை சொல்ல முடியாமல், தன் பாட்டியின் மடியில் தலையைப் புதைத்துக்கொண்டு, உடல் குலுங்க அழ ஆரம்பித்தாள். தன் ஆசை மகள் விம்மி விம்மி அழுவதைக் கண்டதும், சுந்தரியின் பெற்ற வயிறு பற்றி எரிந்தது.
“ரகு நீ எழுந்திருடா. இவ சொல்ற கதையை நாம என்னக் கேக்கறது? இவரோட ஆசை பொண்ணுகூட உக்காந்து அவரு நிதானமா யோசிச்சு ஒரு முடிவுக்கு வரட்டும். இந்தக்கொடுமையையெல்லாம் என்னால பாத்துக்கிட்டு இருக்க முடியாது. சம்பந்தி வீட்டுக்கே போய் என்ன ஏதுன்னு நேர்லேயே ஒரு வார்த்தை கேட்டுட்டு வந்துடலாம்?
சுந்தரியின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்துக் கொண்டிருந்தது. தன் வாழ்க்கையில் வந்ததைப் போன்ற எந்த பிரச்சனையும் தன் பெண்ணின் வாழ்க்கையிலும் வந்துவிடக்கூடாது என அவள் அஞ்சினாள்.
Romba boor adikuringa eppo intha kathai mudiyum pls pls reply