இடைபட்டக் காலங்கள், அவள் மீதான, எனது காதலை அதிகப்படுத்தியிருந்தது! நாங்கள் இருவரும் இன்னும் பக்குவப்பட்டிருந்தோம். வெறும் டீன் ஏஜ் காதல் அல்லது இனக்கவர்ச்சி காதல் அல்ல அது என்பது இருவருக்குமே புரிந்திருந்தது. அவளது பார்வையும், என்னப் பார்க்கும் போது மலரும் முகமும் எனக்கு ஏதோ செய்தி சொன்னது!
ஆனால், ஒரு தடவை ஏமாந்த மனது, அடுத்த முறை ஏமாறத் தயாரில்லாமல், அமைதி காத்தது!
பின் பழைய கண்ணாமூச்சி ஆட்டம், மீண்டும் தொடர்ந்தது!
இந்த ஆட்டம், அக்காவின் திருமணம் வரை தொடர்ந்தது! தாத்தாவின் மரணத்திலும், அக்கா என்னைக் கூப்பிட்டு திட்டிய போது கூட, அவள் கூட இருந்தாள்!
சொல்லப்போனால், அக்கா அருகில் அவள் இருக்கிறாள் என்பதாலேயே, நான் அக்காவை நெருங்க நினைக்கவில்லை!
என் அக்காவோ, திருமணத்தின் போது கூட, அடுத்து உனக்குதாண்டா என்று அவளைப் பார்த்து ஜாடை பேசினாள்! அவளும் வெட்கப்பட்டாற்போல்தான் தோன்றியது எனக்கு!
அவள் கண்களாலேயே ஏதோ எதிர்பார்த்தாள். எனக்கு அது புரியவேயில்லை! கண்டிப்பாக, அவள் பழையபடி, நான் காதல் சொன்னதற்கு ரியாக்ட் செய்ய மாட்டாள். ஆனால், ஏற்றுக் கொள்வாளா?
எவ்வளோ பிரச்சினைகளை ஈசியாக கையாண்டவன், எந்த உணர்வையும் வெளிக்காட்டாதவன், இந்தப் பிரச்சினையையும் கையாளும் வழி தெரியாததால், வழக்கம் போல், உணர்வுகளை மறைத்தேன்!
ஒரு வேளை நான் அக்காவிடமோ அல்லது லாவண்யாவிடமோ மனம் விட்டு பேசியிருந்தால் தீர்வு கிடைத்திருக்கும்! ஆனால் நான், உணர்வுகளை முகமூடி போட்டு மறைத்தேன்.
எனக்குத் தெரியவில்லை!
ஒரு முறை, மிக ஆரம்பத்திலேயே சொன்னதால் ஏமாந்தவன், இந்த முறை சரியான சமயத்தில் சொல்லாததால் ஏமாறப் போகிறேன் என்று!
தகுந்த சமயத்தில் சொல்லப்படாத காதல், எழுதப்படாத ஒரு கவிதையைப் போன்றது!
எனது காதலும், ஒரு எழுதப்படாத கவிதைதான்!
எங்கள் இருவரிடமும் காதல் இருந்தாலும், கூடவே ஒரு தயக்கமும் இருந்தது.
ஒரு தடவை சொல்லி, பின் ரிஜக்ட் செய்ததனால், அவளே வந்து என் காதலை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நான் எதிர்பார்த்தேன்.