அவளுடைய கணிப்பு அனைவருக்கும் வியப்பாய் இருந்தது. இவள் இந்தளவு கணிப்பாளா என்று!
எனக்கோ, அவள் என்னைச் சரியாகக் கணித்திருந்தது பெரிய வியப்பாய் இருந்தாலும், வழக்கம் போல, எனது முகமூடியாக, கோபமாக அவளை முறைத்தேன்.
வேதாளம் முருங்கைமரம் ஏறுது. நான் எஸ்கேப்பா என்று அவள், என் அக்காவை இழுத்துக் கொண்டு ஓடினாள்.
அவளுடைய செய்கை, அக்கறை, அன்பு எல்லாம் என் மனதில் இன்னும் பல மாற்றங்களை ஏற்படுத்தின. லாவண்யா மேல் இருந்த அந்த இனம் புரியாத உணர்வு பெருகி, காதலாக மாறி நின்றது. எந்தத் தருணத்தில், எப்படி மாறியது என்று சொல்ல முடியாவிட்டாலும், அது மாறியதை என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது.
நான் செய்த ஒரே தவறு, வெண்ணை திரண்டு வரும் முன், பானையை உடைத்தது போல், அவளுக்குள் நான் முழுதும் நிரம்பும் முன், என் காதலை, அதுவும் சின்ன வயதில் சொன்னதுதான். நான் இன்னும் கொஞ்சம் பொறுத்திருந்திருக்கலாம்.
எந்த முன் யோசனையும் இன்றி, ஜோடனையும் இன்றி, மிக கேசுவலாக நான் என் காதலைச் சொன்னேன்.
நான், அவளுடைய கல்லூரியில், இஞ்சினியரிங் சேருவதற்க்கு முதல் நாள், கிளம்பும் சமயத்தில், வீட்டுத் தோட்டத்தில் இருந்த என்னிடம், அவள் வந்து வாழ்த்துக்கள், நாளைக்கு ஃபர்ஸ்ட் டே! என்றாள்.
இதற்கு இடையிலும், நாங்கள் அதிகம் பேசிக் கொள்ளாவிடினும், அவள் என் கோபத்தை எப்பொழுதும் பொருட்படுத்தியதே இல்லை!
அவளையேப் பார்த்தவன், இப்ப எனக்கு 18 வயசு ஆகிடுச்சு! இனி நான் சொத்து விஷயத்துலியோ, வேறெந்த விஷயத்துலியும் டெசிஷன் எடுக்கலாமில்ல?
சம்பந்தமேயில்லாமல், இப்பொழுது நான் இதை சொல்லுவதைக் கேட்டு குழம்பிய அவள், ம்ம்ம் எடுக்கலாம். என்ன, இனி நான் வீட்டுக்கு வரக் கூடாதா என்று அலட்சியமாகக் கேட்டாள்.
அவளுக்குத் தெரியும், நான் அப்படிச் சொல்ல மாட்டேன் என்று!
அதெல்லாம் இல்லை. இது வேற விஷயம்.
வேற என்ன விஷயம்?
ஐ லவ் யூ!