அப்போது அறை கதவை லேசாக திறந்து, தலையை மட்டும் வெளியில் மெதுவாக நீட்டி மீனாட்சி எட்டிப்பார்த்தாள்.
“பாவபட்டுலாம் இல்ல, வெந்நீர் பட்டு என்னோட கை சுட்டுகிட்டா, நான் என்ன பண்றது ?”
அவள் சொன்னதை கேட்டு மாதவன், கீழே கிடந்த வாளியை தூக்கி அவளை நோக்கி வேகமாக எறிந்தான்.
“வெவ்வ… வெவ்வே” உதட்டை சுளித்து பளிப்பு காட்டிவிட்டு கதவை சாத்திக்கொண்டாள்.
வாளி படாரென்ற சத்தத்துடன் கதவில் மோதி கீழே விழுந்தது.
“அடியே! குண்டு பூசனி, நீ தப்பிச்சுட்டே, இன்னொரு நாள் மாட்டுவே” என மாதவன் கர்ஜித்தான்.
“ஏன்டா, உங்க சண்டையில வீட்டுல இருக்குற எல்லா பொருளையும் போட்டு உடைக்கிறதே வேலையா போச்சு, அவரு மட்டும் ரயில்வேயில வேல பாக்கலனா இந்த மாதிரிலாம் நடந்துக்குவீங்களா, உங்க அப்பா கஷ்டபட்டு உழைச்சு வாங்குறத யோசிக்கமா தூக்கி எறியிரியேடா”
அப்பா எந்நேரமும் குடும்பத்துக்காகவே உழைக்கிறார். அவரை பற்றி நினைவு படுத்தியதும் மாதவனுக்கு கோபம் அடங்கியது.
“செரிமா, தெரியாம பண்ணிட்டேன் என்ன மன்னிச்சிடு”
உடனே அவனது அம்மாவின் மனது குளிர்ந்து போனது.
“நமக்குள்ள எதுக்குடா மன்னிப்புலாம், போயி குளிச்சுட்டு காலேஜ் கிளம்புற வழிய பாரு”
“அதான் தண்ணி ஊத்து குளிப்பாட்டியாச்சே, திரும்ப எதுக்கு” மீனாட்சி கதவை திறக்காமல் சொன்னாள்.
“அம்மா இவள என்ன பண்றது ?” மாதவனுக்கு மீண்டும் கோபம் தலைக்கேறியது.
“அவ எப்பவும் அப்படிதானே, நீ போயி குளிடா”