மதன மோக ரூப சுந்தரி – 4 45

விவாதத்தில் ஆரம்பித்து வாக்குவாதத்தில் சென்று முடிந்தது கணவன் மனைவியின் உரையாடல்..!! ஒருவரை ஒருவர் முறைத்துக்கொண்டு.. உடல் ஸ்பரிசம் இல்லாமலே உறங்கிப்போனார்கள் இருவரும்..!!

முதல்நாள் இரவின் நினைவில் இருந்து மீண்டாள் ஆதிரா..!! ‘சிபி சொல்வதை வைத்துப் பார்த்தால்.. தாமிரா அந்த ஆராய்ச்சியில் மிக உறுதியாகத்தான் இருந்திருக்கிறாள்.. அதற்கென மைசூர் வரை பயணித்து உதவி தேடியிருக்கிறாளே..?? அவளுடைய அந்த உறுதிதான் உயிருக்கு எமனாக முடிந்திருக்குமோ..??’ என்கிற ரீதியில் இப்போது அவளது மூளை யோசித்துக் கொண்டிருந்தது..!!

ஆழ்ந்த சிந்தனையுடன் ஊஞ்சல் ஆடிக்கொண்டிருந்த ஆதிராவின் கவனத்தை.. அருகில் கேட்ட சிபியின் குரல் கலைத்தது..!!

“ஹேய்.. வந்துட்டியா.. வந்ததும் வராததுமா ஊஞ்சல்ல உக்காந்து ஆடிட்டு இருக்குற..?? போன வேலை என்னாச்சு..??”

ஆதிரா ஊஞ்சலின் வேகத்தை சற்றே குறைத்து, தலையை திருப்பி பார்த்தாள்.. கையில் இருந்த செல்ஃபோனை காதோடு வைத்து பிடித்தவாறு, சிபி இவளை நோக்கி வந்துகொண்டிருந்தான்..!! அவனுடைய கேள்விக்கு ஆதிரா பதில் சொல்ல வாயெடுக்கும் போதே..

“ஒன் மினிட்..!!”

என்று அவளை தடுத்தான்..!! காதுக்கு கொடுத்திருந்த செல்ஃபோனில் இப்போது காலர் ட்யூன் ஒலித்திருக்க வேண்டும்..!! இரண்டு மூன்று வினாடிகளில், மறுமுனையில் கால் பிக்கப் செய்யப்படவும்..

“ஹலோ..!!” என்றான். பிறகு,

“ஹலோஓஓஓ..!!” என்று பெரிதாக கத்தினான்.

“நான் பேசுறது கேக்குதா..??” என்று இரைந்தான்.

மேலும் நான்கைந்து முறை அந்த மாதிரி இரைந்துவிட்டு, அப்புறம் கடுப்புடன் காலை கட் செய்தான்.

“ச்சே.. என்ன எழவு நெட்வொர்க்கோ..?? ரூம்லயும் சிக்னல் இல்ல.. ஹால்லயும் சிக்னல் கெடைக்க மாட்டேன்னுது..!!” என்று சலித்துக்கொண்டான். பிறகு அந்த சலிப்புடனே மனைவியின் பக்கமாய் திரும்பி,

“ம்ம்.. சொல்லு.. என்னாச்சு..??” என்று கேட்டான்.

ஆதிரா ஒருசில வினாடிகள் நிதானித்துவிட்டே பேச ஆரம்பித்தாள்..!! முகிலனிடம் சென்று நேரிடையாகவே விஷயத்தை தெரிவித்தது.. உடனடியாய் அவனுக்கு கிளம்பிய கோபம்.. கதிரிடம் அவன் காட்டிய வெறுப்பும், முறைப்பும்.. பிறகு அந்த மாந்திரீகவாதியின் சொற்பொழிவு.. இறுதியாக முகிலனின் எகத்தாளப் பேச்சு.. எல்லாவற்றையும் கணவனிடம் பொறுமையாக ஒப்பித்தாள்..!!

ஆதிரா சொன்னதையெல்லாம் ஒரு கூர்மையான பார்வையுடன் கேட்டுக்கொண்டிருந்த சிபி.. அவள் பேசி முடித்ததும் சற்றே எள்ளலான குரலில் சொன்னான்..!!

“ஹ்ம்ம்.. நான்தான் சொன்னேன்ல.. இதெல்லாம் தேவையில்லாத வேலைன்னு..!! இப்போ என்னாச்சு பாரு.. சும்மா இருந்தவரை சீண்டி விட்ட மாதிரி ஆய்டுச்சு..!! இனிமேலாவது உன் ஆர்வத்தை கண்ட்ரோல் பண்ணிக்கிட்டு.. கொஞ்சம் அமைதியா இரு ஆதிரா..!!”

“இல்லத்தான்.. இப்போத்தான் என் ஆர்வம் இன்னும் அதிகமாகிருக்கு..!!” ஆதிரா அவ்வாறு இறுக்கமான குரலில் சொல்ல, சிபி சற்றே நெற்றியை சுருக்கினான்.

“என்ன சொல்ற..??”

1 Comment

  1. And indefinitely it is not far 🙂

Comments are closed.