மதன மோக ரூப சுந்தரி – 4 44

ஆதிராவே பேசினாள்.. தாங்கள் வந்திருக்கிற விஷயம் பற்றி அவருக்கு விளக்கி கூற ஆரம்பித்தாள்..!!

“……… அந்த ஆராய்ச்சிக்கு நீங்கதான் கைடா இருந்திருக்கீங்க.. கரெக்டா..??”

“ஆமாம்.. ஆரம்பத்துல வேற டாபிக் சொன்னாங்க.. அப்புறம் தாமிரா திடீர்னு வந்து குறிஞ்சியை பத்தி ரிசர்ச் பண்ணப் போறதா சொன்னா..!!”

“ம்ம்..!!”

“குறிஞ்சியை பத்தி ரிசர்ச்னதும்.. எனக்கும் மொதல்ல கொஞ்சம் தயக்கமாத்தான் இருந்துச்சு..!!”

“ஏன்..??”

“ஏன்னா.. எப்படி சொல்றது.. ம்ம்ம்..”

சொன்ன மணிமாறன் சில வினாடிகள் அப்படியே அமைதியாகிப் போனார்.. கையிலிருந்த தேநீர் கோப்பையையே கூர்மையாக வெறித்தார்..!! ஆதிராவும், கதிரும் அவருடைய முகத்தையே புரியாமல் பார்த்துக் கொண்டிருக்க.. அப்புறம் ஒரு நீண்ட பெருமூச்சுடன் மீண்டும் பேச ஆரம்பித்தார்..!!

“ஹ்ஹ்ம்ம்ம்ம்ம்..!! ஏழு வருஷத்துக்கு முன்னாடி இந்த ஊர்ல வந்து நான் செட்டில் ஆறப்போ.. குறிஞ்சியை பத்தி ஊர் ஜனங்க சொன்ன கதைலாம் மொதமுறையா கேள்விப்பட்டேன்..!! ரொம்ப பயமுறுத்தினாங்க.. ‘தனியா எங்கயும் போகாதிங்க, குறிஞ்சி தூக்கிட்டு போய்டுவா, பஸ்பம் ஆக்கிருவா, ஆவியா மாத்திருவா’ அப்படி இப்படின்னு..!!”

“…………………..”

“ஹாஹா.. அதெல்லாம் கேக்குறப்போ அப்போ எனக்கு சிரிப்புதான் வந்துச்சு.. பைத்தியக்கார ஜனங்கன்னு தோணுச்சு..!! ஆனா.. என் வொய்ஃப்க்கே அது நடந்தப்பதான்.. அவங்க சொன்னதோட சீரியஸ்னஸ் புரிஞ்சது..!!” மணிமாறன் தளர்ந்த குரலில் சொல்ல,

“…………………..” ஆதிராவும் கதிரும் வாயடைத்துப் போய் அவரை பார்த்தனர்.

“என் வொய்ஃப் ரொம்ப தைரியசாலிமா.. நல்ல துணிச்சலான பொம்பளை..!! குறிஞ்சி கதையை அவ குண்டுமணி அளவுக்கு கூட நம்பல.. எங்க போனாலும் தனியாத்தான் போவா.. தனியாத்தான் வருவா..!! அவளோட தைரியம் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது.. ஆனா.. அந்த தைரியமே அவளுக்கு ஆபத்தா முடியும்னு நான் கொஞ்சம் கூட நெனைக்கல..!!”

“…………………..”

“களமேழி போறேன்னு சொல்லிட்டு கெளம்புனவ.. காத்துல கரைஞ்ச மாதிரி மாயமா மறைஞ்சு போய்ட்டா.. கார் மட்டும் தனியா காட்டுக்குள்ள நின்னுட்டு இருந்துச்சு..!!”

“…………………..”

“ஐஞ்சு வருஷம் ஆச்சும்மா..!! நான் உசுரையே வச்சிருந்த என் வொய்ஃப், இப்படி என்னை பைத்தியக்காரன் மாதிரி பொலம்ப விட்டுட்டு போய் அஞ்சு வருஷம் ஆச்சு..!! போலீஸால இதுவரை ஒன்னும் புடுங்க முடியல..!!”

“…………………..”

“ஹ்ம்ம்ம்ம்..!! குறிஞ்சின்ற ஒரு விஷயம் மேல எனக்கு பயம் வந்ததே அதுக்கப்புறம்தான்மா..!! அதான்.. உன் தங்கச்சி வந்து குறிஞ்சியை பத்தி ரிசர்ச்னதும்.. ஆரம்பத்துல எனக்கு பயமா இருந்துச்சு..!!”

“ம்ம்ம்..!!”

“அப்புறம் அவ எக்ஸ்ப்லைன் பண்ணதும் எனக்கும் இன்ட்ரஸ்ட் வந்தது.. இவ்வளவு ஹைப் க்ரியேட் பண்ணிருக்குற அந்த குறிஞ்சியோட உண்மையான கதையை தெரிஞ்சுக்கணும்னு.. எனக்கும் ஒரு இன்ட்ரஸ்ட் வந்துடுச்சு..!! நல்லா பண்ணுங்கம்மான்னு ரெண்டு பேரையும் என்கரேஜ் பண்ணினேன்..!!”

“ம்ம்.. எங்களுக்கு அந்த ரிசர்ச் ஆர்டிக்கிளோட காப்பி வேணும் ஸார்.. கெடைக்குமா..?? உங்கட்ட இருக்கா..??”

“இல்லம்மா.. அந்த மாதிரி எங்கிட்ட எந்த காப்பியும் இல்ல.. ரிசர்ச் முடிஞ்சுதான் அதை சப்மிட் பண்றதா இருந்தது.. அதுக்கு முன்னாடிதான் என்னன்னவோ ஆகிப்போச்சே..!! ரெண்டு பேரும் மன்த்லி ரிப்போர்ட் சப்மிட் பண்ணுவாங்க.. ரிசர்ச்சோட ப்ராக்ரஸ் பத்தி.. அவ்வளவுதான்..!! அதுலாம் எங்க காலேஜ் சம்பந்தப்பட்ட ஃபார்மாலிட்டி.. உங்களுக்கு யூஸ்ஃபுல்லா இருக்காதுன்னு நெனைக்கிறேன்..!!”

மணிமாறன் இயல்பாக சொல்ல, ஆதிராவின் முகத்தில் அப்பட்டமாய் ஒரு ஏமாற்றம் தெரிந்தது..!! அதன்பிறகும் சிறிது நேரம் ஆதிரா அவரை கேள்விகளால் துளைத்தெடுத்தாள்.. தனக்கு தெரியாத ஏதாவது தகவல்களை, தாமிரா அவருடன் பகிர்ந்திருக்கிறாளா என்கிற ஆர்வத்துடன் அமைந்திருந்தது அவளது கேள்விகள்..!! ஆனால்.. அவருடைய பதில்கள் எதுவும் அவளுக்கு உபயோகமாக இல்லை.. தாமிரா பகிர்ந்துகொண்ட தகவல்கள் என, அவர் சொன்ன விஷயங்கள் எல்லாமே.. ஆதிரா ஏற்கனவே அறிந்த விஷயங்களாகவே இருந்தன..!!

இருவரும் வெறுங்கையுடன் அங்கிருந்து கிளம்பினார்கள்.. இருவரிடமுமே ஒருவித சலிப்பும், ஏமாற்றமும்.. ஆதிராவிடம் சற்று அதிகப்படியாகவே காணமுடிந்தது..!! காரில் ஏறி அமர்ந்ததும் கதிர் கேட்டான்..!!

“நேரா வீட்டுக்குத்தானா..??”

“இல்ல கதிர்.. ஸ்டேஷன் போலாம்.. செம்பியன் அங்கிள பார்த்துட்டு போய்டலாம்..!!”

“ப்ரொஃபஸாராலேயே யூஸ்ஃபுல்லா எந்த இன்ஃபர்மேஷனும் தர முடியல.. செம்பியன் அங்கிள்ட்ட என்ன கெடைச்சிடப் போகுது..??”

“பாக்கலாம்.. பேசிப்பார்ப்போம்..!!”

சுவாரசியம் இல்லாமலே சாவி திருகி காரை ஸ்டார்ட் செய்தான் கதிர்..!! வந்த வழியிலேயே சிறிது நேரம் திரும்ப சென்று.. பிறகு அந்த சர்ச்சை தாண்டியதும்.. வேறு திசையில் கார் தடதடவென வேகமெடுத்து ஓட ஆரம்பித்தது..!!

“ரெண்டு புள்ளைகளும் அந்த ஸ்டேஷன் மாஸ்டரைத்தான் போய் அடிக்கடி பாத்துட்டு வருங்க..!!”

நேற்று.. தனது புலம்பல்களுக்கு நடுவே அகல்விழியின் அம்மா உதிர்த்த வார்த்தைகள்தான்.. தற்போது இவர்களது இந்த பயணத்திற்கு காரணம்..!!

இருபுறமும் வளர்ந்திருந்த அடர்ந்த மரங்கள், நீண்ட சாலையை நிழலால் நிறைத்திருந்தன.. வெளிச்சம் குறைவாக இருந்த போதிலும், வேகமாகவே காரை செலுத்தினான் கதிர்..!! நேர்திசையில் சென்றுகொண்டிருந்த சாலை.. சிறிது தூரத்தில் ரயில் தண்டவாளங்கள் குறிக்கிட்ட இடத்தில் சற்றே வளைந்து.. பிறகு அந்த தண்டவாளங்களுக்கு பக்கவாட்டில் நீளமாக ஓடியது..!!

ஆதிரா தலையை திருப்பி கார் ஜன்னலுக்கு வெளியே பார்த்தாள்.. சரசரவென கடந்து எதிர்ப்பக்கம் செல்கிற மரங்களுக்கு இடையே, சரளைக் கற்களில் படுத்தவாறு கூடவே வருகிற தண்டவாளங்கள் காட்சியளித்தன..!! அந்த தண்டவாளங்களை பார்க்க பார்க்க.. குழந்தைப் பருவ நினைவொன்றில் மெல்ல மெல்ல மூழ்க ஆரம்பித்தாள் ஆதிரா..!!

“ஜிக்குபுக்கு ஜிக்குபுக்கு ரயில் வண்டி..
திருச்சிக்கு போற ரயில் வண்டி..!!
குபுகுபு குபுகுபு ரயில் வண்டி..
குன்னூருக்கு போற ரயில் வண்டி..!!”

அதோ அந்த தண்டவாளத்தில்.. ஆதிரா, தாமிரா, சிபி, கதிர் என நால்வரும்.. ஏழு, எட்டு வயது பிள்ளைகளாக இருந்தபோது.. ஒருவர் பின் ஒருவராக நின்று.. ஒருவர் சட்டையை அடுத்தவர் பற்றிக்கொண்டு.. பாடிக்கொண்டே திடுதிடுவென ஓடியவாறு.. ரயில்விட்டு விளையாடிய நினைவு..!!

“கடகட கடகட ரயில் வண்டி..
கடலூருக்கு போற ரயில் வண்டி..!!”

“ஏய் பிள்ளைகளா.. எறங்குங்க பிள்ளைகளா..!!”

அவர்களுக்கு பின்னால் கத்திக்கொண்டே ஓடி வருவார் செம்பியன்.. சரளை கற்களை பொறுக்கி எடுத்து, இவர்கள் மீது எறிவது போல பாவ்லா காட்டி, குறிபார்த்து வேறெங்கோ எறிவார்..!! குழந்தைகளை பயமுறுத்துவதுதான் அவரது நோக்கம்.. காயப்படுத்துவது அல்ல..!!

“இப்போ எறங்க போறிகளா இல்லையா..?? ஏய்.. சொல்றேன்ல.. எறங்குங்க.. வேறபக்கம் போய் வெளையாடுங்க.. போங்க..!!”

“தடதட தடதட ரயில் வண்டி..
தஞ்சாவுருக்கு போற ரயில் வண்டி..!!”

குழந்தைகளின் பாடல் தொடர்ந்துகொண்டே இருக்கும்.. அவர்களது ரயில் ஓட்டமும் நிற்காது..!! பக்கவாட்டில் திரும்பி செம்பியனுக்கு அழகு காட்டியவாறு.. தொடர்ந்து அந்த தண்டவாளங்களில் ஓடிக்கொண்டே இருப்பார்கள்..!!

1 Comment

  1. And indefinitely it is not far 🙂

Comments are closed.