மதன மோக ரூப சுந்தரி – 4 44

அத்தியாயம் 16

கரடுமுரடான மலைச்சரிவில் கார் மேல்நோக்கி ஊர்ந்து கொண்டிருந்தது.. கதிர் காரோட்டிக் கொண்டிருந்தான்.. அவனுக்கருகே ஆதிரா கைகட்டி அமர்ந்திருந்தாள்.. இருவருடைய முகத்திலும் ஒரு கெட்டிப்பட்ட அமைதி..!! கதிர்தான் முதலில் அந்த அமைதியை குழைத்தான்..!!

“அட்ரஸ் வச்சிருக்கிங்கள்ல ஆதிரா..??”

“இல்ல கதிர்.. அவர் அட்ரஸ்லாம் தரல..!!”

“அப்புறம்..??”

“சர்ச்ல இருந்து லெஃப்ட்ல போற ரோட்ல.. லாஸ்டா, தனியா இருக்குற வீடுன்னு சொன்னார்.. வொய்ட் கலர் பில்டிங்காம்..!!”

“ஓ.. சரி சரி..!!”

ஆதிராவும் கதிரும் நேற்று அகல்விழியின் வீட்டில் இருந்து கிளம்புகையிலேயே.. தங்களது அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி விவாதித்தனர்..!! அந்த ஆராய்ச்சிக் கட்டுரையின் நகலை எப்படியாவது கைப்பற்றுவதுதான் அவர்களது நோக்கமாக இருந்தது..!! ‘பட்டப் படிப்புக்கென ஆரம்பிக்கப்பட்ட ஆராய்ச்சிதானே இது.. தாமிராவின் கல்லூரியில் இதுபற்றி விசாரித்துப் பார்த்தால் என்ன..?’ என்று அவர்களுக்கு தோன்றியது..!! அதன்படியே.. குன்னூரில் இருக்கிற அந்த கலைக் கல்லூரிக்கு கால் செய்து.. விஷயத்தை தெளிவாக விளக்கி விசாரித்தனர்..!!

தாமிராவும், அகல்விழியும் மேற்கொண்ட அந்த ஆராய்ச்சிக்கு.. அந்த கல்லூரியை சேர்ந்த ப்ரொஃபஸர் ஒருவர் கைடாக பணிபுரிந்த தகவல் கிடைத்தது.. ‘மேலும் தகவல் பெற அவரை அணுகுங்கள்’ என்று கல்லூரியில் இருந்து அவரை கைகாட்டிவிட்டனர்..!! அவருடைய தொடர்பு எண்ணை பெற்றுக்கொண்டு கால் செய்து பேசினர்.. அவரிடம் நேரில் சந்தித்து பேச அனுமதி வாங்கினர்..!! அவரது வீடும் அகழியின் சுற்று வட்டாரத்திலேயேதான் அமைந்திருந்தது.. அங்குதான் இப்போது கதிரும், ஆதிராவும் காரில் சென்று கொண்டிருக்கிறார்கள்..!!

ஆதிரா சொன்ன சர்ச் வந்ததும், இடதுபுறம் காரை திருப்பினான் கதிர்.. மிக குறுகலான மண்சாலை.. மிதமான வேகத்தில் அதே சாலையில் ஐந்து நிமிடங்கள் பயணிக்க.. தனியாக நின்றிருந்த அந்த வெண்ணிற கட்டிடம் பார்வைக்கு வந்தது..!! ஆதிராவின் வீடு அளவிற்கு அரண்மனை போல இல்லாவிடிலும்.. செல்வச் செழுமையுடனே அழகுற காட்சியளித்தது அந்த வீடு..!!

காரை வெளியே நிறுத்திவிட்டு.. கேட் திறந்து வீட்டுக்குள் நுழைந்தார்கள்.. கோரைப் புற்களுக்குள் கால்பதித்து நடந்தார்கள்..!! வீட்டை சுற்றிலும் ஒரே நிசப்தம்.. தூரத்து நீர்வீழ்ச்சியின் ஓசை மட்டும், இங்குவரை சன்னமாக ஒலித்துக் கொண்டிருந்தது..!!

கதவுக்கு பக்கவாட்டில் பெயர்ப்பலகை தெரிந்தது.. பேராசிரியர் மணிமாறன்.. Ma, Mphil, PhD-யுடன் இன்னும் ஏதோ ஒரு புரியாத படிப்பை படித்திருந்தார்..!! பெயர்ப்பலகைக்கு கீழே காட்சியளித்த காலிங் பெல்லை கதிர் அழுத்தினான்..!!

“க்க்க்ர்ர்ர்ர்ர்…!! க்க்க்ர்ர்ர்ர்ர்…!! க்க்க்ர்ர்ர்ர்ர்…!!”

மூன்று நான்குமுறை காலிங்பெல் சத்தம் ஒலித்தும், உள்ளிருந்து எந்த ரியாக்ஷனும் இல்லை.. கதவு திறக்கப்படவில்லை.. ஆதிராவும், கதிரும் சற்றே குழப்பமாக ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்..!!

“அவர் நம்பருக்கு வேணா கால் பண்ணி பாருங்க ஆதிரா..!!”

“இருங்க.. பண்ணிப் பாக்குறேன்..!!”

ஆதிரா தனது கைப்பையில் இருந்து செல்ஃபோனை எடுத்துக் கொண்டிருக்கும்போதே, கதிர் அவளை தடுத்தான்.

“ஒரு நிமிஷம் இருங்க.. வீட்டுக்கு பின்னாடி ஏதோ பேச்சு சத்தம் கேக்குற மாதிரி இல்ல..??”

கதிர் குழப்பமாக சொன்னதும், ஆதிராவும் நெற்றி சுருக்கத்துடன் தனது காதை உன்னிப்பாக்கி கவனித்தாள்.. ஆமாம்.. வீட்டுக்கு பின்புறம் இருந்து மிக சன்னமாக ஒரு பேச்சுக் குரல்.. ஆனால், தெளிவில்லாமல்..!!

“ஆமாம்.. கேக்குது..!!”

ஆதிராவும் கதிரும் வாசலில் இருந்து நகர்ந்தார்கள்.. மீண்டும் கோரைப்புற்களில் கால் பதித்து நடந்து, வீட்டை சுற்றிக்கொண்டு, பின்பக்கமாக சென்றார்கள்..!! வீட்டுக்கு பின்புறம் அமைந்திருந்த தோட்டம் இப்போது அவர்களது பார்வைக்கு வந்தது..!! நெருக்க நெருக்கமாய் வளர்ந்திருந்த பச்சை செடிகள்.. அந்த செடிகளில் கொத்துக் கொத்தாய் மலர்ந்திருந்த பலவண்ண பூக்கள்..!! தோட்டத்தை பார்த்ததுமே.. கண்ணுக்குள் ஒரு குளுமையும், நெஞ்சுக்குள் ஒரு இனிமையும் பரவுவதை உணர முடிந்தது..!!

1 Comment

  1. And indefinitely it is not far 🙂

Comments are closed.