ஆதிராவின் கையிலிருந்த சிவப்புத்துணி இப்போது காற்றில் படபடத்தது.. கொஞ்சம் கொஞ்சமாய் அந்தத்துணியின் அகலமும், நீளமும் பெரிதாகி.. குறிஞ்சியின் அங்கியாக பிரம்மாண்ட உருவெடுத்தது.. காற்றில் சுழன்றடித்து ஆதிராவை அப்படியே சுருட்டிக்கொள்ள முயன்றது..!!
“ஆஆஆஆ..!!”
பதறியடித்து அலறிய ஆதிரா.. உடலை முறுக்கி அந்தத்துணியை உதறினாள்.. தரையில் விழுந்து கடகடவென உருண்டாள்.. ‘தஸ்புஸ்’ என் மூச்சிரைத்தாள்..!! அதே நேரம்..
“கண்ணாமூச்சி ரே ரே..
கண்டுபுடி ரே ரே..
ஹாஹாஹாஹாஹாஹா..!!!!!”
காட்டு மரங்களுக்கு இடையே தாமிராவின் குரல் சிரிப்புடன் எதிரொலித்தது..!! தரையில் இருந்து எழுந்தாள் ஆதிரா.. தலையைத் திருப்பி, அந்த அங்கியை மிரட்சியாக பார்த்துக்கொண்டே.. தங்கையின் குரல் வந்த திசையிலே ஓடினாள்..!!
அடர்ந்த வனத்துக்குள் ஓடிக்களைத்த ஆதிராவுக்கு.. இப்போது அந்த சிங்கமுக சிலை காட்சியளித்தது.. அதன் பக்கவாட்டிலேயே இருண்டுபோன அந்த குகை..!! அந்த குகைக்குள் இருந்துதான் தாமிராவின் குழந்தைக்குரல் திரும்ப திரும்ப ஒலித்துக் கொண்டிருந்தது..!!
“கண்ணாமூச்சி ரே ரே..
கண்டுபுடி ரே ரே..!!!”
சிறுமி ஆதிரா இப்போது சற்றே நிதானித்தாள்.. அவளது மார்பு மட்டும் ‘படக், படக்’ என அடித்துக்கொண்டுதான் கிடந்தது..!! அதீத பயம் அப்பிய விழிகளுடனே.. அந்த குகையை நோக்கி மெல்ல அடியெடுத்து வைத்தாள்..!!
“தாமிராஆஆ.. தாமிராஆஆ..!!”
சன்னமான குரலில் தங்கையை அழைத்துக் கொண்டே நகர்ந்தாள்.. குகை வாசலில் வந்து கைகள் விரித்து நின்றாள்..!! குகைக்குள் ஒரே கும்மிருட்டு.. உள்ளிருக்கும் எதுவுமே கண்ணிரண்டுக்கும் புலப்படவில்லை..!! இருட்டுக்குள் இருந்து அந்தப்பாடல் மட்டும் கிசுகிசுப்பாக ஒலித்தது..!!
“கண்ணாமூச்சி ரே ரே..
கண்டுபுடி ரே ரே..!!!”
குட்டி ஆதிரா இப்போது அந்தக்குகைக்குள் நுழைந்தாள்.. ஒவ்வொரு அடியாக நகர்ந்து இருளுக்குள் முன்னேறினாள்..!! அவளது நெஞ்சுக்குழி பயத்தில் பதறியடித்துக் கொண்டிருந்தாலும்.. தங்கையை எப்படியாவது மீட்டுவிடவேண்டும் என்று அவளுக்குள் ஒரு தீவிரம்..!!
“நீ என்னை கண்டுபிடிக்கலைன்னா.. அப்புறம் நான் தொலைஞ்சு போயிடுவேனே..??” – திடீரென காதுக்குள் ஒலித்த தாமிராவின் குரல்.
இருட்டுக்குள் கைகளை அலையவிட்டவாறே.. அடிமேல் அடிஎடுத்து வைத்து மெல்ல மெல்ல உள்நடந்தாள்.. அவ்வப்போது ரகசிய குரலில் தங்கையை அழைத்தாள்..!!
“தாமிராஆஆ.. தாமிராஆஆ..!!”
குகைக்குள் இப்போது திடீரென ஒரு வெளிச்சக்கீற்று.. சுற்றிலும் அடர்இருள் ஆக்ரமித்திருக்க ஓரிடத்தில் மட்டும் சரக்கென ஒரு வெளிச்சம்.. அவ்விடத்தில் யாரோ ஒரு பெண்ணின் முகம்.. யாரென்று இங்கிருந்து தெளிவாக தெரியவில்லை..!! ஆதிரா அந்தப்பெண்ணை நோக்கி மெல்ல அடியெடுத்து வைத்தாள்..!!
“தாமிராஆஆ..!!”
And indefinitely it is not far 🙂