மதன மோக ரூப சுந்தரி – 4 45

“ஆமாம்..!! அந்த பொண்ணை பார்த்து பேசினா..”

“குட்.. நல்ல ஐடியாதான்..!!”

“பட்.. அந்தப் பொண்ணோட காண்டாக்ட் டீடயில்ஸ் எதுவும் எனக்கு தெரியாது..!!”

“ஹஹ.. பரவால.. எனக்கு தெரியும்..!! தாமிராவோட சேர்ந்து ஒன்னு ரெண்டு தடவை அவ வீட்டுக்கு போயிருக்கேன்..!!”

“ஓ.. ஓகே ஓகே..!!”

“ஹ்ம்ம்ம்ம்.. நாம ஏன் இப்போவே அந்த அகல்விழியை பார்த்து பேசிட்டு.. அப்புறமா வீட்டுக்கு போகக்கூடாது..??”

“போலாமே..!! எனக்கு ஒன்னும் ப்ராப்ளம் இல்ல..!!”

“அப்போ.. அந்த ஜங்க்ஷன்ல லெஃப்ட் எடுத்துக்கங்க..!!”

ஆதிரா சொன்ன அந்த சந்திப்பில் இடதுபுறம் திரும்பி.. அடுத்த ஊருக்கு செல்கிற வழியில் தனித்திருந்த அகல்விழியின் வீட்டை அடைவதற்கு.. அதன்மேலும் பதினைந்து நிமிடங்கள் ஆயின..!! சின்னஞ்சிறிய மூங்கில் குடிசைதான்.. இவர்கள் சென்ற நேரத்தில், அந்த பத்து வயது சிறுமிதான் வீட்டில் தனியாக இருந்தாள்.. அகல்விழியின் தங்கை..!! வாசலை பெருக்கி சுத்தம் செய்து கொண்டிருந்தவள்.. இவர்கள் ஜீப்பில் சென்று வீட்டு வாசலில் இறங்கியதும்.. ஆதிராவை அடையாளம் கண்டுகொண்டு புன்னகைத்தாள்..!!

“அக்காஆஆ.. நல்லாருக்கிங்களா..??”

“ஹேய் பாப்பா.. ஞாபகம் வச்சிருக்கியா என்னை..?? வேல்விழிதான உன் பேரு..??”

“ஆமாக்கா.. நீங்களும் என்பேரை கரக்டா ஞாபகம் வச்சிருக்கிங்க..?? வாங்கக்கா.. வீட்டுக்குள்ள வாங்க..!!”

ஆதிராவையும் கதிரையும் அன்பாக உபசரித்து.. வீட்டுக்குள் அழைத்து சென்றாள் அந்த வேல்விழி.. பாயெடுத்து விரித்து போட்டவள்..

“உக்காருங்கக்கா.. அம்மா இப்போ வந்திருவாங்க..!! டீ சாப்பிடுறீங்களா..??” என்று கேட்டாள்.

“இல்லம்மா.. அதுலாம் வேணாம்.. வா.. நீ வந்து உக்காரு..!!” அவளை அருகில் அழைத்து அமரவைத்துக் கொண்ட ஆதிரா,

“வீட்ல யாரும் இல்லையா.. நீ மட்டும் தனியா இருக்க.. எல்லாரும் எங்க போயிருக்காங்க..??” என்று கேட்டாள்.

“அம்மா கடைக்கு போயிருக்காங்க.. அப்பா டாஸ்மாக் போயிருக்காரு.. அண்ணணுக ரெண்டு பேரும் டீ எஸ்டேட்க்கு வேலைக்கு போயிருக்காங்க..!!” கடகடவென புன்னகையுடன் ஒப்பித்தாள் வேல்விழி.

“அகல்விழி..??”

ஆதிரா அவ்வாறு இயல்பாக கேட்க.. அத்தனை நேரம் வேல்விழியின் உதட்டில் இருந்த அந்த சிரிப்பு இப்போது பட்டென காணாமல் போனது.. அந்த குட்டிப் பெண்ணின் முகத்தில் குப்பென ஒரு இருள் வந்து அப்பிக்கொண்டது..!! கண்களை அகலமாய் விரித்து மிரட்சியாக ஆதிராவை பார்த்தவள்.. பிசிறடிக்கிற குரலில் தட்டு தடுமாறி சொன்னாள்..!!

“அ..அக்காவை.. அக்காவை குறிஞ்சி தூக்கிட்டு போயிட்டா..!!”

9

அத்தியாயம் 15

அகல்விழியின் வீட்டில் இருந்து திரும்பிய ஆதிரா ஒருவித அயர்ச்சியுடனே காணப்பட்டாள்.. கதிரை அனுப்பிவைத்துவிட்டு வீடு புகுந்தவளுக்கு கால்கள் தளர்ந்து போனாற்போல் ஒரு உணர்வு..!! வலது முழங்காலுக்கு கீழிருந்த வெட்டுக்காயத்தில் இப்போது சுருக்கென்று ஒரு வலி.. உதட்டை கடித்து முகத்தை அவஸ்தையாக சுளித்தவள், ஊஞ்சல் சங்கிலியை இறுக்கமாக பற்றிக்கொண்டாள்..!! தடுமாற்றத்துடன் உடலை நகர்த்தி.. ஜோடியாக தொங்கிய இரண்டு ஊஞ்சல்களில் ஒன்றில்.. வசதியாக அமர்ந்து கொண்டாள்..!!

அவ்வாறே சிறிது நேரம் அமைதியாக அமர்ந்திருந்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டாள்..!! நெஞ்சில் ஏறியிருந்த படபடப்பு கொஞ்சம் கொஞ்சமாய் நீங்கியது.. ஆனால் புத்தியை ஆக்கிரமித்திருந்த சிந்தனைகள் அப்படியேதான் இருந்தன..!! ஏதோ ஒரு சூனியத்தை வெறித்துக்கொண்டு, என்னவோ ஒரு யோசனையில் இருந்த ஆதிரா.. அவளுடைய சுய கட்டுப்பாடு இல்லாத அனிச்சை செயலாக.. தனது கால்களின் கட்டைவிரல்களால் தரையை உந்தித் தள்ளினாள்.. ஊஞ்சல் இப்போது மெல்ல அசைய ஆரம்பித்தது..!!

“க்கிர்ர்ர்ர்ர்க்க்.. க்கிர்ர்ர்ர்ர்க்க்.. க்கிர்ர்ர்ர்ர்க்க்..!!!” – ஊஞ்சலின் இரும்புச்சங்கிலி உத்தரத்து ஆதார வளையத்தோடு உராய்ந்து எழுப்புகின்ற ஓசை.

அந்த ஊஞ்சலின் நிலையில்தான் ஆதிராவின் உள்ளமும் அப்போது இருந்தது.. ஒரு நிலையில் நில்லாமல் அங்கும் இங்கும் அலைபாய்ந்து கொண்டிருந்தது.. அகழி வந்ததிலிருந்து நடந்த சம்பவங்களை ஒரு ஒழுங்கின்றி அசைபோட்டுக் கொண்டிருந்தது..!!

தாமிராவின் மறைவுக்கு குறிஞ்சிதான் காரணம் என்பதில் ஆரம்பத்திலிருந்தே ஆதிராவுக்கு சந்தேகம்.. தாமிராவுடைய ஆராய்ச்சி பற்றி நேற்று நினைவு வந்ததும், அவளுக்கு அந்த சந்தேகம் மேலும் வலுத்தது.. இப்போது அகல்விழி தொலைந்த செய்தியை அறிந்தபிறகு, தாமிராவின் மறைவில் மிகப்பெரிய மர்மம் அடங்கியிருக்கிறது என்று உறுதியாக நம்பினாள்..!!

உள்ளத்தில் குழப்பமான உணர்வுகளுடன் ஊஞ்சலாடிக்கொண்டிருந்த ஆதிராவுக்கு.. அகல்விழியின் அம்மா சற்று முன்பு அழுது புலம்பியது நினைவுக்கு வந்தது..!!

“என்னன்னு சொல்லுவேன் எதை நெனச்சு அழுவேன்..?? அதுவேணும் இதுவேணும்னு.. ஆசைப்பட்டதை வாய்விட்டு கேக்கக்கூட தெரியாத ஊமைப்புள்ளமா எம்புள்ள.. குடுத்ததை தின்னுக்குவா, எடுத்ததை உடுத்திக்குவா..!! குடிகாரப்பயலுக்கு மகளா பொறந்து ஒரு சொகமும் காண்கலயே.. போறஎடத்துல சொகப்படுவான்னு பொழுதுக்கும் கனாகண்டேன்.. இப்படி போனஎடம் தெரியாமப் போவான்னு ஒருநாளும் நெனைக்கலியே..!!”

“…………………………”

“கடனை உடனை வாங்கித்தான் காலேசுல படிக்க வச்சேன்.. காட்டை மேட்டை வித்துத்தான் கண்ணாலத்துக்கு தேதி பாத்தேன்..!! தங்கத்துக்கும் தங்கமா மாப்புள்ள.. தண்ணி சீரட்டு பழக்கமில்ல.. அத்தனை பொருத்தமும் அம்சமா சேர்ந்துச்சு.. அகலு விழிக்கும் அம்புட்டு புடிச்சுச்சு..!!”

“…………………………”

“காலேசுல படிச்ச புள்ளைகள கல்யாணத்துக்கு அழைக்க போறேன்னு.. பத்திரிக்கையை அள்ளிக்கிட்டு பாவிமக கெளம்பிப்போனா..!! போனவ போனவதான்.. பொழுது சாஞ்சும் வீடு வரல..!! கண்ணுங்கருத்துமா வளத்த கிளிய கள்ளாப்ராந்து தூக்கிட்டுப்போன கதையா.. ஆசைஆசையா வளத்த எம்புள்ளய அந்த குறிஞ்சிமுண்ட கொண்டுபோயிட்டாம்மா..!!”

“…………………………”

“பத்து மாசமாச்சு.. நல்லது நடக்க இருந்த வீட்டுல எழவு விழுந்து பத்து மாசமாச்சு.. ஊரை ஆட்டிப்படைக்கிற காட்டுப்பேயி, எங்க உசுரை புடுங்கிட்டு போய் பத்து மாசமாச்சு..!! அழுது அழுது கண்ணுலயும் தண்ணி வத்தி போச்சு.. நெனைக்க நெனைக்க நெஞ்சுக்கொலைதான் கெடந்து துடிக்குது..!!”

பெற்ற மகளை பறிகொடுத்த அந்த தாயின் கதறல் ஆதிராவின் காதுக்குள் ஒலிக்க.. அவளையும் அறியாமல் அவளது மனதுக்குள் ஒருவித வலி பரவுவதை உணர முடிந்தது..!!

அகல்விழியை குறிஞ்சிதான் அபகரித்து சென்றுவிட்டாள் என்பதற்கு.. அந்த தாயால் உறுதியான ஆதாரம் எதையும் தரமுடியவில்லை..!! அகழி மக்களின் குறிஞ்சி பற்றிய நம்பிக்கையின் அடிப்படையில்.. அனுமானமாக எடுக்கப்பட்ட ஒரு முடிவாகவே ஆதிராவுக்கு அது தோன்றியது..!! அகல்விழி மாயமாய் மறைந்து போவதற்கு வேறேதும் காரணங்களை அவர்களால் யோசிக்க முடியாததாலேயே.. குறிஞ்சியை நோக்கி எளிதாக கைகாட்டுகிறார்கள் என்பது புரிந்தது..!!

அகல்விழியின் அம்மாவுக்காக ஆதிராவின் இதயத்தில் இரக்கம் கசிந்தாலும்.. அவர்களது நம்பிக்கையின் மீதுதான் இவளுக்கு ஏனோ நம்பிக்கையே பிறக்கவில்லை..!! குறிஞ்சியை பற்றிய ஆராய்ச்சியில் அகல்விழியும் பங்கெடுத்திருக்கிறாள் என்கிற குறுகுறுப்பான நினைப்புதான் அதற்கு காரணம்..!!

1 Comment

  1. And indefinitely it is not far 🙂

Comments are closed.