மதன மோக ரூப சுந்தரி – இறுதி 22

அப்போதுதான் திடீரென அவளது பார்வையில் அது பட்டது.. அந்த ‘PRIVATE’ ஃபோல்டருக்குள் அடங்கிப் போயிருந்த இன்னொரு ஃபோல்டர்..!! அத்தனை நேரமாய் ஆதிரா அந்த ஃபோல்டரை கவனிக்கவில்லை.. இப்போது அதை பார்க்க நேர்ந்ததும் அவளுக்குள் மீண்டும் ஒரு பதட்டம்..!!

‘இதுல எதும் முக்கியமான ஃபைல்ஸ் இருக்குமோ.. இதை அனுப்பாம விட்டுட்டமே..??’

என்று மனதுக்குள்ளேயே முனுமுனுத்தவாறு.. அவசரமாக அந்த ஃபோல்டரை திறந்து பார்த்தாள்..!! உள்ளே நிறைய புகைப்படங்கள்.. க்ளிக் செய்தாள்.. முதல்படத்தை பார்த்ததுமே அவளது மூளைக்குள் ஒரு சுருக்க்க்…!!!! அடுத்தடுத்த படங்களை பார்க்க பார்க்க.. கொஞ்சம் கொஞ்சமாய் ஒரு உச்சபட்ச அதிர்ச்சிக்கு சென்றாள்.. கண்ணால் காண்பதை நம்பமுடியாமல் அவளது இமைகள் அகலமாய் விரிந்துகொண்டன..!! அவளது மூளையை யாரோ சம்மட்டியால் ஓங்கி ஓங்கி அடிப்பது போலிருந்தது.. இருதயத்தை ஆயிரக்கணக்கான ஊசிக்கற்றைகள் ஒரேநேரத்தில் துளைப்பது போல ஒரு உணர்வு..!! விக்கித்துப்போய் லேப்டாப் திரையை வெறித்துப் பார்த்தவாறு அமர்ந்திருந்தாள்..!!

லேப்டாப்பில் இருந்து பார்வையை நகர்த்தாமலே.. நடுநடுங்குகிற விரல்களால் தனது கைபேசியை எட்டி எடுத்தாள்.. தடுமாற்றத்துடன் அந்த கான்டாக்டை கண்டுபிடித்து கட்டைவிரலால் டயல் செய்தாள்..!! எச்சில் கூட்டி ஒருமுறை விழுங்கிக்கொண்டாள்.. அவளது பார்வை இன்னும் லேப்டாப்பில் தெரிந்த ஃபோட்டோவிலேயே மிரட்சியாக நிலைத்திருந்தது..!!

“சொல்லுங்க ஆதிரா..!!” – அடுத்த முனையில் இருந்து ஒலித்தது கதிரின் குரல்.

“உ..உங்ககிட்ட.. ஒ..ஒன்னு கேக்கணும் கதிர்..” ஆதிராவின் குரலில் எக்கச்சக்க நடுக்கம். அதிர்ச்சியிலிருந்து மீளமுடியாமல் திணறலாகவே பேசினாள்.

“எ..என்னாச்சு.. எ..என்ன கேக்கணும்..!!” கதிரின் குரலிலும் இப்போது ஒரு குழப்பம்.

“எ..என் தங்கச்சியை நீங்க லவ் பண்ணுனீங்கல்ல..??”

“ஆமாம்..!!”

“அ..அவ.. அவளும் உங்களை லவ் பண்ணினாளா..??” ஆதிரா கேட்டுமுடித்த அடுத்த நொடியே, படபடவென பதில் சொன்னான் கதிர்.

“என்ன ஆதிரா இப்படி கேக்குறீங்க.. தாமிரா அதெல்லாம் உங்கட்ட சொல்லலையா..?? அவளுக்கு எப்போவுமே என் மேல லவ் இல்லைங்க.. நான் மட்டுந்தான் அவளை லவ் பண்ணிட்டு இருந்தேன்.. இட்ஸ் ஒன் சைட்..!! நான் என் லவ்வை அவகிட்ட சொன்னப்போ.. அவ வேற யாரையோ லவ் பண்றதா சொல்லி, என் லவ்வை அக்சப்ட் பண்ணிக்க மாட்டேன்னுட்டா..!! பட்.. என்னை பொருத்தவரை அவதான் இன்னும்..” கதிர் சொல்ல சொல்ல, ஆதிராவின் இதயத்துடிப்பு இன்னும் இன்னும் எகிறிக்கொண்டே சென்றது.

“அ..அவ.. யா..யாரை லவ் பண்றேன்னு சொன்னாளா..??”

“இல்லையே.. எவ்வளவோ கேட்டேன்.. சொல்ல மாட்டேன்னுட்டா..!! ஆமாம்.. இதெல்லாம் ஏன் இப்போ கேக்குறீங்க..??”

“இ..இல்ல.. ஒ..ஒன்னுல்ல..!! கட் பண்ணிடுறேன்..!!”

காலை கட் செய்து கைபேசியை விட்டெறிந்தாள் ஆதிரா.. லேப்டாப் திரையையே மீண்டும் மிரட்சியாக வெறித்தாள்..!! அதில்.. அந்த ஃபோட்டோ.. எடுக்கும்போது ஆதிரா, சிபி, தாமிரா என்று மூவரும் ஒருவர் கன்னத்தில் மற்றொருவர் கன்னத்தை வைத்து எடுத்துக்கொண்ட ஃபோட்டோ.. இப்போது அதில் ஆதிராவின் பாகம் கத்தரிக்கப்பட்டிருக்க.. சிபியும், தாமிராவும் மட்டும் கன்னத்தை தேய்த்தவாறு, வெண்பற்கள் பளிச்சிட சிரித்துக் கொண்டிருந்தார்கள்..!!

அத்தியாயம் 24

ஆதிராவின் மூளைக்குள் ஒரு அதகள பிரளயமே நடந்துகொண்டிருந்தது.. அதிர்ச்சியை தாங்கமுடியாமல் அவளது இதயம் அப்படியே ஸ்தம்பித்து போயிருந்தது..!! காலையிலிருந்து எதுவுமே சாப்பிடவில்லை அவள்.. அந்த பசிக்கு வராத மயக்கம், தலைச்சுற்றல் எல்லாம், இந்த படங்களைப் பார்த்தபோது அவளுக்கு வந்து சேர்ந்தது.. கண்கள் இருட்டிக்கொண்டு வருவது போலிருக்க, தலையை இரண்டு கைகளாலும் இறுக்கமாக பற்றிக் கொண்டாள்..!!

அந்த ஃபோல்டர் முழுவதிலும் சிபியே நிறைந்து வழிந்திருந்தான்.. அவனோடு அருகில் இழைந்துகொண்டு பாதிப்படங்களில் தாமிராவும்..!! அத்தனை படங்களிலுமே அவர்களைத்தவிர இன்னொருவர் முகத்தை காணமுடியவில்லை..!! ஒன்று.. சிபி மட்டும் கன்னத்தில் குழிவிழ சிரிக்கிற தனிப்படங்களாக இருந்தன.. இல்லாவிட்டால்.. அவனும் தாமிராவும் அருகருகே நிற்கிறமாதிரி, க்ரூப் ஃபோட்டோக்களில் இருந்து கத்தரித்து எடுக்கப்பட்ட படங்களாக இருந்தன..!! குடும்பத்தில் எல்லோரும் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொள்ளும்போது.. மற்றவர்களுக்கு எந்த உறுத்தலும் வராத மாதிரி.. வெகுஇயல்பாக நகர்ந்து சிபியை அண்டிக்கொண்டு நின்றிருக்கிறாள் என்பது தெளிவாக புரிந்தது..!!

அவற்றில் பெரும்பாலான படங்களை ஆதிரா ஏற்கனவே பார்த்திருக்கிறாள்.. ஆனால் இப்போது.. இந்த மாதிரி ஒரு சூழ்நிலையில்.. பாஸ்வேர்டால் பாதுகாக்கப்பட்டிருக்கிற ஒரு ப்ரைவேட் ஃபோல்டருக்குள்.. அதுவும் மற்றவர்களை கத்தரித்து நீக்கப்பட்ட நிலையில் பார்க்கும்போது.. அந்தப்படங்கள் ஆதிராவுக்குள் ஏற்படுத்திய தாக்கம் வேறுமாதிரியாக இருந்தது.. சிபி மீது தாமிரா கொண்டிருந்த கண்மூடித்தனமான ரகசியக்காதலை, வெளிச்சம் போட்டு காட்டுகிற வகையில் அமைந்திருந்தது..!!

அதிர்ச்சியில் விரிந்த விழிகளும், பதற்றத்தில் படபடக்கும் இருதயமுமாக.. ஆதிரா அந்தப்படங்களை பார்த்தாள்..!! ஒவ்வொன்றாக அவற்றை பார்க்க பார்க்க.. அவளுக்குள் உச்சந்தலையில் யாரோ சுளீர்சுளீரென உளியடிப்பது போலொரு உணர்வு.. அவளது மூளை நரம்புகள் எல்லாம் அரவக்குஞ்சுகளாய் சரசரவென நெளிவது மாதிரியொரு தோற்றம்.. அவளுடைய சிந்தனையோட்டத்தில் அவ்வப்போது பளீர்பளீரென குழப்ப மின்னல்கள் வேறு..!!

மைசூர் அரண்மனைக்கு முன்பாக சிபியும், தாமிராவும் சிரிக்கிற அந்த புகைப்படத்தை பார்க்க நேர்ந்ததும்.. ஆதிராவின் மூளைக்குள் பரவியிருந்த உஷ்ணத்தின் வெப்பநிலை இன்னுமே அதிகரித்தது..!! மறந்து போயிருந்த ஒரு சம்பவத்தை அவளது ஞாபகஅடுக்குகள் தூசுதட்டி புதுப்பிக்க.. அவளுடைய மண்டையோட்டுக்குள் குடைச்சல் எடுக்க ஆரம்பித்தது..!! அந்த உணர்வு உண்டாக்கிய வலியை தாங்கமுடியாமல்.. ஆதிரா அப்படியே இமைகளை சுருக்கிக் கொண்டாள்.. நெற்றியின் இருபுறமும் கைவிரல்களால் அழுத்திக் கொண்டாள்.. பற்களை கடித்து இறுக்கமாக நெரித்துக் கொண்டாள்..!!

ஆதிராவின் மூளை அவளது கட்டுப்பாட்டுக்குள் இல்லை.. அவளுக்குள் உருவான வேதனையை பொருட்படுத்தாமல், அந்த மைசூர் புகைப்படத்துடன் சம்பந்தப்பட்ட ஒரு சம்பவத்தை, மங்கிப்போயிருந்த ஞாபக செல்களில் இருந்து மன்றாடி மீட்டெடுத்தது..!! உடனே.. அந்த சம்பவத்துடன் தொடர்புடைய வேறு சில நிகழ்வுகளும், அடுக்கடுக்காய் அவளது நினைவடுக்குக்குகளின் இடுக்கிலிருந்து படக்படக்கென மேலெழுந்தன..!!

“ஹாஹா.. ஒன்னும் பயப்படாத.. உன் புருஷனை ஒன்னும் நான் வளைச்சுப்போட்ற மாட்டேன்..!!” – கேலிச்சிரிப்புடன் தாமிரா.

“ச்சீ.. நீயெல்லாம் ஒரு தங்கச்சியாடி..??” – ஆவேசமான குரலில் ஆதிரா.

“அக்காஆஆஆ..!!!” – இதயத்தை பிசைவது மாதிரி தாமிராவின் பரிதாபக்குரல்.

ஒரு ஒழுங்கில்லாமல் அங்குமிங்குமாய் துண்டுதுண்டாய் தோன்றிய ஞாபகப்பிசிறுகள்.. பிறகு சரசரவென முழுவடிவம் எடுத்து.. அதனதன் வரிசையில் சென்று கச்சிதமாய் பொருந்திக்கொள்ள.. நடந்தவை மொத்தமும் இப்போது ஆதிராவின் மனதுக்குள் கொஞ்சம் கொஞ்சமாய் விரிந்தன..!!

ஒரு வருடத்திற்கு முன்பு..!! குறிஞ்சி பற்றிய ஆராய்ச்சி தொடர்பாக, சிபியின் முதலாளியை சந்தித்து உதவி கேட்பதற்கென, தாமிரா மைசூர் பயணிக்க இருந்ததற்கு முதல்நாள்..!! அகழிவீட்டில் ஆதிராவும் தாமிராவும் பகிர்ந்துகொண்டிருந்த, இரவில் ஒன்றாக படுத்துறங்குகிற அறை..!!

“அக்காஆஆஆஆ..!!!!”