மதன மோக ரூப சுந்தரி – இறுதி 22

பாத்திரத்திற்குள் மெலிதாக கசிந்திட்ட புகை.. மெல்ல மெல்ல அதை நிரப்பிக் கொண்டிருந்தது.. திரி திரியாய் கிளம்பிய புகை, இப்போது திரள் திரளாய் பாத்திரத்தை அடைத்திருந்தது..!! ஆதிரா தனது மனதையும் பார்வையையும் ஒருமுகப்படுத்தி, அவளது கவனத்தை ஒரே புள்ளியில் ஊற்றிக்கொண்டிருந்தாள்.. அந்த உருவத்தை காணவேண்டும், காணவேண்டும் என்று, தனக்குள் மீண்டும் மீண்டும் முழக்கமிட்டுக் கொண்டிருந்தாள்..!!

ஒருசில நிமிடங்கள்..!! ஆதிரா அந்த பளிங்கு பாத்திரத்தை பார்த்துக்கொண்டே இருக்க.. அறையின் தட்பவெட்பத்தில் இப்போது மெல்ல மெல்ல ஒரு மாற்றம்..!! அத்தனை நேரம் இருந்த ஒரு புழுக்கமான நிலைமை கொஞ்சம் கொஞ்சமாய் அகல ஆரம்பித்தது.. வென்டிலேட்டர் வழியாக சிலுசிலுவென குளிர்காற்று உட்புகுந்து அந்த அறையை நிறைத்துக் கொண்டிருந்தது.. ஆதிராவின் உடல் லேசாக வெடவெடக்க ஆரம்பித்தது..!!

ஆதிரா கவனத்தை சிதறவிடாமல் உற்றுப்பார்த்திருக்க.. செம்பியன் கண்கள் மூடி மந்திரம் உச்சரித்திருக்க.. அந்த அறைக்குள் இப்போது குப்பென்று அந்த வாசனை.. வாடிப்போனாலும் வாசம் போகாத மகிழம்பூவின் வாசனை..!!

அந்த வாசனை வந்து நாசியை தாக்கியதுமே.. தங்களது முயற்சியின் வெற்றியை ஆதிராவால் உணரமுடிந்தது..!! இருந்தாலும் தனது எண்ணங்களை அலைபாயவிடாமல் கட்டுப்படுத்திக் கொண்டாள்.. தொடர்ந்து அந்த சூனியத்தை வெறித்தாள்..!!

“ஷ்ஷ்ஷ்ஷ்.. ஷ்ஷ்ஷ்ஷ்.. ஷ்ஷ்ஷ்ஷ்.. ஷ்ஷ்ஷ்ஷ்.. ஷ்ஷ்ஷ்ஷ்..!!!!”

அறைக்குள் ஒரு அமானுஷ்ய ஓசை.. தரையில் கிடந்த புத்தகம் ஒன்று தடதடத்தது.. மேஜையில் இருந்த குறுவாள் மெலிதாக அசைந்தது..!! மந்திரத்தை உச்சரித்துக்கொண்டே செம்பியன் ஆதிராவின் கைகளை இறுகப்பற்றினார்.. அதேநேரம், ஆதிரா வெறித்துக்கொண்டிருந்த அந்த சூனியப் புள்ளியில் பட்டென்று அந்த உருவம் தோன்றியது.. உடல் முழுதும் சிவப்பு அங்கி போர்த்திய அந்த உருவம்..!! ஒருமாதிரி கலங்கலாக தோன்றி, கொஞ்சம் கொஞ்சமாய் தெளிவான பிம்பமாக மாறிக்கொண்டிருந்தது..!!

அந்த பிம்பத்தை பார்த்ததுமே ஆதிராவின் நாடித்துடிப்பு படக்படக்கென எகிற ஆரம்பித்தது.. அவளது இமைகள் அகலமாக விரிந்துகொள்ள, விடாமல் அந்த பாத்திரத்துக்குள் வெறித்தாள்..!! அவளது இருதயம் தறிகெட்டு அடித்துக்கொண்டது.. உடம்பு சில்லிட்டுப் போயிருந்தது.. மார்புக்கூட்டுக்குள் ஒருவித இறுக்கம்.. நாசியில் ஏறிய மகிழம்பூவின் வாசனையால், மூளைக்குள் ஒருமாதிரி கிறுகிறுப்பு..!!

அப்போதுதான் அவளது காதோரமாய் அந்த குரல் ஒலித்தது.. கிசுகிசுப்பாக.. ஏக்கமாக.. அமானுஷ்யமாக..!! அவள் தங்கை தாமிராவின் குரல்..!!!!

“அக்காஆஆஆ..!!!”

அவ்வளவுதான்..!!!! ஆதிரா அப்படியே மிரண்டு போனாள்.. குறிஞ்சியை எதிர்பார்த்து காத்திருந்தவள், தங்கையின் குரலை சுத்தமாக எதிர்பார்த்திரவில்லை..!! நாடிநரம்பெல்லாம் ஜிவ்வென்று ஒரு சிலிர்ப்பெடுக்க.. நாற்காலியில் இருந்து படக்கென எழுந்தாள்..!! அவள் எழுந்த வேகத்தில் நாற்காலி தரையில் சரிந்து ஓடியது.. ஆதிரா தடுமாறிப்போய் கீழே விழுந்தாள்.. மரமேஜை கடகடவென ஆடியது.. பளிங்கு பாத்திரம் புரண்டு ‘ச்சலீர்ர்ர்’ என்று சப்தம் கிளப்பியது.. சுதாரித்துக்கொண்ட செம்பியன் அதிக சேதாரமில்லாமல் அந்த பாத்திரத்தை பற்றினார்..!! அவசரமாய் ஓடிவந்து ஆதிராவை தூக்கினார்..!!

“எ..என்னம்மா ஆதிரா.. என்னாச்சு..??” பதற்றமாக கேட்டார்.

“தா..தாமிரா.. தாமிரா..” அதிர்ச்சியில் வார்த்தை வராமல் திணறினாள் ஆதிரா.

“தாமிரா..??”

“தா..தாமிராவோட குரல்..”

“என்னது..??”

“தா..தாமிரா.. தாமிரா எங்கிட்ட பேசினா அங்கிள்..!!” ஒருவழியாக ஆதிரா சொல்லிமுடிக்க,

“தாமிராவா..????”

செம்பியன் குழப்பமும், திகைப்புமாய் பார்த்தார்..!! அவருக்கு எதுவும் புரியவில்லை.. அவரது முகம் ஒருமாதிரி வெளிறிப்போய் வெறுமையாக காட்சியளித்தது..!!

‘இந்த ரூமை இப்போ யாரும் யூஸ் பண்றது இல்ல.. தாமிராதான் அப்பப்போ இங்க வந்து அடைஞ்சுப்பா..’

சற்றுமுன்பு தணிகைநம்பி சொன்னது நினைவுக்கு வர.. அந்த அறைக்குள் ஆங்காங்கே சிதறிக்கிடந்த தாமிரா சம்பந்தப்பட்ட பொருட்களையே, ஒருவித மிரட்சியுடன் பார்த்தார் செம்பியன்..!! என்ன நடந்திருக்கக்கூடும் என்று ஓரளவு அவருக்கு பிடிபட்டது.. ஆனால் அதுவும் முழுதாக தெளிவுபடவில்லை..!! தனது தங்கை ஆவியாக வந்து தன்னை அணுகியிருக்கிறாள் என்பது ஆதிராவுக்கு தெளிவாக புரிந்திருந்தது.. அதேநேரம்.. பளிங்குப் பாத்திரத்துக்குள் தோன்றிய அந்த சிவப்பு அங்கி உருவத்தை நினைத்து அவளது சிந்தனையில் ஒரு குழப்பம்..!!

அந்த அறையின் தட்பவெட்பம் இப்போது பட்டென மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியிருந்தது.. மகிழம்பூ வாசனை காணாமல் போயிருந்தது.. காற்றின் ஈரப்பதம் வற்றிப் போயிருந்தது.. அறைக்குள் மறுபடியும் அந்த அனல் காற்றும், புழுங்கல் நெடியும்..!!

ஆதிராவும் செம்பியனும் அந்த ரகசிய அறையைவிட்டு வெளியே வந்தனர்..!! இன்றே இன்னொருமுறை ஆவியை வரவழைப்பது சாத்தியமில்லாத காரியம் என்றார் செம்பியன்.. முடிந்தால் நாளை இன்னொருமுறை முயற்சி செய்து பார்க்கலாம் என்றுவிட்டு, அங்கிருந்து கிளம்பிச்சென்றார்..!! அவர் போனபிறகு.. உள்ளே நடந்த விஷயங்களை மற்றவர்களுக்கு சுருக்கமாக சொல்லிமுடித்தாள் ஆதிரா.. அவள் சொன்னதையெல்லாம் அதிர்ச்சியாகவும், நம்பமுடியாமலும் கேட்டுக்கொண்டிருந்தனர் தணிகைநம்பியும், வனக்கொடியும்..!!

அறைக்குள் நேர்ந்த நிகழ்வினால் ஆதிரா மிகவுமே தளர்ந்து போயிருந்தாள்.. அப்படியே சோபாவில் வீழ்ந்து எங்கேயோ வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள்..!! வனக்கொடியும் தணிகைநம்பியும் ஆளுக்கொரு மூலையில் சோகமாக உறைந்திருந்தனர்..!!

தாமிரா காணாமல்போய் ஒருவருடம் ஆகிறது.. அவள் இன்னும் உயிருடன் இருப்பதற்கான சாத்தியம் மிக மிக குறைவு என்பது.. ஆதிரா முன்னமே அறிந்த ஒன்றுதான்..!! ஆனால்.. தங்கையின் உடல் இன்னும் கண்டுபிடிக்கப்படாத நிலையில்.. அவள் உயிரோடு இருக்கவும் சிறிதளவு வாய்ப்பு இருக்கிறது என்று.. ஆதிராவின் உள்மனதுக்குள் ஒரு நம்பிக்கைத்துளி எப்போதும் ஒட்டிக்கொண்டிருந்தது..!! அந்த நம்பிக்கையும் இப்போது தகர்ந்து போயிருக்க.. அவளது இதயத்துக்குள் ஒரு இனம்புரியாத வலி..!!

சோபாவில் சுணங்கிக் கிடந்த ஆதிராவுக்கு.. சுவற்றில் அறையப்பட்டிருந்த தாமிராவின் புகைப்படம் ஒன்று, எதேச்சையாக பார்வையில் பட்டது..!! தங்கையின் மீதான பாசம் அவளது மனதுக்குள் சர்ரென ஊற்றெடுக்க.. அவளையும் அறியாமல் சோபாவைவிட்டு மெல்ல எழுந்தாள்.. அந்த புகைப்படத்தை நெருங்கினாள்..!! கள்ளம் கபடம் இல்லாத ஒரு வெள்ளைச்சிரிப்பை சிந்திக்கொண்டிருந்த தாமிராவின் முகத்தையே.. சில வினாடிகள் அன்பொழுக பார்த்துக் கொண்டிருந்தாள் ஆதிரா.. அவளது கண்களில் முணுக்கென்று ஒருதுளி கண்ணீர் எட்டிப் பார்த்தது..!!

தங்கையின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்த ஆதிரா திடீரெனத்தான் அதை கவனித்தாள்.. அவள் ஏற்கனவே பலமுறை பார்த்த புகைப்படம்தான்.. இப்போதுதான் அந்தவிஷயம் அவளது புத்தியை சுருக்கென தைத்தது..!! புகைப்படத்தில் தாமிரா அணிந்திருந்த அந்த டி-ஷர்ட்.. அதில் அகலமாய் வாய் திறந்து கர்ஜித்துக் கொண்டிருந்த ஒரு காட்டுப்புலி.. அதன் கீழே பெரிதாக மின்னிய அந்த வாசகம்..!!

“SAVE THE TIGERS..!!”

அவ்வளவுதான்..!! அத்தனை நேரம் சோர்ந்து போயிருந்த ஆதிராவின் மூளை, இப்போது படக்கென விழித்துக்கொண்டது.. தாமிராவோடு தொடர்புடைய பழைய சம்பவங்களை பரபரவென மனதுக்குள் ஓட்டிப்பார்த்தது..!!

“ப்ச்.. சாப்பிட்டுட்டு போகட்டுமே விடு.. ஏன் விரட்டுற..??” – மொட்டைமாடி வடகத்தை, கொத்த வந்த காகத்தை, ஆதிரா விரட்டியடித்தபோது, அக்காவை கடிந்துகொண்டு தாமிரா சொன்னது.

“இனிமே அதை வளக்குறேன் இதை வளக்குறேன்னு எதையாவது வீட்டுக்கு தூக்கிட்டு வா.. அப்ப இருக்கு உனக்கு.. கை ரெண்டையும் வெட்டி அடுப்புல வைக்கிறனா இல்லையான்னு பாரு..!!” – தாமிரா பத்து வயது சிறுமியாக இருந்தபோது, அவள் ஆசையாக வளர்த்த முயல் இறந்துபோக, அந்த சோகத்தில் சாப்பிடாமல் பட்டினி கிடந்தவளை, அவளது அம்மா பூவள்ளி திட்டி தீர்த்தது.

“வாவ்…!! எவ்வளவு அழகா இருக்கு பாரேன்..!!” – டிவியில், சேற்றுக்குள் கிடந்து கர்ணகொடூரமாக வாயைப்பிளந்த முதலையை, கண்கொட்டாமல் பார்த்து ரசித்தவாறு தாமிரா சொன்னது.

டிவி சம்பவம் ஞாபகம் வந்ததும் ஆதிராவின் மூளையில் இன்னொரு பளிச்..!! அவசரமாய் ஓடிச்சென்று, ரிமோட் தேடி எடுத்து, டிவியை ஆன் செய்தாள்..!! அதில் ஓடிய சேனலை தவிர்த்து வேறு சேனல் மாற்ற முயன்றாள்.. முடியவில்லை.. இந்த ஐந்தாறு நாட்களாக ஓடுகிற அதே சேனல்தான் இப்போதும் ஓடிக்கொண்டிருந்தது.. அனிமல் ப்ளானட்..!! ஆதிராவின் மனதுக்குள் மீண்டும் ஒரு ஃப்ளாஷ்பேக்..!!