மதன மோக ரூப சுந்தரி – இறுதி 22

அகழி ரயில் நிலையம்.. மைசூருக்கு செல்கிற அந்த ரயில் புறப்பட தயாரான நிலையில் இருந்தது.. யானையின் பிளிறல் போல ஒருமுறை சப்தம் எழுப்பி ஓய்ந்தது..!! பாட்டிலில் தண்ணீர் நிரப்பிவிட்டு அவசரமாக திரும்பிய ஆதிரா.. எதிர்ப்பட்ட செம்பியன் மீது எதிர்பாராதவிதமாய் முட்டிக் கொண்டாள்..!!

“ஸாரி அங்கிள்..!!”

“ஹாஹா.. பரவாலம்மா..!! ஆமாம்.. என்ன இந்தப்பக்கம்.. ?? ஊருக்கு எங்கயும் போறியா..??”

“நான் இல்ல அங்கிள்.. தாமிரா போறா.. நான் சும்மா வழியனுப்ப வந்தேன்..!!”

“ஓ.. சரி சரி..!! அப்பா, அம்மால்லாம் நல்லா இருக்காங்களா..??”

“ம்ம்.. நல்லா இருக்காங்க அங்கிள்..!!”

“சரிம்மா.. சீக்கிரம் போய் தண்ணியைக் குடு.. வண்டி இப்போ கெளம்பிடும்..!!”

சொல்லிவிட்டு செம்பியன் நகர, ஆதிரா ரயிலை நோக்கி ஓடினாள்.. ஜன்னலோரமாய் அமர்ந்திருந்த தங்கையிடம் தண்ணீர் பாட்டிலை நீட்டினாள்..!! அதை வாங்கிக்கொண்ட தாமிரா, மூடி திறந்து தொண்டையை கொஞ்சம் நனைத்துக் கொண்டாள்.. பாட்டிலை மூடி பேகின் பக்கவாட்டில் செருகியவள், ஈரப்பட்ட உதடுகளை துப்பட்டாவால் துடைத்துக்கொள்ள.. ஆதிரா இப்போது அவளிடம் இயல்பாக கேட்டாள்..!!

“காலைல எப்போடி ரீச் ஆகும்..??”

“அஞ்சு அஞ்சரைக்குலாம் போயிருவான்னு நெனைக்கிறேன்..!!”

“அத்தான் வெளியூர்ல இருக்குறதா சொன்னாங்க.. அதுக்குள்ள வந்துடுவாரா..??”

“வந்துடுவேன்னாரு, ஸ்டேஷன் வந்து பிக்கப் பண்ணிக்கிறேன்னு சொன்னாரு.. பாக்கலாம்..!!”

“ஹ்ம்ம்.. எனக்கு இன்னுமே அவர் என்ன சொல்வாரோன்னு இருக்குடி..!!”

“எதுக்கு..?? கல்யாணத்துக்கா..??”

“ம்ம்ம்..!!!”

ஆதிரா சற்று கவலையாக சொல்ல, அக்காவின் முகத்தையே சில வினாடிகள் கூர்மையாக பார்த்தாள் தாமிரா.. பிறகு, உதட்டில் ஒரு புன்னகையை தவழவிட்டவாறே சொன்னாள்..!!

“ஒன்னு பண்ணலாமா..??”

“என்ன..??”

“காலைல நான் மைசூர் போனதும்.. உனக்கு கால் பண்றேன்.. நீயே டைரக்டா அத்தான்ட்ட பேசுறியா..??”

“ஏய்ய்ய்..!!! எ..என்ன வெளையாடுறியா..?? ம்ஹூம்.. அ..அதுலாம் ஒன்னும் வேணாம்..!!”

“ப்ச்.. ஏன்டி இப்படி வெக்கப்படுற..?? சும்மா பேசு.. ‘நம்ம ரெண்டு பேருக்கும் கல்யாணம்னு பேசிக்கிறாங்க.. எனக்கு சம்மதம்.. என்னை கட்டிக்க உங்களுக்கு சம்மதமா..’ன்னு கேளு..!! அப்படியே.. சின்ன வயசுல இருந்து அவர்ட்ட சொல்லணும் சொல்லணும்னு நெனச்சுட்டு இருக்கியே.. அதையும் சொல்லிடு..!!”

“எதை..??”

“ம்ம்..?? ஐ லவ் யூ அத்தா………ன்..!!!” தாமிரா விழிகளை சுழற்றி, குரலை இழுத்து கிண்டலாக சொல்ல, ஆதிராவின் முகத்தில் இன்ஸ்டன்டாய் ஒரு வெட்கச்சிவப்பு.

“ச்சீய்.. போடி லூசு..!!”

“யாரு..?? நானா..?? ஹ்ம்ம்ம்.. இப்பவும் சொல்லலனா வேற எப்ப சொல்லப்போறியாம்..?? டைரக்டா ஃபர்ஸ்ட் நைட்ல போய், ஐ லவ் யூ சொல்லிக்கலாம்னு அம்மணிக்கு ஐடியாவோ..??”

“ஹையோ.. போடி எனக்கு வெக்கமா இருக்கு.. அப்டிலாம் அவர்ட்ட சொல்ல முடியாது..!!”

“சரி போ.. நான் சொல்லிக்கிறேன்..!!”

“ஏய்ய்ய்ய்..!!”

“ப்ச்.. ஐ லவ் யூ இல்லடி.. கல்யாண மேட்டரை சொல்றேன்னு சொன்னேன்..!! மேட்டரை சொல்லி.. அவர் மனசை தெரிஞ்சுக்கிட்டு.. உடனே உனக்கு கால் பண்ணி சொல்றேன்.. போதுமா..??”

“இ..இல்ல தாமிரா.. வேணாம்..!! அப்பா சொன்னது ஞாபம் இல்லையா.. அப்பாவே அவர்ட்ட பேசட்டும்.. அதுதான் சரியா இருக்கும்.. நீ வாயை மூடிக்கிட்டு கம்முனு இரு..!! புரியுதா..??”

“ம்ம்..!!”

தாமிரா அமைதியாக அமோதித்துக் கொண்டிருக்கும்போதே, ரயில் பெரிதாக ஒரு அலறலை வெளிப்படுத்தியது.. அதைத்தொடர்ந்து தனது சக்கரக்கால்களால் தண்டவாளத்தில் மெல்ல ஊர்ந்தது..!!

“பார்த்து பத்திரமா போடி..!!!”

“சரிக்கா..!!”

ரயில் கொஞ்சம் கொஞ்சமாய் வேகமெடுத்து.. அவ்வப்போது ‘க்கீய்ங்ங்ங்க்.. க்கீய்ங்ங்ங்க்..’ என்று கத்தியவாறே.. தண்டவாளத்தில் தடதடவென ஓட ஆரம்பித்தது..!! கண்ணிலிருந்து தங்கையின் முகம் மறையும்வரை.. கையசைத்தவாறே நின்றிருந்தாள் ஆதிரா..!!

தாமிராவை வழியனுப்பி வைத்துவிட்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தவள், தனது அறைக்குள் சென்று தனிமையில் அடைந்துகொண்டாள்.. கட்டிலில் விழுந்து கல்யாணக் கனவுகளில் மூழ்கிப் போனாள்..!! கண்களின் பார்வை மொத்தமும் அந்தரத்தில் சஞ்சரிக்க.. கைவிரல்களோ கழுத்துச் சங்கிலியை அனிச்சையாக பற்றியிழுக்க.. கவனம் முழுதையும் கற்பனைக்குள் தொலைத்துவிட்டு, காதல் நாயகனுடன் கல்யாணக் கனவு..!!

செய்தி கேள்விப்பட்டு அகழி வந்திருந்த சிபி, மற்றவர்கள் அறியாமல் ஆதிராவை காதல் பார்வை பார்த்தான்.. இவளை சுவற்றோடு சாய்த்து பிடித்து வைத்திருந்தவன், ‘நீ சொல்லலனா என்ன.. நான் சொல்றேன்..!! ஐ லவ் யூ ஆதிரா..!!’ என்று இவளது காதோரமாய் கிசுகிசுத்தான்..!! கழுத்தில் தாலியை கட்டிவிட்டு, இவளுடைய இடுப்புச்சதையை இழுத்தான்.. மணமேடை வலம் வருகையில் விரல்களை அழுத்தி நெரித்தான்.. ஆசீர்வாதத்திற்கென காலில் விழுகையில், அவன்மட்டும் பக்கவாட்டில் திரும்பி இவளைப்பார்த்து கண்சிமிட்டினான்..!!

கையிலிருந்த பாலை வாங்கிக்கொண்டு, கட்டிலில் அமர வைத்தான்.. பால் மீது ஆர்வமில்லாமல், பார்வையால் இவளது அழகை அருந்தினான்..!! உதட்டோடு உதட்டினை வைத்து ஈரமாய் கொஞ்சம் உரசினான்.. உடையினை கையால் பற்றி மெல்லமாய் சற்று நெகிழ்த்தினான்.. கட்டிலில் சாய்த்து மேலே கவிழ்ந்தான்.. கழுத்துப்பகுதியில் அனல்மூச்சோடு மோதினான்..!!

ஆதிரா அன்று இரவு முழுவதும் உறங்கவே இல்லை.. விடியும்வரை இதே ரீதியிலான கனவு.. விழிகளை விரித்து வைத்தவாறே கண்டிட்ட கனவு..!!

அதேஇரவில்.. ரயிலில் பயணித்த தாமிராவும் அக்காவைப் போலவே உறக்கத்தை தொலைத்திருந்தாள்.. ஆதிரா கற்பனையில் திளைத்துக் கொண்டிருந்தாள் என்றால், தாமிரா கண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்தாள்..!! ரயில் படுக்கையில் குப்புறப்படுதிருந்தவள், குலுங்கி குலுங்கி அழுது கொண்டிருந்தாள்.. அவள் எழுப்பிய அழுகையோசை ரயிலின் தடதட சப்தத்துக்குள் காணாமல்போய், அடுத்தவர் காதுகளுக்கு எட்டாமலே காற்றில் கலந்திற்று..!!