மதன மோக ரூப சுந்தரி – இறுதி 22

“காலைல சிங்கமலை வர போலாம்னு இருக்கேன்க்கா.. ஆர்ட்டிக்கிள்க்கு இன்னும் கொஞ்சம் பிக்சர்ஸ் ஆட் பண்ணினா நல்லாருக்கும்னு நெனைக்கிறேன்..!!”

நேற்றிரவு தூங்குகையில் தாமிரா சொன்னது ஆதிராவின் நினைவுக்கு வந்தது..!! தனக்கு வந்த ஞாபகத்தை ஆதிரா அம்மாவிடம் சொல்லாமல்..

“ஹ்ம்ம்.. ஒரு காபி போட்டுத் தர்றியாம்மா.. அப்டியே தலைவலிக்குது..!!” என்று இயல்பாக கேட்டாள்.

“போய் போட்டுக்கடி.. எல்லாத்தையும் யாராவது பண்ணனும் இவளுக்கு..!! சின்னப்புள்ளையா நீ.. கல்யாணத்துக்கு இன்னும் ரெண்டு வாரந்தான் இருக்கு..!!”

“அதைத்தான் நானும் சொல்றேன்.. இன்னும் ரெண்டு வாரந்தான காலைல உன் கையால காபி குடிக்க முடியும்..?? அப்புறம் நானாத்தான போட்டுக்கப் போறேன்..??”

“ம்ம்ம்..?? இப்ப இருந்தே அதுலாம் பழகிக்க.. போ..!!”

“ப்ளீஸ்ம்மா.. போட்டுக் குடும்மா..!!”

“கடுப்பை கெளப்பாம போயிரு ஆதிரா.. உன் அப்பாத்தான் அங்க உக்காந்துட்டு என் உசுரை வாங்கிக்கிட்டு இருக்காருன்னா.. நீ வேற..!!”

“ஏன்.. அப்பாக்கு என்ன..??”

“அந்த ப்ரஸ்க்காரன் நேத்து வந்து கல்யாண பத்திரிகை காப்பி குடுத்துட்டு போனான்.. தப்பு இருந்தா கரக்சன் பண்றதுக்கு..!!”

“ஆமாம்.. நான்கூட பார்த்தேன்..!!”

20

“அதை எங்க வச்சு தொலைச்சார்னு தெரியல.. வீடு பூரா தேடியாச்சு, எங்கயும் காணோம்..!! அது இப்ப உடனே வேணும்னு அங்கருந்து போனுக்கு மேல போனு..!!”

“ஹாஹா..!! சரி சரி.. டென்ஷனாகாம தேடு.. காபி நானே போய் போட்டுக்குறேன்..!!”

சமையலறை நோக்கி நடந்த ஆதிரா.. திரும்பிப் பார்க்காமலே அம்மாவிடம் இயல்பாக கேட்டாள்..!!

“வனக்கொடிம்மா இன்னைக்கும் வரலையா..??”

“வரலடி..!! கல்யாண வேலைலாம் அப்படி அப்படியே கெடக்குது.. இந்தநேரம் பாத்து அந்தப்புள்ளைக்கு உடம்புக்கு முடியாம போய்டுச்சு..!!”

“ஹ்ம்ம்.. என்னாச்சாம் தென்றலுக்கு..??”

“தலைல நீர் கோர்த்துக்குச்சு போல.. நாலு நாளாகியும் சரியாகல.. ஒரே இருமலு, தும்மலு..!! வனக்கொடி மட்டும் மதியமாவது வந்துர்றேன்னா.. பாப்போம்..!!”

“ஓ..!! சரி சரி..!!”

சமையலறை சென்று தானாகவே காபி தயாரித்து தனது அறைக்கு எடுத்து சென்றாள் ஆதிரா.. காபியை உறிஞ்சிக்கொண்டே ஒரு நாளிதழை புரட்டிக்கொண்டிருக்கையில்..

“ட்டிங் ட்டிங்..!!”

என்றொரு சப்தம் அறைக்குள் சன்னமாக ஒலித்தது.. செல்ஃபோனுக்கு வருகிற மெசேஜ் அலர்ட்..!! தனது செல்ஃபோனுக்கு எதுவும் மெசேஜ் வரவில்லை என்பதை உறுதி செய்துகொண்ட ஆதிராவுக்கு.. அருகில் கிடந்து ஒளிர்ந்த தாமிராவின் செல்ஃபோன் இப்போதுதான் பார்வையில் பட்டது..!!

“ஃபோனை இங்கயே விட்டுட்டு போயிட்டாளா..??”

என்று மனதுக்குள்ளேயே முனுமுனுத்தவாறு, வெகு இயல்பாக தங்கையின் செல்ஃபோனை கையில் எடுத்து பார்த்தாள்..!! கதிருடைய எண்ணிலிருந்து இருந்து மெசேஜ் வந்திருந்தது.. கவனத்தை செலுத்தி பார்ப்பதற்கு முன்பே, செல்ஃபோனின் மேற்புறம் மின்னிய மெசேஜ் வரிகள் அவளது கண்களை பளிச்சென்று தாக்கின..!!

“என் காதலைத்தான் ஏத்துக்கல.. காலையாவது பிக்கப் பண்ணலாம்ல..?? ப்ளீஸ் தாமிரா..!!” என்கிற கெஞ்சல் வரிகள்.

அதைப்படித்ததும் ஆதிராவுடைய நெற்றியின் மையத்தில் பட்டென ஒரு சுருக்கம்..!! ‘கதிரிடம் தனது காதலை சொல்லிவிட்டதாகத்தானே தாமிரா சொன்னாள்..?? அப்புறமும் ஏன் இவன் இவ்வாறு குறுஞ்செய்தி அனுப்பியிருக்கிறான்..??’ என்று குழம்பிப்போனாள்..!! எதுவும் புரியாமல் தலையை திருப்பியவளின் பார்வையில் எதேச்சையாகத்தான் அது பட்டது.. அந்த புத்தகம்.. ‘கண்ணாமூச்சி ரே ரே’ என்கிற தலைப்பு வரிகள் மின்னுகிற அந்த புத்தகம்.. அந்த புத்தகத்துக்குள் இருந்து கொஞ்சமாய் வெளிநீட்டிக் கொண்டிருக்கிற அந்த மஞ்சள் நிற காகிதம்..!!

ஆதிராவின் மனதுக்குள் இப்போது மெலிதான அதிர்வலைகள் கிளம்ப ஆரம்பிக்க.. எழுந்து சென்று அந்த புத்தகத்தை கையில் எடுத்தாள்.. நீட்டிக்கொண்டிருந்த அந்த காகிதத்தை வெளியே எடுத்தாள்..!! அவள் சந்தேகப்பட்டது சரிதான்.. கீழே பூவள்ளி தேடிக்கொண்டிருக்கிற அதே காகிதம்தான்.. ஆதிராவுடைய திருமண அழைப்பிதழின் முதல் நகல்..!!

அந்த காகிதத்தை பிரித்து பார்வையை வீசியவள்.. சுருக்கென்று ஒரு வலியை இதயத்துக்குள் உள்வாங்கினாள்..!! ‘மணமகன்: சிபி’ என்பது அவ்வாறே இருக்க.. ‘மணமகள்: ஆதிரா’ என்று அச்சடிக்கப்பட்டிருந்ததில்.. ‘ஆதிரா’வை நீல மையால் அழித்து, ‘தாமிரா’வென்று திருத்தப்பட்டிருந்தது..!! ‘ஐ லவ் யூடா சிபி.. நீ எனக்கு வேணுண்டா..’ என்று காகிதத்தின் குறுக்காக கிறுக்கப்பட்டிருந்தது..!! தாமிராவின் கையெழுத்து..!!

அதை பார்க்க நேர்ந்த ஆதிராவின் மனநிலை, எப்படி மாறிப்போயிருக்கும் என்று விளக்கத் தேவையில்லை.. தங்கையின் மீது அவளுக்கு சுள்ளென்று ஒரு ஆத்திரம்.. ‘எவ்வளவு நெஞ்சழுத்தம் இருக்க வேண்டும் அவளுக்கு..??’ என்பது மாதிரியாக ஒரு ஆவேசம்..!! ‘தான் காதலிப்பவன் என்று தெரிந்தும், இவள் எப்படி அவன்மீது காதலை வளர்த்துக்கொள்ளலாம்..?? அதுவும் இப்போது திருமணம் வரை வந்தபிறகும், இப்படி கிறுக்கி வைத்திருக்கிறாள் என்றால்.. கதிரைத்தான் காதலிக்கிறேன் என்று பொய் சொல்லி என்னை ஏமாற்றியிருக்கிறாள் என்றால்.. எவ்வளவு சின்னத்தனமான திருட்டு புத்தி அவளுக்கு..??’ என்று தங்கையின் மீது பிறந்த கோவத்தின் வீரியம் அதிகமாகிக்கொண்டே சென்றது..!!

21

ஆத்திரம் அதிகரிக்கும்போது மூளையின் செயல்பாடு மங்கிப் போகிறது..!! அந்த மைசூர் அரண்மனை புகைப்படம் ஆதிராவின் மனதுக்குள் இப்போது மீண்டும் வர.. அங்கிருந்து வந்ததிலிருந்தே தாமிரா அடிக்கடி சிபியுடன் கைபேசியில் பேசுவதும் ஞாபகத்துக்கு வர.. தங்கையை பற்றி ஒருவித குறுக்குப்புத்தியுடன் சிந்திக்க ஆரம்பித்தாள்..!! ‘ஒருவேளை.. இவள் எனக்கு துரோகம் செய்கிறாளோ..?? வெளியே சிரித்தாலும், உள்ளுக்குள் இந்த கல்யாணத்தை தடுத்து நிறுத்திட துடிக்கிறாளோ.. அதற்காகத்தான் அந்த மைசூர் பயணமோ..?? அத்தானின் மனதை மயக்க முயல்கிறாளோ.. அவருடன் எப்படி உரசிக்கொண்டு நின்றிருந்தாள்..?? இப்போது இங்குவந்தும் தினசரி அவரை தொல்லை செய்கிறாளோ.. அக்காவை கழற்றிவிட்டு தன்னை ஏற்றுக்கொள்ள கெஞ்சுகிறாளோ..??’

ஆதிராவின் புத்தி அவ்வாறு தடம் மாறி சிந்திக்க.. தாமிராவின் மீது ஒரு தாங்கொணா வெறுப்பு கலந்த ஆத்திரம் பிறந்தது..!! தங்கையை உடனே சென்று பார்த்து, நாக்கை பிடுங்கிக்கொள்கிற மாதிரி, அவளை நான்கு கேள்விகள் கேட்கவேண்டும் போலிருந்தது..!! ஆத்திரம் அவளது கண்ணை மறைக்க.. அவசரமாய் தனது அறையில் இருந்து கிளம்பினாள்..!! வீட்டின் பின்புற வாசலில் இருந்து வெளிப்பட்டு.. சிங்கமலை செல்கிற சாலையை அடைந்தாள்..!!

ஒரு கையில் அவளது செல்ஃபோன்.. இன்னொரு கையில் அந்த மஞ்சள் காகிதம்.. கண்களில் ஒரு கோபக்கனல்.. உடம்பின் ஒவ்வொரு அணுவிலும் அப்படி ஒரு ஆவேசம்..!! அந்த குறுகிய மலைப்பாதையில் விடுவிடுவென நடந்து.. சிங்கமலையின் உச்சி நோக்கி மேலேறிக் கொண்டிருந்தாள்..!!

சிறிது தூரம் சென்றிருக்கையிலேயே.. சற்று தொலைவில்.. வேறொரு திசையில் இருந்து வனக்கொடி வருவது தெரிந்தது.. அவளது கைகள் நிறைய வெள்ளைநொச்சி இலைகள்..!! ஆதிரா செல்வதை தூரத்தில் இருந்து பார்த்த வனக்கொடிக்கு.. அவளது நடையில் தெரிந்த வேகம் சற்றே உறுத்தலாக தோன்றியது..!!

“ஆதிராஆஆ.. ஆதிராம்மா..!!”

அங்கிருந்தே சப்தம் எழுப்பினாள்..!! வனக்கொடி அழைப்பதை கண்டுகொள்ளாமல், சரசரவென தொடர்ந்து மேல்நோக்கி நடந்துகொண்டிருந்தாள் ஆதிரா..!! வனக்கொடி இப்போது ஓட்டமும் நடையுமாக வந்து ஆதிராவை வழிமறித்தாள்.. அவளது கையை பிடித்துக்கொண்டு..

“எ..என்னம்மா.. என்னாச்சு.. எங்க போயிட்டு இருக்க..??” என்று பதற்றமாக கேட்டாள்.

“ஒன்னுல்லம்மா.. கையை விடுங்க..!!”

“என்னன்னு சொல்லுமா.. ஏன் மூஞ்சி ஒரு மாதிரி இருக்கு..??”

“ஐயோ.. ஒன்னுல்ல.. நீங்க வீட்டுக்கு போங்க.. எனக்கு இங்க ஒரு வேலை இருக்கு..!!”

“என்ன வேலை..??”

“வந்து சொல்றேன்.. மொதல்ல கையை விடுங்க..!!”

“சொல்லும்மா.. எனக்கு அப்டியே நெஞ்சு அடிச்சுக்குது..!!”

“ப்ச்.. சொல்றேன்ல.. விடுங்க கையை..!!”

உடம்பை முறுக்கிக்கொண்டு வனக்கொடியின் கையை பலமாக உதறித் தள்ளினாள் ஆதிரா.. தடுமாறிப்போன வனக்கொடி கால்கள் பின்னிக்கொள்ள தரையில் சரிந்தாள்.. ஒரு சிறிய பள்ளத்தில் கடகடவென உருண்டாள்..!!

வனக்கொடியை திரும்பிப்பார்க்கிற மனநிலையில் ஆதிரா அப்போது இல்லை.. விறுவிறுவென தனது நடையை தொடர்ந்தாள்..!! வனக்கொடி எழுந்து பார்ப்பதற்கு முன்பே.. அவளது கண்பார்வையில் இருந்து மறைந்து போயிருந்தாள்..!!

“ஆதிராம்மா.. ஆதிராம்மா..!!”