மதன மோக ரூப சுந்தரி – இறுதி 22

தணிகைநம்பி வேறொரு எண்ணத்துடன் அகழி வந்திருந்தார்.. மகளை உடனடியாக மைசூர் அழைத்து செல்வதுதான் அது..!! ஆதிராவிடம் அந்த எண்ணத்தை சொன்னபோது.. அவள் கொஞ்சம் கூட யோசிக்கவில்லை, முடியாதென மறுத்தாள்..!!

“இ..இல்லப்பா.. நான் அகழியை விட்டு வரமாட்டேன்..!!”

“சொல்றதை கேளுமா.. இந்த ஊர் உனக்கு வேணாம்.. இங்க இருக்குற ஒவ்வொரு நிமிஷமும் எனக்கு சரியாப்படல..!! உனக்கும் ஏதாவது ஒன்னுன்னா.. என்னாலயும், உன் அம்மாவாலயும் தாங்கிக்கவே முடியாதுமா..!! அவளும் என்கூட கெளம்புறேன்னா.. உன்ன கையோட கூட்டிட்டு வந்துடுறேன்னு சொல்லித்தான் அவளை அங்கேயே விட்டுட்டு வந்தேன்..!! கெளம்புமா.. நாம போயிறலாம்..!!”

“எப்படிப்பா..?? அவரை இப்படி இங்க தொலைச்சுட்டு..”

“போலீஸ் இருக்காங்க.. திரவியம் இருக்கான்.. நம்ம மாப்ள இருக்காரு.. சிபியை அவங்க தேடிக்கண்டுபிடிப்பாங்க..!! இப்போதைக்கு உன்னோட பாதுகாப்புதான் எங்களுக்கு ரொம்ப முக்கியமா படுதுமா.. அது மைசூர்லதான் கெடைக்கும்.. வாம்மா.. போலாம்..!!” கனிவுடன் தணிகைநம்பி சொல்ல, முகிலனும் அவருடன் சேர்ந்துகொண்டு,

“மாமா சொல்றது சரிதான்னு தோணுது ஆதிரா.. நீ இங்க இருக்குறது அவ்வளவு நல்லது இல்ல.. மாமாவோட மைசூர் கெளம்பு..!! சிபியை தேடுறதை நாங்க பாத்துக்குறோம்..!!” என்று ஆதிராவுக்கு அறிவுறுத்தினான்.

“இல்லத்தான்.. என் முடிவை நான் மாத்திக்கிறதா இல்ல..!!” உறுதியாக மறுத்தாள் ஆதிரா.

“பிடிவாதம் பிடிக்காத ஆதிரா..!!”

“இது பிடிவாதம் இல்லத்தான்.. வைராக்கியம்..!! அகழி வர்றதுல அவருக்கு சுத்தமா இஷ்டம் இல்ல.. வேணாம் வேணாம்னு எவ்வளவோ சொன்னாரு..!! அதெல்லாம் கொஞ்சம்கூட காதுகுடுத்து கேட்காம.. அடம்புடிச்சு அவரை இங்க கூட்டிட்டு வந்தேன்..!! அப்படி கூட்டிட்டு வந்து.. இப்படி இந்த குறிஞ்சிட்ட அவரை பறிகுடுத்துட்டு.. நான் மட்டும் இங்க இருந்து கெளம்ப எனக்கு மனசு இல்ல..!! என்ன ஆனாலும் சரி.. அவர் இல்லாம அகழியை விட்டு ஒரு அடிகூட நான் எடுத்து வைக்க மாட்டேன்..!!”

ஆதிரா தீர்க்கமாக சொல்ல, அவளையே திகைப்பாக பார்த்தனர் தணிகைநம்பியும், முகிலனும்..!! அவளது வார்த்தைகளில் தெரிந்த உறுதி.. அவள் வரமாட்டாள் என்று உரக்க சொல்லின..!! அதை புரிந்துகொண்ட தணிகைநம்பியும், இப்போது சற்றே தளர்வான குரலில் சொன்னார்..!!

“எ..என்னம்மா ஆதிரா.. இப்படி சொன்னா அப்பா என்ன செய்றது..?? ஒருவருஷம் முன்னாடி தாமிரா.. இப்போ சிபி..!! எங்களுக்குன்னு மிஞ்சி இருக்குறது நீ மட்டுந்தானம்மா..?? உன்னை பத்திரமா பாத்துக்கனும்னு இந்த அப்பா நெனைக்கக்கூடாதா..??”

“என்னை புரிஞ்சுக்கங்கப்பா.. ப்ளீஸ்..!! அந்த குறிஞ்சி எங்கிட்ட விளையாடுறா.. எங்கிட்ட இருந்து என்னவோ எதிர்பாக்குறா.. அது என்னன்னு தெரிஞ்சுக்கணும்..!! எனக்கு இன்னும் நெறைய கேள்விகளுக்கு விடை தெரியலப்பா.. அதெல்லாம் தெரிஞ்சுக்குற வரைக்கும் இங்கிருந்து நான் நகர்றதா இல்ல..!!”

“எ..என்னம்மா சொல்ற நீ..?? எனக்கு புரியல..!!”

“தாமிராவுக்கு என்னாச்சுன்னு இன்னும் சரியா தெரியலப்பா.. மணிமாறன்தான் காரணமா இல்ல குறிஞ்சியான்னு இன்னும் தெளிவா புரியல..!! ஒருவேளை குறிஞ்சியா இருந்தா.. அவ மேல அவ்வளவு நல்ல அபிப்ராயம் வச்சிருந்தவ நம்ம தாமிரா.. குறிஞ்சிக்கு நடந்த கொடுமையை இந்த உலகத்துக்கு சொல்லனும்னு நெனச்சவ.. அப்படிப்பட்ட தாமிராவை ஏன் அந்தக்குறிஞ்சி தூக்கிட்டு போகணும்..?? தங்கச்சியை தூக்கிட்டு போனவ.. நான் ஒரு கஷ்டத்துல இருக்குறப்போ என்னை ஏன் வந்து காப்பாத்தணும்..?? என்னை காப்பாத்தினவ.. அடுத்தநாளே என் புருஷனை ஏன் தூக்கிட்டு போகணும்..??”

“………………………….”

“எனக்கு எதுவும் புரியலப்பா.. எதுவும் புரியல..!! எவ்வளவோ யோசிச்சும் இந்த கேள்விக்குலாம்..”

சொன்னதை முடிக்காமலே பட்டென பாதியில் நிறுத்தினாள் ஆதிரா.. அவளுடைய மூளை திடீரென எதையோ கூர்மையாக யோசிக்க ஆரம்பித்தது..!! இரண்டு நாட்களுக்கு முன்பாக, இதே மாதிரியான ஒருகேள்வியை அவள் கேட்டபோது, அதற்கு செம்பியன் சொன்ன பதில் இப்போது ஞாபகத்துக்கு வந்தது..!!

“இதுதான் பேய், இப்படித்தான் ஆவிகள்’னு.. நம்மால அவ்வளவு ஈசியா எந்த முடிவுக்கும் வந்துட முடியாது..!! மனுஷங்களோட மனநிலைமை, குணாதிசயம், நியாயதர்மம்லாம்.. ஆவிகளுக்கு பொருந்தாது ஆதிரா.. அதனாலத்தான் அதை அமானுஷ்ய சக்தின்னு சொல்றோம்..!! பேய்ங்க எந்த நேரத்துல எதை நெனைக்கும், என்ன பண்ணும்னு.. எப்படி நம்மால உறுதியா சொல்ல முடியும்..?? ஆவிகளோட நியாயம் அதுகளுக்குத்தான் புரியும்.. நாம புரிஞ்சுக்கணும்னு நெனைச்சா.. அது ரொம்ப கஷ்டம்..!!”

அது ஞாபகத்துக்கு வந்ததுமே ஆதிராவின் முகத்தில் ஒரு சின்ன மாற்றம்.. அத்தனை நேரம் என்ன செய்வது என்றே விளங்காமல் இருண்டு போயிருந்த அவளது முகத்தில், லேசான ஒரு வெளிச்சக் கீற்று..!! மகளின் முகமாற்றத்தை கவனித்த தணிகைநம்பி,

“என்னம்மா.. என்னாச்சு..??” என்று கேட்க, ஆதிரா என்ன நினைத்தாளோ,

“நா..நான்.. நான் செம்பியன் அங்கிளை பாக்கணும்ப்பா..!!” என்றாள். அவளது குரலில் இப்போது ஒரு புதுவித நம்பிக்கை சிறிதளவு கலந்திருந்தது.