மதன மோக ரூப சுந்தரி – இறுதி 22

தனியே நின்றவாறு தலையை திருப்பி திருப்பி பார்த்து கத்திய வனக்கொடி.. ஆதிரா எந்தப்பக்கம் சென்றாள் என்பது தெரியாமல், திசைதப்பிப்போய் வேறொரு பாதையில் ஓட ஆரம்பித்தாள்..!!

அதேநேரத்தில்.. தாமிரா சிங்கமலையில் தனியாக அமர்ந்து அழுதுகொண்டிருந்தாள்..!! சிபி தினசரி அவளிடம் பேசி தனது காதலை வலியுறுத்தியது, அவளது மனநிலையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது.. அக்கா மீதான அன்பும், சிபி மீதான காதலும் அவளது மனதுக்குள் ஒன்றோடொன்று மோதி சண்டையிட்டுக் கொண்டிருந்தன..!! இரண்டு வாரங்களுக்கு முன்பு தெளிவான ஒரு மனநிலையில் இருந்தவள்.. இப்போது என்ன முடிவு எடுப்பது என்றே அறியாதவளாய் குழம்பிப் போயிருந்தாள்..!!

அதன்பிறகு ஒரு ஐந்தே நிமிடங்களில் ஆதிரா சிங்கமலையின் உச்சிக்கு வந்து சேர்ந்தாள்.. எங்கேயோ வெறித்து பார்த்தவாறு அமர்ந்திருந்த தாமிராவின் எதிரே படக்கென சென்று நின்றாள்.. என்னவென்று புரியாமல் அவள் திகைப்பாக பார்க்க, கையிலிருந்த அந்த மஞ்சள் காகிதத்தை, அவளுடைய முகத்தில் கசக்கி விட்டெறிந்தாள்..!!

“ச்சீய்.. நீயெல்லாம் ஒரு தங்கச்சியாடி..??” என்று எடுத்ததுமே சீறினாள்.

என்ன நடந்திருக்கிறது என்பதை புரிந்துகொள்ள, தாமிராவுக்கு அதிக அவகாசம் தேவைப்படவில்லை.. பட்டென புரிந்துகொண்டாள்..!! அவ்வாறு புரிந்ததுமே.. தளர்ந்துபோய் மெல்ல எழுந்தவள், தடுமாற்றமாக அக்காவிடம் சொன்னாள்..!!

“அ..அவசரப்படாதக்கா.. நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளு..!!”

“போதுண்டி.. நீ சிரிச்சு சிரிச்சு பசப்புனதுலாம் போதும்..!! இன்னும் என்ன சொல்லப்போற.. என்ன சொல்லி நம்பவச்சு, என் கழுத்தை அறுக்கப்போற..??”

“என்ன பேசுற நீ..?? நான் என்ன நம்பவச்சு கழுத்தை அறுத்துட்டேன்..??”

“பின்ன இதுக்கு என்னடி அர்த்தம்..??” கசக்கிப்போட்ட காகிதத்தை கைநீட்டி ஆதிரா கேட்க,

“அ..அது.. நா..நானும் அத்தானை லவ் பண்றேன்னு அர்த்தம்..!!” தாமிரா திக்கித்திணறி சொன்னாள்.

“நான் சின்ன வயசுலே இருந்தே அவரை லவ் பண்றேன்..!!”

“நானுந்தான்க்கா.. நீ எங்கிட்ட சொல்லிட்ட.. நான் வெளில சொல்லல.. அவ்வளவுதான்..!! நீ அவர்மேல எவ்வளவு ஆசை வச்சிருக்கியோ.. நானும் அவர் மேல அதே அளவு ஆசை வச்சிருக்கேன்..!!”

“ஓ..!! அந்த ஆசைலதான் அந்த மாதிரி வேலைலாம் பண்ணுனியா..??” குத்தலாக கேட்டாள் ஆதிரா.

“எந்த மாதிரி வேலை..??” தாமிராவிடமும் இப்போது வேகம் கூடியிருந்தது.

“நடிக்காதடி..!! ஃபோட்டோலயே அப்படி உரசிக்கிட்டு நிக்கிற.. நேர்ல என்ன பண்ணிருப்ப..?? கூடப்பொறந்த அக்காவுக்கே துரோகம் பண்ண துணிஞ்சிட்டல..?? நீ மைசூர் போனதே அவரை மயக்குறதுக்குத்தான..??”

“ச்சீய்.. வாயை கழுவுக்கா.. அசிங்கமா பேசாத..!! மைசூர்ல என்ன நடந்துச்சுன்னு உனக்கு தெரியுமா..??”

“என்ன நடந்திருக்கும்.. நான் சொன்னதுதான் நடந்திருக்கும்..!! அதான் இங்கவந்தும் இன்னமும் டெயிலி அவர் மனசை கரைக்க ட்ரை பண்ணிட்டு இருக்கியே..??”

“அறிவில்லாம பேசாதக்கா..!! மொதல்ல மைசூர்ல என்ன நடந்துச்சுன்னு தெரிஞ்சுட்டு பேசு..!!”

“சரி சொல்லு.. என்ன நடந்துச்சு..??”

இப்போது தாமிரா மைசூரில் நடந்த சம்பவங்களை அக்காவுக்கு சுருக்கமாக எடுத்து கூறினாள்.. ஆரம்பத்தில் சாதாரணமாக கேட்டுக்கொண்ட ஆதிரா, பிறகு மெல்ல மெல்ல முகம் மாறினாள்..!! தங்கையை பற்றி தான் நினைத்தது தவறோ என்கிற குழப்பம் ஒருபுறம்.. பொய்யை சொல்லி ஏமாற்றுகிறாளோ என்கிற குறுகுறுப்பு இன்னொருபுறம்..!! சிபி தாமிராவைத்தான் காதலிக்கிறான் என்ற செய்தியை ஆதிராவால் சுத்தமாக நம்பமுடியவில்லை.. நம்புவதற்கும் அவள் விரும்பவில்லை.. இதில் ஏதோ சூழ்ச்சி இருக்கிறது என்றே நினைத்தாள்..!!

“அத்தான் என்னைத்தான்க்கா லவ் பண்றாரு..!! அன்னைக்கு அவரை கெஞ்சி.. கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லவச்சதே நான்தான்.. ஆனா அவர் முழுமனசா சரின்னு சொல்லல..!! இப்பவும் அவர் மனசு பூரா நான்தான் இருக்கேன்.. இந்தக் கல்யாணத்துல அவருக்கு இஷ்டம் இல்ல..!! என் மனசை மாத்திக்க சொல்லி, அவர்தான் தெனந்தெனம் என்னை கெஞ்சிக்கிட்டு இருக்காருக்கா..!!” தாமிரா சொல்லி முடிக்க

313

“இ..இல்ல.. நீ பொய் சொல்ற.. நான் நம்பமாட்டேன்..!!” ஆதிராவிடம் ஒரு பதற்றம்.

“நான் ஏன் பொய் சொல்லணும்..?? சரி.. கைலதான் ஃபோன் வச்சிருக்கல.. அப்படியே அத்தான் நம்பருக்கு அடிச்சு கேளு.. முழுமனசோடதான் இந்த கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னிங்களான்னு கேளு.. என்ன சொல்றார்னு பார்ப்போம்..!!”

“…………………” செல்ஃபோனை உயர்த்திய ஆதிராவின் கை, டயல் செய்யாமல் அப்படியே தயங்கி நின்றது.

“ம்ம்ம்.. போடு.. பேசலாம்.. மூணு பேரும் பேசி இன்னைக்கு ஒரு முடிவு எடுத்துடலாம்..!!”

தாமிரா அவ்வாறு துரிதப்படுத்த.. ஆதிராவுக்கு இப்போது தங்கையின் வார்த்தைகளில் ஒரு நம்பிக்கை வந்திருந்தது..!! அதேநேரம்.. ‘சிறுவயது முதலே சிபியை திருமணம் செய்துகொள்ள நினைத்த தனது ஆசைக்கு ஆபத்து வந்துவிடுமோ’ என்பது மாதிரியான ஒரு பதற்றமும் அதிக அளவில் வந்திருந்தது..!! அவளுடைய உடல் மெலிதாக வெடவெடக்க.. எச்சில் கூட்டி ஒருமுறை விழுங்கிக்கொண்டாள்..!!

“என்ன யோசிக்கிற.. ஃபோன் பண்ணு..!!”

“இ..இல்ல.. நான் பண்ணல.. நீ சொல்றதை நம்புறேன்..!!”

ஆதிரா சொல்லிவிட்டு அமைதியாக தலையை குனிந்துகொண்டாள்.. அவள் மனதுக்குள் இப்போது ஒரு குற்ற உணர்வு..!! தாமிரா அக்காவின் முகத்தையே கூர்மையாக பார்த்துக் கொண்டிருந்தாள்.. அவளை நம்பவைத்துவிட்ட திருப்தி ஒருபுறம் இருந்தாலும், அத்தனை நேரம் அவள் அள்ளிவீசிய வார்த்தைகள் தந்த வேதனையும் இன்னொருபுறம் அதிகமாவே இருந்தது..!! காயம்பட்டு நொந்துபோனவளாய் ஆதிராவிடம் சொன்னாள்..!!

“என்னல்லாம் சொல்லிட்டக்கா என்னை பார்த்து.. என்னைப்பத்தி எப்படிலாம் நெனச்சுட்ட..?? பசப்புறவ.. துரோகம் பண்றவன்னு..!! எப்படிக்கா அப்படிலாம் உன்னால பேச முடிஞ்சது..??”

“……………………………” ஆதிரா பதிலெதுவும் பேசவில்லை. குற்ற உணர்வில் குனிந்த தலை குனிந்ததாகவே இருந்தது.

“நீயெல்லாம் ஒரு தங்கச்சியான்னு கேட்டுட்டல..?? சின்னவயசுல இருந்து நான் உனக்காக என்னல்லாம் பண்ணிருக்கேன்..??”

“……………………………”

“உன் கழுத்துல போட்ருக்குறியே அந்த முத்துமாலை.. அது உன்கிட்ட எப்படி வந்துச்சுன்னு ஞாபகம் இருக்கா..??”

“……………………………”

“நீ கட்டியிருக்குற சேலை.. கைல வச்சிருக்குற செல்ஃபோன்.. காதுல தொங்குற ஜிமிக்கி மொதக்கொண்டு நான் உனக்கு விட்டுக் குடுத்ததுடி..!! எல்லாம்.. உன் மனசுக்கே தெரியாம உனக்கு நான் விட்டுக் குடுத்தது..!!” தாமிரா திடீரென சீற்றமாக சொல்ல,

“……………………………” ஆதிரா அவளையே மிரட்சியாக பார்த்தாள்.

தாமிராவின் முகம் இப்போது பட்டென உணர்ச்சியை மாற்றிக் கொண்டது.. ஆவேசம் கொப்பளித்த அந்த முகத்தில் இப்போது ஒரு பரிதாபம் பொங்கி வழிந்தது.. கண்ணிரண்டிலும் கண்ணீர் தளும்ப சொன்னாள்..!!

“அத்தானையும் அந்த மாதிரிதான் உனக்கே விட்டுக் குடுத்துடலாம்னு நெனைச்சேன்.. ஆனா என்னால முடியலக்கா..!! அவர் என்னை லவ் பண்றார்னு தெரியிறவரைக்கும் எனக்கும் ஒன்னும் தெரியல.. ஆனா அது தெரிஞ்சதுக்கப்புறம்.. ரொம்ப கஷ்டமா இருக்குதுக்கா..!! மனசுக்குள்ள ஆசையை வச்சுக்கிட்டு.. வெளில என்னால வேஷம் போட முடியல..!! ‘என காதலை ஏத்துக்கோ’ன்னு அவர் கெஞ்சுறப்போ.. சத்தியமா என்னால முடியலக்கா..!! ‘நானும் உங்களை லவ் பண்றேன் அத்தான்’னு ஃபோன்லயே கத்தனும் போல இருக்கும்..!! இப்ப வரைக்கும் நான் அதை செய்யல.. ஏன்…?? எல்லாம் உனக்காகத்தான்..!!”

“……………………………”

314

“இனிமேயும் என்னால நடிக்க முடியாதுக்கா.. தெனந்தெனம் இந்த வேதனையை என்னால தாங்க முடியல..!! எனக்கு அத்தான் வேணும்க்கா.. ப்ளீஸ்..!!”

ஆதிராவை கையெடுத்து கும்பிட்டு கெஞ்சலாக சொல்லி முடித்தாள் தாமிரா..!! அதுவரை குற்ற உணர்வுடன் தலை கவிழ்ந்திருந்த ஆதிரா.. ‘எனக்கு அத்தான் வேணும்க்கா’ என்று தாமிரா சொன்னதுமே.. வெடுக்கென நிமிர்ந்து பார்த்தாள்..!! சிறுவயதிலிருந்தே சிபி மீது அவள் கொண்டிருந்த கண்மூடித்தனமான காதல்.. உடன்பிறந்த தங்கையையே இப்போது எதிரியாக காட்டியது..!! உடம்பை விறைப்பாகவும், முகத்தை முறைப்பாகவும் வைத்துக்கொண்டு தாமிராவிடம் சொன்னாள்..!!

“இங்க பாருடி.. நான் உன்னைப்பத்தி தப்பா பேசினதுக்கு மொதல்ல என் மனசார மன்னிப்பு கேட்டுக்குறேன்.. என்னை மன்னிச்சிடு.. ப்ளீஸ்..!! அதுமாதிரி.. இத்தனை நாளா எனக்கு என்னன்னவோ விட்டுக்குடுத்தேன்னு சொல்றியே.. அதுக்கும் ஒரு பெரிய தேங்க்ஸ் சொல்லிக்கிறேன்.. தேங்க்யூ ஸோ மச்..!! ஆனா.. அதுக்குலாம் பரிகாரமா அத்தானை உனக்கு விட்டுக் குடுக்கனும்னு சொன்ன பாத்தியா.. அது மட்டும் என்னால முடியாது..!!”

“அத்தான் எனக்கு வேணும்னுதான் சொன்னேன்.. அதுக்காக உன்னை விட்டுக்குடுக்க சொல்லல..!!”

“அ..அப்புறம்..??”

ஆதிரா குழப்பமாக கேட்க, தாமிரா சற்றே நிதானித்தாள்..!! ஒரு சில வினாடிகளுக்கு அப்புறம்.. குரலை தாழ்த்திக்கொண்டு தடுமாற்றமாக சொன்னாள்..!!

“நா..நாம.. நாம ரெண்டு பேருமே அவரை கல்யாணம் பண்ணிக்கலாம்.. ஓகே வா..??” கேட்டுவிட்டு தாமிரா அக்காவை ஏறிட, அவளுக்கோ தங்கை மீது சுள்ளென்று ஒரு கோபம்.

“உனக்கென்ன பைத்தியமாடி..??” என்று எரிந்து விழுந்தாள்.

“ஆமாம் பைத்தியந்தான்..!! அத்தான் மேல எனக்கு அவ்வளவு ஆசை..!! இப்படி ஒண்ணுமே இல்லாம இருக்குறதுக்கு.. ரெண்டாவது பொண்டாட்டியா இருக்கக்கூட எனக்கு சம்மதம்..!! நீயும் அவரை ரொம்ப லவ் பண்ற.. நானும் அவரை ரொம்ப லவ் பண்றேன்.. ரெண்டு பேரும் சேர்ந்து அவரை ரொம்ப நல்லா பாத்துக்கலாம்..!! ஒருத்தொருக்கொருத்தர் போட்டி பொறாமை இல்லாம.. அவங்கவங்க லவ்வை நல்லவிதமா ஷேர் பண்ணிக்கலாம்..!!” தாமிராவின் நியாயத்தை ஆதிராவால் புரிந்துகொள்ளவே முடியவில்லை.

“ச்சீய்.. பேசுற பேச்சைப்பாரு.. வெக்கமா இல்ல..?? பைத்தியந்தான்டி புடிச்சிடுச்சு உனக்கு..!!”