மதன மோக ரூப சுந்தரி – இறுதி 22

அத்தியாயம் 23

ஆதிரா செம்பியனை உடனடியாக நேரில் சென்று பார்க்கவில்லை.. முதலில் தொலைபேசியில்தான் அவரை அழைத்து பேசினாள்..!! அவருக்கு ஏற்கனவே சிபி காணாமல் போன விஷயம் தெரிந்திருந்தது.. அதற்கான தனது வருத்தத்தை முதலில் தெரிவித்துவிட்டே, அழைப்பின் நோக்கம் பற்றி கேட்டார்..!! ஆவிகளைப் பற்றிய தனது புரிதலுக்கு உதவுமாறு ஆதிரா கேட்டுக்கொண்டாள்.. எப்படியாவது அந்த குறிஞ்சியை தேடிச்சென்று தனது கணவனை மீட்கவேண்டும் என்று சொன்னாள்..!! அதற்கு செம்பியன் சொன்ன பதில் இதுதான்..

“ஆவிகளை நாம தேடிப்போறது ரொம்ப கஷ்டம் ஆதிரா.. அதுங்கள நம்மளத்தேடி வரவைக்கிறதுதான் ஈஸியான வழி..!!”

“ஓ..!! அப்போ குறிஞ்சியை நம்மளத்தேடி வரவைக்க முடியுமா..??”

“முடியும்னுதான் நான் நம்புறேன்..!! வரவைக்கிறது மட்டும் இல்ல.. பேசவும் வைக்கலாம்.. குறிஞ்சி மனசுல என்ன நெனைச்சிருக்கான்னு தெரிஞ்சுக்கலாம்..!! அதுதான உனக்கு வேணும்..??”

“ஆமாம் அங்கிள்.. அதுதான் எனக்கு வேணும்..!! முடியுமா..??”

“முடியுதான்னு பாக்கலாம்.. முயற்சி செஞ்சு பாக்கலாம்..!!”

“எப்படி..??”

“சொல்றேன்..!!”

ஆவியை நேரில் வரவைத்து பேசுகிற ஒரு முறையைப்பற்றி செம்பியன் தொலைபேசியிலேயே ஆதிராவுக்கு விளக்கினார்.. அந்தமுறையில் தனக்கு இருக்கிற அனுபவத்தையும், நம்பிக்கையையும் பற்றி சொன்னார்.. ஆதிராவுக்கு திருப்தியாக இருக்கும் பட்சத்தில் அதை முயன்று பார்க்கலாம் என்று தெரிவித்தார்..!! அவர் விளக்கி சொன்னவிதம் ஆதிராவுக்கு நம்பிக்கையையும், திருப்தியையும் கொடுத்திருந்தது.. உடனே சம்மதித்தாள்.. தனது வீட்டுக்கு வருமாறு அழைப்பு விடுத்துவிட்டு, தொலைபேசி அழைப்பை துண்டித்தாள்..!!

அன்று மாலை..!! ஆதிராவின் வீட்டிலிருந்து முகிலனின் குடும்பத்தினர் கிளம்பி சென்றிருந்தனர்.. ஃபேக்டரியில் ஏதோ பிரச்சினை என்று திரவியமும் கழன்றுகொண்டிருந்தார்..!! நீண்டநேர இறுக்கத்தை தாங்கமுடியாமல் தென்றலும், கதிருமே வெளியே சென்றிருக்க.. வீட்டில் இப்போது ஆதிரா, தணிகைநம்பி, வனக்கொடி மட்டுமே..!!

அந்த சமயத்தில்தான் செம்பியன் ஆதிராவின் வீட்டுக்கு வந்து சேர்ந்தார்.. அவருடைய தோளில் பழுப்பு நிறத்தில் ஒரு பெரிய தோல்ப்பை..!! ஆதிராவும், தணிகை நம்பியும் அவரை வரவேற்று பேசினார்..!! செம்பியன் வீட்டை கொஞ்சம் சுற்றிப்பார்த்தார்.. ஒருசில ஏற்பாடுகளைப் பற்றியும், தேவைப்படக்கூடிய பொருட்களைப் பற்றியும், எல்லோரும் நடந்துகொள்ள வேண்டிய முறைகளைப் பற்றியும் பேசினார்..!!

“ரூம்ல சுத்தமா வெளிச்சம் இருக்கக்கூடாது.. ஆனா காத்தோட்டம் கொஞ்சம் இருக்கணும்..!! அந்த சீக்ரட் ரூம்தான் சரியா இருக்கும்னு நெனைக்கிறேன்.. அங்கேயே வச்சுக்கலாம்..!!”

“சரி ஸார்..!!”

“குண்டூசி கீழ விழுந்தாக்கூட சத்தம் கேக்குற மாதிரி.. அவ்வளவு அமைதியா இருக்கணும்..!! இந்த ரூம்ல இருந்து வர்ற சத்தம்கூட அந்த ரூம்ல கேட்க கூடாது..!! ஃபேன்லாம் ஆஃப் பண்ணிடுங்க.. அந்த வால்-க்ளாக்க ஸ்டாப் பண்ணிடுங்க.. டெலிஃபோன் லைனை கொஞ்சநேரம் கட் பண்ணி வைங்க.. செல்ஃபோன்லாம் ஸ்விட்ச்ஆஃப் பண்ணிடுங்க..!!”

“ம்ம்..!!”

“மெழுகுவர்த்தி வேணும்னு சொல்லிருந்தேன்.. வாங்கி வச்சிருக்கிங்களா..??”

“ம்ம்.. வாங்கியாச்சு..!!” சொன்ன தணிகைநம்பி தொடர்ந்து,

“நா..நானும் கூட இருக்கலாமா..??” என்று செம்பியனை கேட்டார்.

“இல்ல வேணாம்.. ஆதிரா மட்டும் போதும்..!! ஆளுங்க அதிகமானா ஆவிகளை வரவைக்கிறது கஷ்டம்..!!” என்ற செம்பியன் ஆதிராவிடம் திரும்பி,

“பால், காபின்னு ஏதாவது குடிச்சியாம்மா..??” என்று கேட்டார்.

“இ..இல்ல அங்கிள்.. காலைல இருந்து பச்சைத்தண்ணி கூட பல்லுல படல..!!”

“நல்லது..!! ஏதாவது பழம் சாப்பிடுறதுனா சாப்பிட்டுக்கோ.. மத்தபடி வயிறு காலியா இருந்தா ரொம்ப நல்லது..!!”

“எனக்கு சாப்பிட பிடிக்கல அங்கிள்.. எதுவும் வேணாம்..!!”

110

“சரி.. ஒன்னும் பிரச்சினை இல்ல..!! அப்புறம்.. இந்த ட்ரஸ் வேணாம்.. மாத்திக்கோ.. நான் போட்ருக்குற மாதிரி ஏதாவது லூஸா, மெல்லிசா ஒரு ட்ரஸ் போட்டுக்கோ..!!”

“சரி அங்கிள்..!!”

“தாலியைத்தவிர மிச்ச எல்லா நகைகளையும் கழட்டி வச்சிடு..!!”

“ம்ம்..!!”

“சீக்கிரம் ரெடியாகி வா.. ஆரம்பிச்சுடலாம்..!!”

பத்தே நிமிடங்களில் தயாராகி வந்தாள் ஆதிரா.. அவளும், செம்பியனும் அந்த நிலத்தடி நிலவறைக்குள் நுழைய, வெளியே இருந்து கதவை மூடி சாத்தினார் தணிகைநம்பி..!! செம்பியனின் கையில் அவர் கொண்டுவந்த தோல்ப்பை.. ஆதிராவின் கையில் ஒரு டார்ச் விளக்கு.. இருவரும் அந்த மரஏணியில் கவனமாக கீழிறங்கினர்..!!

“இதுக்கு முன்னாடி நீங்க குறிஞ்சியை இந்தமாதிரி வரவச்சு பேசிருக்கிங்களா அங்கிள்..??”

“இல்லம்மா.. முயற்சி செஞ்சு பாத்திருக்கேன்.. முடியல..!! மத்தபடி என் பாட்டி, அப்பா, பத்து வயசுல செத்துப்போன என் பையன்.. எல்லார்ட்டயும் பேசிருக்கேன்..!! எனக்கும் குறிஞ்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லாமப் போனதுதான் காரணமா இருக்கணும்..!! உன் விஷயத்துல அந்த பிரச்சினை இல்ல.. உன் புருஷனை அவ தூக்கிட்டு போயிருக்கா.. ரெண்டுபேருக்கும் ஒரு பெரிய சம்பந்தம் இருக்கு..!! அதான்.. குறிஞ்சியை வரவச்சு பேசுறது சாத்தியம்தான்னு சொன்னேன்..!!”

“ம்ம்..!!”

“ஆனா.. நூறு சதவீதம் உறுதியா சொல்ல முடியாதும்மா.. முயற்சி செஞ்சு பார்க்கப்போறோம்.. அவ்வளவுதான்.. அதை நல்லா ஞாபகம் வச்சுக்க..!!”

“புரியுது அங்கிள்..!!”

பேசிக்கொண்டே இருவரும் அந்த ரகசிய அறைக்குள் நுழைந்தார்கள்.. உள்ளே நுழைந்ததுமே அந்த புழுங்கல் நெடி..!! டார்ச் விளக்கின் வெளிச்சத்தில் உள்ளிருந்த பொருட்கள் எல்லாம் ஓரளவு தெளிவாக தெரிந்தன.. உடைந்த பழைய பொருட்கள், காலியான அட்டைப்பெட்டிகள்.. கட்டில், அலமாரி, மேஜை, நாற்காலிகள், அவற்றில் ஆங்காங்கே சிதறிக்கிடந்த தாமிராவின் பொருட்கள், உடைகள்..!!

செம்பியன் அந்த மரமேஜையை அறையின் மையமாக இழுத்து போட்டார்.. எதிர் எதிரே இரண்டு நாற்காலிகளை எடுத்துப் போட்டார்..!! இரண்டு நாற்காலிகளுக்கும் பின்புறமாக இரண்டு பெரிய மெழுகுவர்த்திகளை கொளுத்தி வைத்தார்.. அந்த மெழுகுவர்த்திகளில் இருந்து எழுகிற மங்கலான வெளிச்சம், மேஜையில் மெலிதாக பரவுமாறு..!!

“நல்லா வசதியா ரிலாக்ஸ்டா உக்காந்துக்கோமா..!!”

“ம்ம்.. சரி அங்கிள்..!!”

ஆதிராவும் செம்பியனும் எதிரெதிர் நாற்காலிகளில் ஒருவரை ஒருவர் பார்த்தவாறு அமர்ந்து கொண்டார்கள்..!! மெலிதான குரலில் தொடர்ந்து பேசினார் செம்பியன்..!!

“மனசை ஒருமுகப்படுத்துறதுதான் இதுல ரொம்ப முக்கியம் ஆதிரா..!! உனக்கு வேறெந்த பிரச்சினை இருந்தாலும், அதெல்லாம் கொஞ்ச நேரம் ஒதுக்கிவச்சுட்டு.. மனசுல எந்த சலனமும் இல்லாம, நம்பிக்கையா ஈடுபாட்டோட செய்யணும்..!!”