மதன மோக ரூப சுந்தரி – இறுதி 22

இப்போது வீட்டுக்குள் திடீரென்று சிலுசிலுவென குளிர்காற்று வீச ஆரம்பித்தது.. ஆதிராவின் தளிர்மேனியை அந்தக்காற்று ஜில்லென வருட, அவளது ஆடையும் கூந்தலும் மெலிதாக தடதடத்தன..!! வீட்டுக்குள் வீசிய குளிர்காற்று அந்த வாசனையையும் அள்ளி வந்திருந்தது.. கமகமவென அந்த அறையை நிறைத்தது மகிழம்பூ வாசனை..!!

வாசனை வந்தவுடனேயே தங்கையின் வருகையையையும் உணர்ந்துகொண்டாள் ஆதிரா.. அவளது இமைகள் அகலமாக விரிந்துகொன்டாலும், அவளது கவனம் முழுவதும் கசிகிற புகையிலேயே நிலைத்திருந்தது..!! அதேநேரம் அந்த க்ரிஸ்டல் பவ்லிலும் சரேலென வெப்பம் ஏற ஆரம்பித்தது.. ஒரு சில வினாடிகளிலேயே சரசரவென சூடாகிப்போய் அனலடித்து கொதித்தது.. தாங்கமுடியாமல் தகித்தது..!! ஆதிராவின் உள்ளங்கை பொசுங்க ஆரம்பிக்க.. அதை அவள் பொருட்படுத்தவில்லை.. அந்த பவ்லில் இருந்து கையை விலக்கிக் கொள்ளவில்லை..!! உதடுகளை மட்டும் அழுந்த கடித்தவாறு.. வேதனை பொறுத்துக் கொண்டாள்..!!

“ச்ச்சிலீர்ர்ர்ர்ர்ர்..!!” வெப்பத்தை தாங்கமுடியாமல் வெடித்து சிதறியது அந்த க்ரிஸ்டல்.

“ஆஆஆஆஆஆஆஆ..!!” அதிர்ந்துபோய் அலறி விருட்டென எழுந்தாள் ஆதிரா.

அவள் அமர்ந்திருந்த நாற்காலி கீழே சரிந்து தடதடவென ஓசையெழுப்ப.. அதைத்தொடர்ந்து வீட்டுக்குள் மீண்டும் அந்த அடர்த்தியான நிசப்தம்..!!

பதற்றத்தில் இருந்த ஆதிராவுக்கு மூச்சிரைத்துக் கொண்டது.. அவளது மார்புகள் சர்சர்ரென மேலும் கீழும் ஏறி இறங்கின..!! அகலமாய் விரித்து வைத்த விழிகளுடன்.. அந்த அறைக்குள் பார்வையை மெலிதாக சுழற்றி..

“தா..தாமிரா.. தா..தாமிரா..” என்று தடுமாற்றமாக அழைத்தாள்.

அதேநொடியில்.. வெளியே திடுமென்று ஒரு இடியோசை.. அதைத்தொடர்ந்து நுழைவாயிலில் பளீரென்று ஒரு மின்னல் வெளிச்சம்..!! அந்த வெளிச்சத்தின் பின்னணியில் ஒரு கருப்புநிற பிம்பம்.. சின்னதாக.. ஏதோ ஒரு பறவை.. இவளை நோக்கி பறந்து வருவது போல.. ஏதோ ஒரு பறவை அல்ல.. ஒரு காகம்.. தனது சிறகை படபடவென அசைத்து அசைத்து, இவளை நோக்கி விர்ர்ர்ரென விரைந்து வந்தது.. தனது கூரிய அலகுகளை விரித்து இவளது முகத்தை கொத்திக் குதறுவது போல..

“ஆஆஆஆஆ…!!!!!”

கடைசி நொடியில் சுதாரித்துக்கொண்ட ஆதிரா தனது முகத்தையும், உடலையும் முறுக்கி ஒரு திருப்பு திருப்ப.. காகத்தின் ரெக்கை மட்டும் அவளது முகத்தை சத்தென்று அறைய.. கால்கள் பிண்ணிக்கொள்ள தடுமாறிப்போய் தரையில் வீழ்ந்தாள்..!! பறந்து வந்த காகம், ஒரு வெண்கல சிலை மீது சென்று அமைதியாக அமர்ந்துகொண்டது.. ஆதிராவோ அதிர்ச்சி விலகாமல் அப்படியே கிடந்தாள்..!!

“ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்…!!!!!”

சன்னமாக ஒரு சப்தம் இப்போது ஆதிராவின் காதில் விழுந்தது.. என்ன சப்தம் என்பது ஆரம்பத்தில் அவளுக்கு புரியவில்லை.. தரையில் கிடந்தவாறே தலையை திருப்பி திருப்பி பார்த்தாள்.. வீட்டுக்குள் எந்த சலனமும் இருக்கவில்லை.. வாசலுக்கு அருகில்தான் ஏதோ ஒரு சலனம்..!!

“ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்…!!!!!”

அந்த சப்தம் கொஞ்சம் கொஞ்சமாய் பெரிதாகிக்கொண்டே போக.. வாசலில் இருந்து ஏதோ ஒன்று.. மிகவும் சின்னதாய்.. ஏதோ வளையம் போல.. இவளை நோக்கி சர்ரென உருண்டு வந்துகொண்டிருந்தது..!!

“ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்…!!!!!”

ஆதிராவின் முகத்துக்கு அருகே வந்ததும் நின்றது.. நின்ற இடத்திலேயே ‘க்க்க்கிர்ர்ர்ர்’ என்று சுழன்றது.. பிறகு, கொஞ்சம் கொஞ்சமாய் அமைதியாகி அடங்கியது..!!

அது.. அந்த மோதிரம்.. கடந்த காதலர் தினத்தன்று.. கணவனுடன் அவள் புதுவாழ்க்கையை தொடங்கிய அன்று.. காகம் வந்து மோதி கார் விபத்து நேர்ந்த அன்று.. சிபி இவளுக்கு அன்பளிப்பாக அணிவித்த அந்த மோதிரம்.. அகழி வந்த பிறகு திடீரென ஒருநாள் காணாமல் போயிருந்த மோதிரம்..!!

‘இ..இது.. இது எப்படி..??’

ஆதிராவுக்கு ஓரிரு வினாடிகள் ஒன்றும் புரியவில்லை.. பிறகு அவளது மூளையில் ஒரு பளிச்..!! அன்றொரு நாள்.. அந்த சிவப்பு அங்கி உருவம் அவளை ஆற்றுக்குள் இழுத்துப்போட்டு.. நீருக்குள் அவளை அழுத்தி நெருக்கி.. அவளது கைகளை பற்றி இழுத்து.. அவளுடைய கைவிரல்களையும் அழுந்தப்பற்றி நெரித்து..!! ஆதிராவுக்கு இப்போது புரிந்துபோனது.. தாமிராதான் அன்று தன்னை ஆற்றுக்குள் இழுத்திருக்க வேண்டும்.. இந்த மோதிரத்தை பறித்து சென்றிருக்க வேண்டும்..!!

‘ஆனால் எதற்காக..?? அப்படி என்ன முக்கியத்துவம் இந்த மோதிரத்திற்கு..??’ – அது மட்டும் புரியவில்லை.

அந்த மோதிரத்தையே திகைப்பாக பார்த்துக்கொண்டிருந்த ஆதிரா.. தனது ஒருகையை மெல்ல நீட்டினாள்.. அந்த மோதிரத்தை கையில் பற்றிக்கொள்ள முயன்றபோது..

“விஷ்ஷ்ஷ்ஷ்க்க்க்க்..!!” என்ற சப்தத்துடன் அந்த மோதிரம் பட்டென காணாமல் போனது.. காற்று வந்து கொத்தாக அள்ளிச்சென்றது போல..!!

“ஹ்ஹக்..!!” ஆதிரா திகைத்துப்போய் நிமிர,

“ஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹா..!!!!!!!!!!!!” முதுகுத்தண்டு சில்லிட்டுப்போவது மாதிரி வீட்டுக்குள் அந்த சிரிப்பொலி.

“தாமிராஆஆஆ..!!” தரையில் கிடந்தவாறு அலறினாள் ஆதிரா.

வீட்டுக்குள் இப்போது மீண்டும் ஒரு பலத்த நிசப்தம்.. ஆதிரா தரையில் இருந்து மெல்ல எழுந்தாள்.. மிரட்சியான முகத்துடன் அறையை ஒருமுறை சுற்றிப் பார்த்தாள்..!!

“க்க்காஆ.. க்க்காஆ.. க்க்காஆ..!!!” – காகம் கரைந்தது.

அதன் சப்தத்தை கண்டுகொள்ளாமல் ஆதிரா இப்போது மெல்ல அடியெடுத்து வைத்தாள்.. அந்த சிரிப்பொலி சப்தம் வந்த திசையை நோக்கி மெல்ல நகர்ந்தாள்..!!

“தாமிரா.. தாமிரா..!!” – தங்கையை ஒருமுறை அழைத்தாள்.

தயங்கி தயங்கி அடிமேல் அடி எடுத்து வைத்து.. ஒரு பத்து அடி தூரம் நகர்ந்திருப்பாள்..!!

“க்க்க்கிர்ர்ர்ர்ர்ர்….. க்க்க்கிர்ர்ர்ர்ர்ர்….. க்க்க்கிர்ர்ர்ர்ர்ர்…..!!!!!!”

அவளுடைய முதுகுப்புறமாக இருந்து திடீரென அந்த சப்தம்..!! ஆதிரா நின்றாள்.. தனது தலையை மெல்ல திருப்பி பார்த்தாள்..!! ஊஞ்சல்.. உத்தரத்தில் இருந்து தொங்கிய இரட்டை ஊஞ்சல்களில், ஒன்று மட்டும் தனியாக ஆடிக்கொண்டிருந்தது.. ஆளில்லாமல்.. சற்றே வேகமாக.. சர்சர்ரென..!!

ஆதிராவின் மனதுக்குள் பட்டென ஒரு ஃப்ளாஷ்பேக்..!! அவள் சிறுமியாக இருந்தபோது.. இதே இடத்தில் நின்று.. அவள் அம்மா பூவள்ளி,

“ஊஞ்சல்தான் ஏற்கனவே ஒன்னு இருக்குல்ல.. அப்புறம் எதுக்கு அதேமாதிரி இன்னொன்னு வாங்கிட்டு மாட்டிக்கிட்டு இருக்கீங்க இப்போ..??” என தன் கணவரிடம் கேட்டாள்.

“அது ஆதிராவுக்கு.. இது தாமிராவுக்கு.. ஆளுக்கொரு ஊஞ்சல்..!! என் பொண்ணுக ரெண்டு பேருக்கும் எந்த விஷயத்துலயும் போட்டின்றதே வரக்கூடாது.. அதான்.. ஹாஹா..!!” சிரிப்புடன் சொன்னார் தணிகைநம்பி.

பழைய நினைவுகளில் இருந்து பட்டென மீண்ட ஆதிரா.. ஆளில்லாமல் ஆடுகிற அந்த ஊஞ்சலையே ஒருகணம் மிரட்சியாக பார்த்தாள்..!! பிறகு, மெல்ல அந்த ஊஞ்சலை நோக்கி நகர்ந்தாள்..!! அவளது மனதுக்குள் ஏற்கனவே மெலிதாக ஒரு கிலி பரவ ஆரம்பித்திருந்தது.. வலுக்கட்டாயமாக ஒரு தைரியத்தை நெஞ்சுக்குள் ஊற்றிக்கொண்டே, ஊஞ்சலை நெருங்கினாள்..!! ஆடாமல் நின்றிருந்த இன்னொரு ஊஞ்சலில் மெல்ல அமர்ந்துகொண்டாள்.. இருகைகளாலும் இரும்புச்சங்கிலியைப் பற்றி, கால்களை உந்தித்தள்ளி தானும் ஊஞ்சலாட ஆரம்பித்தாள்.. பயத்தையும் மீறி அவளது முகத்தில் ஒரு தீர்க்கமும், கூர்மையும்..!!

அந்த விஸ்தாரமான ஹாலின் மையத்தில் தொங்கிய இரண்டு ஊஞ்சல்களும்.. இப்போது ‘சர்ர்ர்ர்.. சர்ர்ர்ர்..’ என வேகவேகமாக ஆடிக்கொண்டிருந்தன.. ஒன்று ஆதிராவுடன்.. இன்னொன்று ஆளில்லாமல்..!! தானும் தாமிராவும் சிறுமிகளாக இருந்தபோது.. இதே ஊஞ்சலில் அமர்ந்து, அண்ணாந்து பார்த்து கலகலவென சிரித்தவாறே.. ஜோடியாக ஊஞ்சலாடிய நினைவு ஆதிராவுக்கு இப்போது வந்தது..!! இருதயத்துக்குள் ஒரு இனம்புரியாத வலி பரவ, அவளது விழிகளில் ஒரு சொட்டு நீர் துளிர்த்தது..!! மனதில் இருந்த வேதனையை வெளியே காட்டிக்கொள்ளாமல்.. வேகமாக ஊஞ்சலாடிக்கொண்டே.. பக்கவாட்டில் திரும்பி அந்த ஆளில்லா ஊஞ்சலை பார்த்து.. இறுக்கமான குரலில் கேட்டாள்..!!