வயசு இதுக்கு முக்கியமில்லை பாகம் எட்டு 47

லூசு அவன், லவ்வை எப்படிச் சொல்லனும், எப்படிச் சொல்லனும்னு, ஒரு ஃபீல் வேணாம்? என்னமோ வீட்டுக்கு போயிட்டு வர்றேங்கிற மாதிரி, லவ்வைச் சொல்றான்?

அப்ப, நான் இன்னும் காலேஜே கூட சேரலை. +2 முடிச்ச பையன் கூட, சுத்துறா பாருன்னு மத்தவிங்க சொன்னா, எனக்கு எவ்ளோ கஷ்டம் இருக்கும்?

நாந்தான், என் ஆசையை, காதலை எல்லாத்தையும், இண்டிகேட் பண்ணிட்டு இருக்கேன்ல?! இப்பதான் MBA லாம் முடிச்சு, பெரிய பிசினஸ் மேக்னட் ஆகிட்டான்ல? இப்ப வந்து, என்கிட்ட கேக்குறதுக்கு என்ன? ஒரு பொண்ணாடா வந்து, வெட்கத்தை விட்டு கேப்பா? சரியான ஜடம்! இவனை வெச்சுகிட்டு என்னென்ன பாடு படப் போறேனோ என்று உள்ளுக்குள் சராமரியாக அவனைத் திட்டிக் கொண்டு இருந்தாள்.

இப்படியாக, அவர்கள் தங்களது காதலையும், கூடவே தயக்கத்தையும் வளர்த்துக் கொண்டு சென்றார்கள்.

MBA முடித்து வந்தவன் கம்பெனியில் கொஞ்சம் கொஞ்சமாக காலூன்றினேன். அதை விஸ்தரிக்க ஆரம்பித்தேன். அதற்கு, தாத்தா எனக்கு முழு ஒத்துழைப்பாக இருந்தார். என்னுடைய வளர்ச்சியைக் கண்டு, அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்திருந்தார். அந்தச் சமயத்தில், நான் என் அக்காவை, என் கம்பெனியிலேயே, பொறுப்பினை எடுத்துக் கொள்ளச் சொன்னதற்குதான் அவள் மறுத்திருந்தாள். அவளே மறுக்கும் போது, லாவண்யாவும் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை.

அதன் பின் தான், அக்காவிற்கு மாப்பிள்ளை பார்த்தது, தாத்தாவின் மரணம், அதன் பின், சில மாதங்களில் அக்காவின் திருமணம் எல்லாம் நடந்தது.

தாத்தாவின் மரணமும், அக்காவின் பிரிவும் எனக்குள் மிகப்பெரிய ஒரு துயரத்தைக் கொடுத்திருந்தது. என் நலனை விரும்பும் மிக முக்கிய இரு ஜீவன்கள், ஏறக்குறைய ஒரே சமயத்தில், என் வாழ்விலிருந்து விலகிச் செல்வது, என்னால் உள்ளுக்குள் தாங்க முடியவில்லை.

எப்பொழுதும், எதையும் கவனிக்கும் என் அக்கா கூட, உள்ளுக்குள், தாத்தா இறந்த சோகத்திலும், தன் கணவன் தன்னை புரிந்து கொள்வானா? என்ற குழப்பத்திலும், இனி மதன் என்ன பண்ணுவான், இப்பவும் வாயைத் திறக்க மாட்டேங்குறானே, என்ற கடும் வருத்ததிலும் இருந்ததால் என்னை முழுதாக கவனிக்க வில்லை.

ஆனால், இதை ஓரளவு கவனித்திருந்த லாவண்யாவோ, அக்காவின் திருமணம் முடிந்தவுடன், என்னிடம் வந்தவள், லேசான கோபத்துடன் பேசினாள்.

நீ, இப்படியே, உன் ஃபீலிங்சை காமிக்காமியே இரு மதன்! மத்தவிங்ககிட்ட வேணா, நீ மறைக்கலாம். ஆனா என்கிட்ட முடியாது! இப்பிடியே இரு! அப்புறம் என்னிக்காவுது, இதுக்காக வருத்தப்படுவ! அவ பாவம்! மனசே இல்லாம போறா!

தாத்தா இறந்தப்பதான், அவளுக்கு ஆறுதல் சொல்லலை. இப்ப, புது வீட்டுக்கு போறப்பனாச்சும், அவளுக்கு தெம்பு சொல்லியிருக்கலாம்ல? நீ தம்பி மாதிரியா நடந்துக்குற? பல சமயங்கள்ல நீதானே அண்ணன் மாதிரி நடந்துக்குற? இந்த மேரேஜைக் கூட, தாத்தாவோட ஆசைன்னு சொல்லி, அவளைச் சம்மதிக்க வைச்சில்ல? அவகிட்ட, கொஞ்சம் தெம்பா பேசியிருக்கலாம்ல? என்னதான் பிரச்சினை உனக்கு!

அவ அம்மாகிட்ட கூட, அதை எதிர்பாக்கலைடா அவ! ஆனா, நீ கொஞ்சம் மனசு விட்டுப் பேசியிருந்தா எவ்ளோ சந்தோஷப்பட்டிருப்பா தெரியுமா? உனக்கு, உன் ஃபீலிங்ஸ்தான் முக்கியம், இப்படியே கல்லு மாதிரி இருக்கனும் இல்ல? எதுக்காகவும், யார்கிட்டயும் ஃபீல் பண்ணி பேசிடக் கூடாது. இரும்பு மனசுன்னு பாராட்டி, அவார்டு தரணுமா? சரியான செல்ஃபிஸ் என்று வறுத்தெடுத்தாள்.

எதற்காகவும் மனம் திறக்காத நான், ஏற்கனவே சோகமாய் இருந்ததால், அன்று கொஞ்சம் மனம் திறந்தேன்!

தெம்பா பேசி, என்ன பண்ணச் சொல்ற? இத்தனை நாள் பாசம் காட்டாம, இப்ப புதுசா காமிக்கச் சொல்றியா? வாழ்க்கைல, இத்தனை நாளா, பெருசா சந்தோஷத்தையே எதுவும் அனுபவிக்காதவ அவ, இப்பதான் அவளுக்குன்னு ஒரு உறவு வந்திருக்கு.

தாத்தா பாத்த மாப்பிள்ளைன்னாலும், நான் தனிப்பட்ட முறையில நல்லா விசாரிச்சிட்டேன். ஹரீஸ் ரொம்ப நல்லவரு. கண்டிப்பா, அவளுக்கு கரெக்ட்டான மேட்ச்சா, அவ வாழ்க்கையை இன்னும் சந்தோஷமா மாத்துவாரு.

கல்யாணத்துக்கு முன்னாடியே, இந்த லூசு, அவருகிட்ட என்னைப் பத்தி புலம்பியிருக்கு. இன்னும் கல்யாணமே நடக்காட்டியும், தான் கட்டிக்கப் போற பொண்ணுக்காக, அவரு, என்கிட்ட வந்து தனியா பேசுறாரு. உங்க அக்கா உன் மேல நிறைய பாசம் வெச்சிருக்கான்னு சந்தோஷமா சொல்றாரு. இப்பியே எனக்காக அவ்ளோ கவலைப் படுறவ, இன்னும் நான் பாசத்தைக் காமிச்சா அவ்ளோதான். அங்க போயும் எனக்காக ஃபீல் பண்ணிட்டு இருப்பா.

எனக்கு வேண்டியதெல்லாம், இந்த டைம்ல அவ ரொம்ப சந்தோஷமா இருக்கனும். தன் கணவன் மேல முழு அன்பையும் காட்டனும். ரெண்டு பேரும் நல்லா இருக்கனும். முக்கியமா, மத்தவங்க மேல மட்டும் அன்பைக் காட்டிட்டு இருந்தவ மேல, முழு அன்பைக் காட்ட ஒருத்தர் இருக்காருன்னு, அவ புரிஞ்சிக்கனும்!

எனக்குத் தெரியும், அவ மனசுக்கு, அவ எப்பவும் நல்லா இருப்பான்னு. அவ இடத்துல, நான் இருந்திருந்தா கூட, அவளை மாதிரி நடந்திருப்பேனான்னு எனக்கு தெரியாது. அந்தளவுக்கு அன்பு காட்டுறவ அவ, அப்படிப்பட்டவளோட முழு அன்பும், ஹரீசுக்கு போகனும். அதே அன்பை ஹரீஸ்கிட்ட இருந்து, அவ வாங்கனும். அதான் நான் தள்ளி நிக்குறேன். புரியுதா?

இந்தச் சமயத்துல அவ மனசுல ஹரீஸ் மட்டும்தான் இருக்கனும். அவ குழப்பத்துல இருந்தாலும் பராவாயில்லை. இந்தச் சமயத்துல ஹரீஸ் காட்டுற அன்பு, அவளுக்கு வாழ்க்கை முழுக்கச் சந்தோஷத்தைக் கொடுக்கும். எனக்கு அதுதான் வேணும்!

Updated: April 2, 2023 — 7:38 am

2 Comments

  1. Raji un mail ku wait maa

  2. Nice going. Waiting for next part

Comments are closed.