‘அம்மா நான் சுகன்யாவை லவ் பண்றேன். எனக்கு கல்யாணம்ன்னா அது அவகூடத்தான், இல்லேன்னா இப்படியே இருந்திடறேன்…’ மெல்லிய குரலில் ஆனால் உறுதியுடன் தன் மகன் சம்பத் பேசியதை கேட்ட ராணி தன் மனதால் மட்டுமில்லாமல், உடலாலும் ஒரு நிமிடம் அதிர்ந்துபோனாள்.
ஆண்டவா.. என் குடும்பம் தழைக்கணுமே? என் புள்ளை ஏன் இப்படி மூர்க்கனாட்டாம் பேசறான்? இது ஆகற கதையா? இவன் மனசை மாத்தி இவனுக்கு ஒரு கல்யாணத்தை பண்ணி வெச்சாகணுமே? சுகன்யாவோட நிச்சயதார்த்ததுக்கு இவனும்தானே வந்தான்.? இப்ப எல்லாம் நடந்து முடிஞ்சதுக்கப்புறம், கட்டினா அவளைத்தான் கட்டுவேன்னு ஏன் உளர்றான்?
சுகன்யா என்னை மதிக்கலே. நான் கருப்பா இருக்கேன்னு அவ என் கையை புடிச்சி குலுக்கலேன்னான். அவளுக்கு ஆப்பு வெச்சேன்ன்னு குதிச்சான். அவளை எச்சையிலைன்னு சொல்லி கொக்கரிச்சவன் கூட புத்தியில்லாம நானும் சேர்ந்து சிரிச்சேன்.
நானே ஒரு எச்சையிலைங்கறது தெரியாம என் புருஷனைத் தப்பா பேசினானேன்னு ஒரு அறைவிட்டேன். நான் பேசினது தப்பும்ம்மான்னு அழுதான். இவன் திருந்திட்டான்னு நினைச்சுக்கிட்டு இருக்கேன். திரும்பவும் என் நெஞ்சுல ஏறி மிதிக்கறானே? இப்ப நான் எண்ணப்பண்ணுவேன்? ராணி தன் மனம் கலங்கி போனாள்.
இவன் என்ன குழந்தையா? நல்லாப் படிச்சு, கை நிறைய சம்பாதிச்சுக்கிட்டு இருக்கற ஒரு இருபத்தெட்டு வயசு பையன் பேசற பேச்சா இது? கல்யாணம் நிச்சயமான ஒரு பொண்ணை காதலிக்கறேங்கறான். ஏன் இப்படி பைத்தியக்காரத்தனமா பேசறான்?
இருளடித்த முகத்துடன், தன்னருகில் மவுனமாக, மனதில் குழப்பத்துடன் அமர்ந்திருந்த கணவரை ஒரு முறை ஏறெடுத்துப்பார்த்தாள் ராணி. தங்கள் மகன் இது மாதிரி அர்த்தமில்லாமல் பேசுவான் என அவர்கள் சுத்தமாக எதிர்ப்பார்க்கவேயில்லை.
ஒரு நிமிடம் மகனிடம் என்ன பேசுவதென்று புரியாமல், தன் மடியில் தலைவைத்து கிடந்த சம்பத்தின் வெற்று முதுகை பரிவுடன் இதமாக தடவிக் கொடுக்க ஆரம்பித்தாள் ராணி. சம்பத்திடம் ஏதோ சொல்ல முனைந்த தன் கணவனை
“நீங்க பேசமா இருங்க, இவனை நான் சமாளிக்கிறேன் என தன் கண்களால் அவரிடம் சைகை செய்தாள். இரண்டு நிமிடங்களுக்குப்பிறகு தன் தொண்டையைக் கனைத்துக்கொண்டு நிதானமாக பேச ஆரம்பித்தாள்.
Tere khatir Na suno