அப்புறம்.. சிபி குளித்து முடித்து வெளியே வர அரைமணி நேரம் ஆனது.. ஆதிரா உணவு தயார் செய்து முடிக்க அதன்மேலும் அரைமணி நேரம் ஆனது..!! ஆவி பறக்கிற நீர் தோசையும்.. மணம் கமழுகிற தேங்காய் சட்னியும்..!! ஆதிராவின் அப்பா தணிகை நம்பியும் தோட்டத்தில் இருந்து திரும்பியிருக்க.. நால்வரும் டைனிங் டேபிளில் அமர்ந்து காலை உணவு அருந்தினர்..!!
சிபி தணிகை நம்பியின் தங்கை மகன்தான்.. சிறு வயதிலேயே பெற்றோரை இழந்தவன்.. ஏழு வயதில் இருந்தே அவனை எடுத்து வளர்த்தது தணிகை நம்பிதான்..!! விஷுவல் கம்யுனிகேஷனில் பட்டம் பெற்ற சிபி, இந்த மைசூர் பத்திரிகை அலுவலகத்தில் வேலையும் வாங்கிவிட்டான்..!! கடந்த ஒருவருடமாக.. மாமாவின் குடும்பத்தை தன்னுடன் வைத்திருக்கிறான்..!! வாழ்வு தந்த மாமாவின் மீது அவனுக்கு எப்போதும் தனி மரியாதை உண்டு..!! பிறந்தது இரண்டும் பெண்களாகி போய்விட.. தணிகை நம்பியும் தங்கையின் மகனை தன்மகனாகவே நினைப்பார்.. மருமகன் ஆனபிறகும் அந்த நினைப்பு அவருக்கு மாறிப்போகவில்லை..!! அந்த உரிமையில்தான் இப்போதும்,
“எப்போ கெளம்புற சிபி..??” என்று ஒருமையிலும், பெயர் சொல்லியும் அவனை விளித்தார்.
“சாப்பிட்டு கெளம்ப வேண்டியதுதான் மாமா..!!”
“எத்தனை மணிக்கு ஃப்ளைட்..??”
“பத்து மணிக்கு..!!”
“ம்ம்.. டாக்ஸி வர சொல்லிருக்கிறியா..??”
“இ..இல்ல..!!”
“அப்புறம்..??”
“ஆ..ஆதிரா என்னை.. ஏ..ஏர்போர்ட்ல ட்ராப் பண்றேன்னு சொல்லிருக்கா..!!”
சிபி சற்று தடுமாற்றத்துடனே சொல்ல, தணிகை நம்பியின் முகத்தில் ஒருவித மலர்ச்சி.. அவருடைய உதடுகளில் கசிந்த அந்த புன்னகையில், ஒருவித நிம்மதியும் பெருமிதமும் ஒருசேர கலந்திருந்தது..!!
அதன்பிறகு ஒருமணி நேரம் கழித்து.. சிபி வீட்டில் இருந்து கிளம்பினான்..!! காரின் பின்புறம் ட்ராவல் பேகை திணித்தவன்.. கதவை அறைந்து சாத்தினான்..!! அவன் கையிலிருந்த கார்ச்சாவியை ஆதிரா பிடுங்கிக் கொண்டாள்..!!
“நான் ட்ரைவ் பண்றேன் அத்தான்.. ப்ளீஸ்..!!”
ஆசையாய் கேட்ட மனைவியை புன்னகையுடன் அனுமதித்தான் சிபி..!! இருவரும் காரில் ஏறி அமர்ந்தார்கள்..!! அவ்வாறு அமர்ந்ததுமே..
“கண்ணை மூடுங்கத்தான்..!!” சற்றே உத்தரவிடுவது மாதிரி சொன்னாள் ஆதிரா.
“எதுக்கு..??” சிபி புரியாமல் கேட்டான்.
“மூடுங்கன்னு சொல்றேன்ல.. மூடுங்க..!!” ஆதிரா அதட்டவும், எதுவும் புரியாமலே சிபி கண்களை மூடிக்கொண்டான்.
“ம்ம்.. கையை நீட்டுங்க..!!” மீண்டும் அதிகார தோரணையுடன் ஆதிரா.
“எதுக்குன்னு சொல்லு..!!”
“ப்ச்.. நீங்க நீட்டுங்க.. சொல்றேன்..!!”
சிபி இப்போது கையை நீட்ட.. ஆதிரா அத்தனை நேரம் ஒளித்து வைத்திருந்த அந்த பெட்டியை இப்போது கையில் எடுத்தாள்..!! அந்த பெட்டிக்குள் இருந்து.. அழகான வேலைப்பாடுகளுடன் கூடிய ஒரு கைக்காடிகாரத்தை வெளியே எடுத்தாள்..!! அதை சிபியின் கையில் கட்டிவிட ஆரம்பித்தாள்..!! அவள் என்ன செய்கிறாள் என்று ஓரளவுக்கு புரிந்தும்.. எதுவும் புரியாதவனாக நடித்தவாறே..
“ஹேய்.. என்ன பண்ற.. கேக்குறேன்ல.. சொல்லு..!!” என்று மூடிய விழிகளுடன் கேட்டுக்கொண்டே இருந்தான் சிபி.
“ஹ்ம்ம்.. இப்போ கண்ணை திறந்து பாருங்க..!!” ஆதிரா கட்டிமுடித்துவிட்டு சொன்னாள். உடனே கண் திறந்து பார்த்த சிபி,
“வாவ்வ்வ்வ்..!!!” என்று கடிகாரத்தை பார்த்து ஆச்சரியமடைந்தான்.
“பிடிச்சிருக்கா..??” ஆதிரா பெருமிதமாக கேட்டாள்.
