மதன மோக ரூப சுந்தரி – 1 53

சுப்ரபாதம் முடிந்து விஷ்ணு சஹஸ்ரநாமம் இப்போது வீட்டுக்குள் ஒலித்துக் கொண்டிருந்தது.. குமிழ் ஒன்றை திருகி எம்.எஸ்.சுப்புலக்ஷ்மியின் குரல்பருமனை சற்று குறைத்தாள்..!! பூஜையறைக்குள் நுழைந்து.. கைகள் கூப்பி.. கண்கள் மூடி.. கால்கள் மடக்கி அமர்ந்துகொண்டாள்..!!

‘பெருமாளே..!! இப்போ.. இந்த நிமிஷத்துல.. என் மனசுல இருக்குற நிம்மதியும் சந்தோஷமும்.. எப்போவும் எனக்கு வேணும்னு ஏக்கமா இருக்கு.. அதுக்கு நீதாம்ப்பா அருள் புரியணும்..!! மனசுல இருக்குற குழப்பங்களை தீர்த்து வை.. மஞ்சளும் குங்குமமும் எனக்கு நிலைக்க வை..!!’ – என்கிற ரீதியில் மனமுருக வேண்டிக் கொண்டாள்.

ஐந்து நிமிடங்கள் கழித்து பூஜையறையை விட்டு உற்சாகமாக வெளியே வந்தாள்..!! சுவற்றில் மாட்டியிருந்த அந்த பெரிய சைஸ் புகைப்படம் கண்ணில் படவும்.. கால்கள் தயங்கியவளாய் சற்று நின்றாள்.. முகத்தில் சலனமில்லாமல் அந்த புகைப்படத்தையே சில வினாடிகள் பார்த்தாள்..!!

ஆதிராவும் அவளுடைய தங்கை தாமிராவும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம்..!! இருவரும் ஒருவரை ஒருவர் அணைத்துக்கொண்டு.. கள்ளம் கபடம் இல்லாத ஒரு வெள்ளைப் புன்னகையை.. காமிராவை பார்த்து சிந்திக் கொண்டிருந்தனர்..!! அழகு கொஞ்சும் தங்கையின் முகத்தையே அன்பொழுக பார்த்த ஆதிரா.. கண்களை படக்கென மூடி கடவுளை மீண்டும் நினைத்துக் கொண்டாள்.. உதடுகள் முனுமுனுக்க கடவுளிடம் ஏதோ பிரார்த்தனை செய்து கொண்டாள்..!!

கண்திறந்தவள் நீளமாய் ஒரு பெருமூச்சை உதிர்த்தாள்.. ஹாலின் இன்னொரு மூலையில் இருக்கிற சமையலறைக்கு நடந்தாள்..!! சமையலறைக்குள் நுழைய.. ஆதிராவின் அம்மா பூவள்ளி பார்வைக்கு கிடைத்தாள்.. பாத்திரம் கழுவிக் கொண்டிருந்தாள்..!! அம்மா ஏறிட்டு பார்க்கவும், ஆதிரா அழகாக ஒரு புன்னகையை சிந்தினாள்..!!

“என்னம்மா பண்ணிட்டு இருக்குற..??”

“பாத்தா தெரியல.. பாத்திரம் கழுவிட்டு இருக்குறேன்..!! காபி போடலாம்னு நெனச்சேன்..!!”

“சரி.. எங்கிட்ட விடு.. நான் பாத்துக்குறேன்..!!”

“இல்ல ஆதிரா.. பரவா..”

“ப்ச்.. சொல்றேன்ல.. நான் பாத்துக்குறேன்.. நீ கெளம்பு.. போய் ரெஸ்ட் எடு.. நான் காபி போட்டு எடுத்துட்டு வரேன்..!!”

சொன்ன ஆதிரா அம்மாவின் கையில் இருந்த பால் பாத்திரத்தை பிடுங்கிக் கொண்டாள்.. குழாய் நீரை கொஞ்சமாய் திறந்து விட்டுக் கொண்டாள்.. ப்ரஷ் கொண்டு பாத்திரத்தை தேய்த்து சோப்பு நுரையை பொங்க வைத்தாள்..!! பூவள்ளி அதன்பிறகும் நகர மனமில்லாமல் அங்கேயே நின்றிருந்தாள்.. அப்புறம் காய்கறி தட்டில் கிடந்த தேங்காயை அவள் கையில் எடுக்க.. ஆதிரா அதட்டினாள்..!!

“அதை எதுக்கு எடுக்குற..??”

“இல்லடி.. நீ காபி போடுற நேரத்துல.. சட்னி ரெடி பண்ணலாம்னு..!!”

“ப்ச்.. சொன்னா உனக்கு புரியாதா.. எல்லாம் நான் பாத்துக்குறேன்.. நீ போய் ஹால்ல உக்காரு போ..!!”

ஆதிராவின் குரலில் ஒருவித எரிச்சல் தொனித்தாலும்.. அதையும் தாண்டி அவள் முகத்தில் வெளிப்பட்ட ஒரு உற்சாகம்தான் பூவள்ளியின் கவனத்தை கவர்ந்தது..!! தேங்காயை தட்டில் வைத்துவிட்டு.. மகளின் முகத்தையே சிறிது நேரம் ஆசையாக பார்த்துக் கொண்டிருந்தாள்..!!