மதன மோக ரூப சுந்தரி – 1 52

“தலை போனா மறைக்கும்.. இடை போனா குறைக்கும்.. கால் போனா குதிக்கும்..!!”

“என்ன சொல்ற.. எனக்கு புரியல..!!”

“தலை போனா மறைக்கும்.. இடை போனா குறைக்கும்.. கால் போனா குதிக்கும்..!!”

ஆதிராவின் கேள்விக்கு பதில் சொல்லாமல்.. தாமிரா திரும்ப திரும்ப அதையே சொல்லிக் கொண்டிருந்தாள்..!! ஆதிராவுக்கு சில வினாடிகள் எதுவும் புரியவில்லை.. அதன் பிறகு அவளுடைய மூளையில் பளிச்சென ஒரு மின்னல் வெட்ட.. முகத்தில் ஒரு மலர்ச்சியுடன் வீட்டுக்குள் ஓடினாள்..!! தாமிராவும் தமக்கையை பின்தொடர்ந் து ஓடினாள்..!!

அந்த நீண்ட வராண்டாவை ஆதிரா சிட்டாக கடந்தாள்.. அகலமான ஒரு மரத்தூணை சரக்கென சுற்றி திரும்பினாள்.. விரிந்திருந்த முற்றத்தை தாண்டி பாய்ந்தாள்.. வீட்டின் பின்வாசலை ஒட்டியிருந்த அறைக்குள் புயலென புகுந்தாள்..!! அவளுக்கு பின்னே ஓடிவந்திருந்த தாமிராவும் வாசலில் வந்து நின்றாள்..!!

அறைக்குள் அந்த மரக்குதிரை நின்றிருந்தது.. ஆதிராவும் தாமிராவும் வழக்கமாக ஏறி விளையாடுகிற குதிரை.. ஓடாமல் நகராமல் ஒரே இடத்தில் அவர்கள் சவாரி செய்கிற குதிரை..!! அந்த குதிரையை நெருங்கிய ஆதிரா.. அதன் வயிற்றுப் பகுதியில் இருந்த திறவை பிடித்து வெளியிழுத்தாள்..!! உள்ளே அந்த மரபொம்மை காட்சியளித்தது..!!!!

முகத்தில் ஒரு மலர்ச்சியுடன், ஆதிரா திரும்பி தங்கையை பார்த்தாள்.. அவளுடைய முகத்திலும் ஒரு பிரகாசம்.. புன்னகைத்தாள்..!! பொம்மையை வெளியே எடுத்தாள் ஆதிரா.. எடை குறைவாக இருப்பது தெளிவாக தெரிந்தது..!! பொம்மையின் உடலை பற்றி திருக.. அது படக்கென திறந்து கொண்டது..!! உள்ளே மற்ற பொம்மைகளை காணோம்.. ஒரே ஒரு துண்டு சீட்டு..!! சீட்டை பிரித்து படித்தாள்..!!

“நாலு மூலை நாடக சாலை..
நடுவிலிருக்கும் பாடகசாலை..!!
ஆடும் பெண்கள் பதினாறு..
ஆட்டி வைப்பவர் ரெண்டு பேரு..!!”

படித்து முடித்தவள் தங்கையை நிமிர்ந்து பார்க்க.. அவள் கன்னத்தில் குழிவிழ அழகாக சிரித்தாள்..!! அப்படி சிரித்தவாறே..

“Game or Shame..??” என்று மீண்டும் கத்தினாள்.

“Game..!!!!” ஆதிரா அலறிக்கொண்டே விருட்டென எழுந்து ஓடினாள்.

தங்கையை கடந்து வெளியேறியவள்.. தாத்தாவின் அறைக்கு விரைந்தாள்..!! அங்கிருந்த சொக்கட்டான் விளையாட்டு பொருட்கள் அடங்கிய பெட்டியை திறந்து பார்க்க.. அடுத்த பொம்மை கிடைத்தது..!! அந்தப் பொம்மைக்குள் இன்னொரு துண்டு சீட்டு.. அதில்.. மூன்றாவது பொம்மையை கண்டறிவதற்கான குறிப்பு அடங்கிய ஒரு விடுகதை..!!

இப்படியே ஒவ்வொரு பொம்மையாக கண்டுபிடித்து.. எட்டு பொம்மைகளையும் தன் வசமாக்கிக் கொண்டாள் ஆதிரா..!! அவளை கட்டிக்கொண்டு அக்காவின் வெற்றிக்காக தாமிராவும் பூரித்து போனாள்..!!

அதன் பிறகு.. ஆதிராவும் தாமிராவும் பருவக் குமரிகளாக ஆனபிறகும் கூட.. இந்த மாதிரி நிறைய விளையாடி இருக்கிறார்கள்..!! ஏதோ ஒரு பொருளை இருவரும் விரும்பும்போதோ.. ஏதோ ஒரு விஷயத்திற்காக இருவரும் வாதிடும்போதோ.. இந்த மாதிரி ‘Game or Shame..??’-தான்..!! விதவிதமான சூழ்நிலைகள்.. விதவிதமான விளையாட்டுக்கள்..!! எல்லா விளையாட்டுகளிலுமே மாறாத ஒரே விஷயம் என்ன தெரியுமா..?? அது.. ஆதிராவின் வெற்றிதான்..!!

இப்போது நினைத்து பார்க்கையில் ஆதிராவுக்கு ஒரு விஷயம் தெளிவாக புரிந்தது..!! கிட்டத்தட்ட எல்லா விளையாட்டுக்களிலுமே.. ஆதிரா ஜெயிக்க வேண்டும் என்பதற்காக.. அப்போது ஆதிராவின் அறிவுக்கு கூட எட்டாத வகையில்.. தாமிரா சில தந்திரங்கள் புரிந்திருக்கிறாள் என்று..!! அந்த விடுகதைகளின் விடைகளை எல்லாம் அக்கா நன்கறிவாள் என்பது.. தாமிராவுக்கு முன்கூட்டியே தெரிந்திருக்க வேண்டும்..!! அக்காவை சீண்டுவது மட்டுமல்ல.. அவளை ஜெயிக்க வைத்து பார்ப்பதிலும் தாமிராவுக்கு ஒரு அலாதி ப்ரியம்..!!

ஒவ்வொரு போட்டியிலும் வெல்லும்போதும்.. ஆதிரா அடைகிற ஆனந்தத்துக்கு அளவே இருக்காது..!! தாமிரா அந்தப் பொருளை விட்டுக் கொடுத்திருந்தால் கூட.. ஆதிராவுக்கு அந்த அளவு மகிழ்ச்சி இருந்திருக்காது.. தானே கஷ்டப்பட்டு, தானே வென்று, தனதாக்கிக் கொண்ட பொருள் என்று.. அந்தப் பொருளின் மீது இன்னும் அதிகமான பிடித்தமும்.. எனக்கு சொந்தமானது என்ற உரிமையும் அவளுக்கு பிறக்கும்..!! ‘என்னதான் இருந்தாலும் இது தங்கை நமக்கு விட்டுக் கொடுத்த பொருள்தானே?’ என்ற நினைவு எப்போதும் ஆதிராவுக்குள் எழாது..!! அந்த மாதிரியான தந்திரம் தாமிராவுடையது..!! – தொடரும்