மதன மோக ரூப சுந்தரி – 1 52

பூவள்ளிக்கு இப்போது அழுகை முட்டிக்கொண்டு வந்தது.. துக்கம் கட்டுப்படுத்த வாயை பொத்திக் கொண்டாள்.. மகளின் கால்களை ஒருமுறை திரும்பி பார்த்தாள்..!! ஆதிராவின் வலது முழங்காலுக்கு கீழே ஒரு கட்டு போடப்பட்டிருந்தது.. உருக்குலைந்த காரின் ஏதாவது ஒரு ஸ்டீல் தகடு ஏற்படுத்திய வெட்டுக்காயமாக இருக்க வேண்டும்..!! அவளுக்கு அளிக்கப்பட்டிருந்த பெயின் கில்லர் இப்போது சற்று செயலிழக்க ஆரம்பிக்கவும்.. அந்த இடத்தில் இருந்து வேதனை கிளம்ப ஆரம்பித்திருக்க வேண்டும்..!!

“ரொம்ப வலிக்குதாடா..??”

“ம்ம்ம்ம்..!!”

“கொஞ்சம் பொறுத்துக்கோம்மா.. சீக்கிரம் சரி ஆய்டும்.. என்ன..!!”

ஆறுதலான வார்த்தைகளை தவிர வேறொன்றும் இல்லை பூவள்ளியிடம்.. மகளின் தலையை இதமாக தடவிக் கொடுத்தாள்..!! ஆதிரா இப்போது அசதி தோய்ந்த கண்களுடன் அப்பாவை ஏறிட்டு பார்த்தாள்.. அவ்வாறு பார்த்ததுமே அவளுடைய முகத்தில் ஒரு சிறிய மலர்ச்சி..!!

“டி-ஷர்ட் உங்களுக்கு நல்லா இருக்குப்பா..!!” என்றாள் மெலிதான புன்னகையுடன்.

ஆதிரா திடீரென அவ்வாறு சொல்வாள் என்று தணிகை நம்பி எதிர்பார்த்திரவில்லை.. ஒருகணம் திகைத்தவர், தான் அணிந்திருந்த டி-ஷர்ட்டை ஒருமுறை தலைதாழ்த்தி பார்த்தார்.. பிறகு மகளின் முகத்தை ஏறிட்டு, தடுமாற்றமாக சொன்னார்..!!

“ஆ..ஆமாம்.. ஆமாம்மா.. ந..நல்லாருக்கு..!!”

அவர் சொல்லிக் கொண்டிருக்கையிலேயே.. அவருக்கு பின்புறமாக பார்வையை வீசிய ஆதிரா.. முகத்தில் ஒரு புதுவித வெளிச்சம் பிறந்தவளாய்..

“அ..அத்தான்..!!” என்றாள்.

உடனே, பூவள்ளியும் தணிகை நம்பியும் தலையை திரும்பி பின்பக்கமாக பார்த்தார்கள்..!! அறை வாசலில்.. கண்களில் நீரும், கைகளில் மருந்துப்பையுமாக சிபி நின்றிருந்தான்.. அவனுடைய இடது நெற்றியில் ஒரு பிளாஸ்திரி.. முகத்தில் ஆங்காங்கே ரத்த தீற்றல்கள்..!! தூரத்திலிருந்தே சிலவினாடிகள் ஆதிராவை பார்த்துக் கொண்டிருந்தவன்.. இப்போது அவசரமாய் நகர்ந்து இவர்களை நெருங்கினான்..!! கையிலிருந்த மருந்துப்பையை டேபிளில் வைத்துவிட்டு.. ஆதிராவின் கரமொன்றை பற்றிக்கொண்டான்..!!

“ஆதிராஆஆ..!!” காதலும் தவிப்புமாய் சொன்னான்.

“உ..உங்களுக்கு ஒன்னும் ஆகலையே..??” கவலையும் கனிவுமாய் கேட்டாள் ஆதிரா.

“இ..இல்லடா.. எனக்கு ஒன்னும் இல்ல.. ஜஸ்ட்.. நெத்தில சின்ன அடி.. அவ்வளவுதான்..!!”

விலாப்பகுதியின் வெட்டுக்காயத்தை மனைவியிடம் சொல்லாமல் தவிர்த்து விட்டிருந்தான் சிபி.. தனக்கு ஏற்பட்டிருக்கிற காயம் அவளுடைய கவலையை அதிகரித்து விடக் கூடாது என்பதே அவனது எண்ணமாக இருந்தது..!! ஆதிரா இப்போது நீளமாக ஒரு நிம்மதி பெருமூச்சை வெளிப்படுத்தினாள்..!!