மதன மோக ரூப சுந்தரி – 1 53

‘எத்தனை நாளாயிற்று.. இவளிடம் இந்த உற்சாகத்தை பார்த்து..?? தாமிரா போனதில் இருந்தே.. இந்த குடும்பத்தில் நிம்மதி என்பது இல்லாமல் இருந்தது.. இவளுடைய முகத்திலும் சந்தோஷம் என்பது செத்துப் போயிருந்தது..!! மோசமான அந்த சூழ்நிலையில் இருந்து.. கொஞ்சம் கொஞ்சமாய் இந்த குடும்பம் சகஜ நிலைக்கு திரும்பிக்கொண்டிருக்கிற வேளையில்.. இவளுடைய இந்த புது உற்சாகத்தை பார்ப்பதற்குத்தான் மனதுக்கு எவ்வளவு இதமாக இருக்கிறது..??’ பூவள்ளி அவ்வாறு அகத்துக்குள் ஆனந்தப்பட்டுக் கொண்டிருக்கையிலேயே,

“என்னம்மா.. என்னமோ என்னை புதுசா பாக்குற மாதிரி.. அப்படி பாக்குற..??” ஆதிரா புன்னகையுடன் கேட்டாள்.

“ம்ம்.. புதுசாத்தான்மா பாக்குறேன்..!!”

“எ..என்ன சொல்ற.. எனக்கு புரியல..!!”

குழப்பமாக கேட்ட ஆதிராவுக்கு அவளுடைய அம்மா பதில் ஏதும் சொல்லவில்லை..!! மகளை நெருங்கி.. அவளுடைய மதிமுகத்தை இரு கைகளாலும் தாங்கி தடவி.. பிறகு அந்த கைகளை தனது உதட்டில் ஒற்றி முத்தமிட்டாள்..!!

“இன்னைக்கு மாதிரியே என்னைக்கும் சந்தோஷமா இருக்கணும்டி என் தங்கம்..!!”

அம்மா அன்பை பொழிந்ததில் ஆதிரா சற்று நெகிழ்ந்துதான் போனாள்.. நாணத்துடன் கூடிய ஒரு புன்னகையை உதடுகளில் கசியவிட்டாள்..!!

“இ..இருப்பேன்மா.. இப்படியே சந்தோஷமா இருப்பேன்.. போதுமா..??”

“அது போதும்டி..!!”

“ம்ம்ம்ம்ம்.. நீ ஹாலுக்கு போ.. நான் காபி போட்டு எடுத்துட்டு வரேன்..!!”

பூவள்ளி சமையலறையை விட்டு அகலவும்.. ஆதிராவை ஒரு சுறுசுறுப்பு தொற்றிக்கொண்டது..!! படபடவென பாத்திரம் கழுவி முடித்தவள்.. பத்தே நிமிடங்களில் காபியும் தயார் செய்துவிட்டாள்..!! ஹாலுக்கு சென்று.. தட்டில் இருந்த மூன்று தம்ளர்களில் ஒன்றை அம்மாவிடம் நீட்டியவாறே..

“அப்பா எங்கம்மா போயிட்டாரு..??” என்று கேட்டாள்.

“ம்க்கும்.. எங்க போயிருப்பாரு..?? வீட்டுக்கு பின்னால இருக்குற தோட்டத்துல நிப்பாரு..!! காலங்காத்தாலேயே தோட்டத்துல இருக்குற செடியையெல்லாம் கட்டிப்புடிச்சு முத்தம் குடுக்கலைன்னா.. உங்க அப்பாவுக்கு காலைச்சாப்பாடே எறங்காது..!!” பூவள்ளி அவ்வாறு கேலியாக சொல்லவும், ஆதிரா சிரித்துவிட்டாள்.

“ஹஹா.. சரி சரி.. அவருக்கு காபி வச்சுட்டு போறேன்.. வந்ததும் குடிக்க சொல்லு..!!”

இரண்டாவது தம்ளரை டீப்பாயில் வைத்துவிட்டு.. ஆதிரா உள்ளறைக்கு திரும்பினாள்..!! நடந்து சென்று தங்கள் அறைக்குள் நுழைந்தாள்.. கதவை சாத்திவிட்டு.. காபியை டேபிளில் வைத்துவிட்டு.. கட்டிலில் மெல்ல அமர்ந்து.. கணவனை துயில் எழுப்பலானாள்..!!

“அத்தான்.. எழுந்திரிங்க.. டைமாச்சு..!!”

அவ்வளவுதான்..!! எல்லா படங்களில், எல்லா கதைகளிலும் வருகிற எல்லா ஹீரோக்களையும் போலவே.. விருட்டென்று எழுந்த சிபி, ஆதிராவை இழுத்து தன் மார்போடு போட்டு, இறுக்கி அணைத்துக்கொண்டான்..!!

“ஐயோ.. என்னத்தான் இது.. விடுங்க..!!” எல்லா ஹீரோயின்களையும் போலவே, ஆதிராவும் சிபியின் சில்மிஷம் பிடிக்காத மாதிரி சிணுங்கினாள் .

“அதுக்குள்ள குளிச்சாச்சா..?? நல்லா வாசமா இருக்குற..??” அவளுடைய சிணுங்கலை மதியாமல், ஆதிராவின் கூந்தல் நுகர்ந்தான் சிபி.

“ஆமாம்..!! ம்ம்ம்ம்ம்ம்… விடுங்கத்தான்.. நான் போகணும்..!!”

“எங்க போற..??”

“டிபன் ரெடி பண்ணனும்..!!”

“அதுலாம் அத்தை பாத்துப்பாங்க.. விடு..!! நீ கொஞ்ச நேரம் இருந்துட்டு போ..!!”

“ஹையோ.. வேலை பாக்குறேன்னு சொன்னவங்களையும் நான்தான் வேணாம்னு வெரட்டிட்டு வந்திருக்கேன்.. வேறவழியில்ல.. நான்தான் போய் இப்போ ரெடி பண்ணனும்..!!”