மதன மோக ரூப சுந்தரி – 1 53

அடுத்தவர்கள் பார்வைக்கு தொல்லை தரும் பிள்ளையாக தாமிரா தோன்றியபோதும்.. ஆதிராவுக்கோ அவள் எப்போதுமே அன்புமிகு தங்கை.. சிறுவயதில் இருந்தே அவளுடன் அத்தனை ஒட்டுதல்.. அவளுக்கும் அக்கா மீது அத்தனை பாசம்..!! அவர்களுடைய பாசப்பிணைப்பை பற்றிய நினைவுகளே.. இப்போது ஆதிராவின் மனதில் அடிக்கடி ஓடிக்கொண்டிருந்தன..!! தங்கைக்காக ஏங்கினாள்.. அவள் காணாமல் போன உண்மையை தாங்க முடியாமல் தவித்தாள்..!!

தாமிராவை பற்றி நினைத்தாலே ஆதிராவுக்கு உடனடியாய் உள்ளத்தில் தோன்றுவது.. அவளுடைய கள்ளங்கபடம் இல்லாத வெள்ளை சிரிப்பும்.. கண்ணை சிமிட்டி அவள் பார்க்கிற குறும்பு பார்வையும்தான்..!! அப்புறம்.. அவளுடைய விளையாட்டுத்தனமும்.. அவள் ‘Game or Shame..??’ என்று கேட்கிற ஸ்டைலும்..!! இரண்டு கைகளையும் விரித்து முகத்துக்கு முன்பாக வைத்துக் கொள்வாள்.. ஒரு உள்ளங்கை அவள் பக்கமாக திரும்பியிருக்கும்.. இன்னொரு உள்ளங்கை எதிரிருப்பவரின் பக்கமாக திரும்பியிருக்கும்..!! இரண்டு கைகளுக்கும் நடுவிலிருக்கும் இடைவெளியில் ஒற்றைக்கண்ணால் பார்த்து.. அந்தக் கண்ணையும் வெடுக்கென வெட்டியவாறு கேட்பாள்..!!

“Game or Shame..??”

முதன்முறையாக அந்த மாதிரி அவள் கேட்டது கூட ஆதிராவுக்கு இப்போது நினைவிருக்கிறது.. அப்போது தாமிராவுக்கு எட்டுவயது.. ஆதிராவுக்கு பத்து வயது..!! இருவரும் அகழியில் உள்ள தங்கள் தாய்வழி தாத்தாவின் வீட்டில்.. பழைய பொருட்கள் அடைத்து வைத்திட்ட அறையில் விளையாடுகையில்.. ஒரு மரபொம்மையை கண்டெடுத்தனர்.. மாத்ரியோஷ்கா என்று அழைக்கப்படுகிற ரஷ்ய நாட்டில் தயாரான மரபொம்மை..!!

வித்தியாசமான பொம்மை அது.. பொம்மை என்று ஒருமையில் கூட சொல்ல இயலாது.. பொம்மைகள் என்று சொல்ல வேண்டும்.. ஒன்றுக்குள் ஒன்றாக அமைந்த ஒரே மாதிரியான எட்டு பொம்மைகள்.. அளவில் மட்டும் ஒன்றோடொன்று மாறுபட்டிருக்கும்..!! பெரிய பொம்மையை திறந்தால் உள்ளே ஒரு சிறிய பொம்மை.. அந்த பொம்மையை திறந்தால், அதனுள்ளே அதைவிட சிறிய பொம்மை.. அந்த மாதிரி மொத்தம் எட்டு பொம்மைகள்..!!

அந்த பொம்மையை இருவருக்குமே பிடித்திருந்தது.. அதை யார் வைத்துக் கொள்வது என்று இருவருக்கும் சண்டை.. ‘நான்தான் முதலில் பார்த்தேன்.. நான்தான் முதலில் பார்த்தேன்..’ என்று இருவருமே வாக்குவாதம் செய்துகொண்டார்கள்..!! அப்போதுதான் தாமிரா திடீரென அவ்வாறு சொன்னாள்.. அவளுக்கே உரித்தான அந்த பிரத்தியேக பாணியுடன்.. கைகள் இரண்டையும் முகத்திற்கு முன்பாக உயர்த்தி பிடித்து..!!

“Game or Shame..??”

“Game or Shame-ஆ..?? அப்படினா..??”

“நான் ஒரு கேம் வைப்பேன்.. அதுல நீ ஜெயிச்சா.. இந்த பொம்மையை நீயே வச்சுக்கோ.. தோத்துட்டா நான் வச்சுப்பேன்..!!”

“கேம் சரி.. அதென்ன ஷேம்..??”

“கேம் வெளையாட நீ வரலனா.. ‘பயந்தாங்கொள்ளி பயந்தாங்கொள்ளி’ன்னு நான் உன்னை கேலி பண்ணுவேன்.. அது உனக்கு ஷேம்..!! ஹாஹாஹாஹா..!!” சொல்லிவிட்டு தாமிரா கலகலவென சிரித்தாள். அப்புறம் அந்த சிரிப்புடனே அக்காவை பார்த்து,

“இப்போ சொல்லு.. Game or Shame..??” என்று கேட்டாள்.

“Game..!!” ஆதிராவும் வீராப்பாக சொன்னாள்.

கேம் என்ன என்பதை அடுத்த நாள் சொல்வதாக தாமிரா சொன்னாள்.. அன்று அந்த பொம்மையை எடுத்த இடத்திலேயே திரும்ப வைத்துவிட்டார்கள்..!! அடுத்த நாள்.. அதுபற்றிய நினைவே இல்லாமல் ஆதிரா இருந்த சமயத்தில்.. தாமிரா அவள் முன்பு திடீரென தோன்றி கத்தினாள்..!!

“Game or Shame..??”

“Game..!!” ஆதிராவும் பதிலுக்கு கத்தினாள்.