மதன மோக ரூப சுந்தரி – 1 53

அறையை விட்டு வெளியே வந்தவர்கள்.. இறுக்கமான முகத்துடனே இணைந்து நடைபோட்டனர்..!! ஆதிராவை அட்மிட் செய்ந்திருந்த வார்ட்.. அந்தக் கட்டிடத்திலேயே இன்னொரு மூலையில் இருந்தது..!! அந்த வார்டை அடைந்து.. அவள் அனுமதிக்கப்பட்டிருந்த தனியறைக்குள் நுழைந்தனர்..!! ஏதோ ஒரு சூனியத்தை வெறித்துக் கொண்டிருந்த ஆதிராவும்.. மகளின் முகத்தை கவலையுடன் பார்த்தவாறு அமர்ந்திருந்த பூவள்ளியும் பார்வையில் பட்டனர்..!! ஆதிராவின் தலையில் இப்போது பேண்டேஜ் இல்லை.. நெற்றியில் மட்டும் ஒரு ப்ளாஸ்திரி..!!

“டாக்டரை பாத்தாச்சு.. கெளம்பலாம்..!!”

தணிகை நம்பி சொன்னதும்.. படுக்கையில் இருந்து படக்கென எழுந்து கொண்டாள் பூவள்ளி..!! ஆதிராவோ, அப்பாவின் வார்த்தைகள் ஓரிரு வினாடிகள் கழித்தே காதில் விழுந்த மாதிரி.. மிக பொறுமையாக எழுந்து நின்றாள்..!! அருகில் சாய்ந்திருந்த வாக்கிங் ஸ்டிக்கை கையில் எடுத்து.. அதன் உதவியுடன் ஒரு காலை மட்டும் இழுத்து இழுத்து நடக்க ஆரம்பித்தாள்..!!

நால்வரும் மருத்துவமனையை விட்டு வெளியே வந்தார்கள்.. தயாராக நின்றிருந்த டாக்ஸியில் ஏறிக் கொண்டார்கள்..!! சிபி ட்ரைவர் சீட்டுக்கு அருகில் அமர்ந்து கொண்டான்.. மற்ற மூவரும் பின்சீட்டில்..!! டாக்ஸி கிளம்பியது.. மருத்துவமனை வளாகத்தை விட்டு வெளியே வந்ததும், சற்றே வேகம் எடுத்து விரைந்தது..!! சிறிது நேரம் சாலைப் போக்குவரத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஆதிரா.. பிறகு ஏதோ ஞாபகம் வந்தவளாய் அப்பாவிடம் திரும்பி கேட்டாள்..!!

“இப்போ எங்கப்பா போறோம்..??”

“நம்ம வீட்டுக்கு போறோம்மா..!!”

“அகழிக்கா..??” ஆதிரா அவ்வாறு கேட்கவும், மற்ற மூவரிடமும் மெலிதான ஒரு திகைப்பு.

“இ..இல்லம்மா.. இங்க.. மைசூர்ல இருக்குற வீட்டுக்கு..!!”

பூவள்ளியே சமாதானமான குரலில் மகளுக்கு பதில் சொன்னாள்..!! அடர்த்தியான மரங்களை இருபுறமும் ஏந்தியிருந்த அந்த தார்ச்சாலையில் கார் சென்றுகொண்டிருக்க.. ஆதிரா இப்போது இமைகள் இரண்டையும் மூடி பின்சீட்டில் தலை சாய்த்துக் கொண்டாள்..!!

பூவள்ளிக்கும் தணிகை நம்பிக்கும் அகழிதான் பூர்வீகம்..!! செல்வத்துக்கு சற்றும் குறைவில்லாத குடும்பத்தில் பிறந்தவர்கள் இருவரும்..!! பூவள்ளி புவனகிரியின் வழித்தோன்றல்.. தணிகை நம்பி அந்த ஊரிலேயே இன்னொரு செல்வந்தரின் ஆண்வாரிசு..!! நாற்பது வருடங்களுக்கும் மேல் அகழியிலேயே வாழ்வை கழித்திருந்தவர்கள்.. ஒருவருடம் முன்பாக மைசூருக்கு இடம்பெயருகிற மாதிரியான குடும்ப சூழல்..!! அத்தகைய சூழல் உருவாக காரணமென ஆதிராவின் தங்கை தாமிராவுக்கு நேர்ந்ததை சொல்லலாம்..!!

ஆனால்.. அந்த நிகழ்வெல்லாம் ஆதிராவுக்கு இப்போது நினைவில் இல்லை..!! வந்து ஒருவருடம் ஆகப் போகிறது.. மைசூரையே புது ஊர் போல வெறிக்க வெறிக்க பார்க்கிறாள்..!! விபத்து மயக்கத்தில் இருந்து ஆதிரா விழித்து எழுந்ததும்.. அப்பா அணிந்திருந்த டி-ஷர்ட்டை பார்த்து அவள் வியப்புற்றதற்கு காரணம் இருக்கிறது.. மைசூர் வந்த பிறகுதான் தணிகை நம்பி டி-ஷர்ட் எல்லாம் அணிகிறார்.. அகழியில் இருக்கையில் அந்தப்பழக்கம் அவருக்கு இல்லை..!!

கால்மணி நேர பயணத்துக்கு பிறகு.. காரின் வேகம் கொஞ்சம் கொஞ்சாய் குறைந்து.. இளஞ்சிவப்பு நிற வெளிப்பூச்சுடன் காணப்பட்ட அந்த இரண்டடுக்கு வீட்டின் முன்பாக சென்று நின்றது..!!

“வீடு வந்துடுச்சும்மா..!!”

பூவள்ளி சொன்னதை தொடர்ந்து நால்வரும் காரில் இருந்து இறங்கினார்கள்..!! தரையில் அழுத்தமாக ஊன்றிய வாக்கிங் ஸ்டிக்குடன் நின்ற ஆதிரா.. தலையை மெல்ல நிமிர்த்தி வீட்டை ஒரு பார்வை பார்த்தாள்..!! மைசூரை வெறித்தபோது அவள் உணர்ந்த அதே அந்நியத்தன்மையை.. ஒரு வருடமாக அவள் வாழ்ந்த இந்த வீட்டை பார்க்கையிலும் உணர்ந்தாள்..!!

“என்ன ஆதிரா அப்படி பாக்குற..?? இது உன் வீடு.. உரிமையா உள்ள வா..!!”

இயல்பாக சொன்னவாறே.. சிபி ஆதிராவின் தோள் மீது கைபோட்டு இதமாக அணைத்துக் கொண்டான்..!! அவன் அவ்வாறு அணைத்துக் கொண்டதுமே.. ஆதிரா ஒரு புதுவித கூச்சத்துடன் நெளிந்தாள்.. காணாமல் போன அவளுடைய நினைவுகளில் கணவனின் நெருக்கம் தொடர்பான நினைவுகளுமே அடக்கம்.. அதனாலேயே அவளிடம் அந்த கூச்சம்..!!

அவளது மனநிலையை உடனடியாய் புரிந்து கொண்ட சிபி.. தனது கையை அவளிடம் இருந்து விலக்கிக்கொண்டான்..!!

“பார்த்து வா ஆதிரா..!!”

என்று புன்னகையுடன் சொல்லிவிட்டு முன்னால் நடந்தான்..!! கணவன் நடந்து செல்வதையே ஆதிரா ஒரு காதல் பார்வை பார்த்தாள்.. கழுத்தில் தொங்கிய தாலியை ஒருமுறை பெருமிதமாக பார்த்துக் கொண்டாள்.. கால் தந்த வேதனையை உதடுகடித்து பொறுத்தவாறே வீட்டுக்குள் அடியெடுத்து வைத்தாள்..!!