மதன மோக ரூப சுந்தரி – 1 53

திடீரென இப்படி ஒரு ஆசை எனக்கு.. த்ரில்லர் கதை எழுதவேண்டும் என்று..!! காதலை அதிகம் சொன்னதாலோ என்னவோ.. அது ஒரு எளிமையான விஷயமாக ஆகிப்போனது எனக்கு.. ஐ மீன்.. எழுதுவதற்கு..!! த்ரில்லர் அப்படி அல்ல.. எனக்கு அதிகமாக கைவராத கலைதான்..!! முயற்சிக்கிறேன்.. உங்கள் ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன்..!!

த்ரில்லர் என்றவுடன்.. பரபரப்பாக எதையும் எதிர்பார்த்து விடாதீர்கள்..!! மதன மோக ரூப சுந்தரி, பிரேக்கிங் பாயிண்ட் கதை எல்லாம் படித்திருக்கிறீர்கள்தானே..?? அதே போன்றதொரு ஸ்டைலில்.. எனக்கு மிக மிக பிடித்த மாதிரியான.. Slow paced thriller-ஆகவே இந்தக்கதையை எழுத திட்டமிட்டுள்ளேன்..!! ஆங்காங்கே சில பரபரப்பு அம்சங்கள்.. மற்றபடி மொத்தக்கதையும் மிதமான வேகத்திலேயே பயணிக்கும்..!! படித்து பாருங்கள்.. கருத்தை பகிர்ந்துகொள்ளுங்கள்..!! நன்றி..!!

அத்தியாயம் 1

ஆண்டு: கி.பி 1896
இடம்: மேற்கு தொடர்ச்சி மலைகளில் அமைந்திருக்கிற அகழி என்கிற மலை கிராமம்.

மழைமேகம் திரண்டிருக்க.. மாலை வானம் இருண்டிருந்தது..!! சுற்றிலும் அடர்த்தியாய் வளர்ந்திருந்த காட்டுமரங்கள்.. சூரியனின் வெளிச்சத்தை சுத்தமாய் உறிஞ்சியிருந்தன..!! மேல்வானத்தில் பளிச்சென்று ஒரு மின்னல் கீற்றோடு.. மேற்குமூலையில் திடுமென ஒரு இடி முழக்கம்..!! உறைந்திருந்த மேகங்கள் இப்போது கொஞ்சம் உருக ஆரம்பிக்க.. ஊசிக்கற்றைகளாய் தூறல் துளிகள் மரங்களை ஊடுருவின..!!

அந்த காட்டு மரங்களுக்கு உட்புறமாக.. அகலமாய் உயரமாய் இருந்த அந்த கல்மேடையை சுற்றிலும்.. அகழியின் எழுபத்து சொச்ச குடும்பத்தின் பிரதிநிதிகள் குழுமியிருந்தனர்..!! அதில் எழுபது சதவீதம் பேருக்கு மேல்சட்டை இல்லை.. பாதிப்பேர் பவ்மயமாக கைகளை கட்டியிருந்தனர்..!! பக்கவாட்டில் மூலைக்கொரு தூண்களுடனும்.. பாறையை செதுக்கி அமைத்த கூரையுடனும்.. காட்சியளித்தது அந்த கல்மேடை..!! நான்கு தூண்களில் ஒன்றில் சன்னதக்காரர் சாய்ந்திருந்தார்.. சாமியாடி முடித்த களைப்பில் கண்கள் செருகியிருந்தார்..!!

கல்மேடையின் மையத்தில், கைத்தடியை ஊன்றியவாறு புவனகிரி நின்றிருந்தார்.. அவருக்கு பின்புறமாக வேல்க்கம்பு ஏந்திய நான்கு அடியாட்கள்..!! அவருடைய பார்வை ஏதோ ஒரு சூனியத்தை வெறித்துக் கொண்டிருந்தது.. சிவந்து போயிருந்த அந்த கண்களில் ஒருவித அனல்கக்கும் வன்மம்..!! வெல்வட் துணியாலான இறுக்கமான உடை அணிந்திருந்தார்.. தடிமனாக கழுத்தில் தொங்கிய தங்கச்சங்கிலியில், நீலநிறக்கல் பதிக்கப்பட்ட பதக்கம் தகதகத்தது..!! இரண்டு விரல்களை மட்டும் மூளியாக்கி, எட்டு விரல்களுக்கு முரட்டு மோதிரங்கள்.. வலது கையில் ஒரு தங்க காப்பு.. கால்களுக்கு முனை நிமிர்ந்த தோல்செருப்பு..!!

அப்போதுதான் நீளமாக பேசி முடித்திருந்தார் புவனகிரி..!! நெஞ்சில் எரிந்து கொண்டிருந்த ஆத்திரத்தை ஜீரணிக்க.. சிறிது அவகாசம் தேவையென அமைதியாகிப் போயிருந்தார்..!! அவருடைய முகத்தையே பயமும், பக்தியுமாய் பார்த்துக் கொண்டிருந்த கூட்டம்.. அடுத்து அவர் சிந்தப்போகிற வார்த்தைகளுக்காக.. இப்போதே காது தீட்டி கவனமாய் காத்திருந்தது..!!

‘டமார்’ என்ற சப்தத்துடன் இப்போது மீண்டும் ஒரு இடியோசை..!! அதைத்தொடர்ந்து.. வாள் கொண்டு வானத்தை கிழித்துவிட்டது போல.. ‘ச்ச்சோ’வென்று மழை மேலிருந்து கொட்ட ஆரம்பித்தது..!! நனைய ஆரம்பித்த மனிதகூட்டம்.. இம்மியளவும் நகர முனையவில்லை..!!

கி.பி 1896..!! இந்திய நாடு ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டுக் கிடந்த காலகட்டம் அது..!! ஒட்டுமொத்த பிரிட்டிஷ் இந்தியாவில்.. இருபத்தியொரு நிலப்பரப்புகள் மட்டுமே.. தனித்த அரசு எந்திரமும், நிர்வாக சுதந்திரமும் பெற்றிருந்தன..!! ஆங்கிலேயரின் நேரடி ஆதிக்கத்துக்கு உட்படாமல்.. அவர்களுடைய மறைமுக ஆட்சி என்கிற மாயப்போர்வையின் கீழ்.. இற்றுப்போன இறுமாப்புடன் இயங்கிக் கொண்டிருந்தன..!! சமஸ்தானங்கள் என்று அழைக்கப்பட்டன அத்தகைய நிலப்பரப்புகள்..!! அந்த இருபத்தியொரு சமஸ்தானங்களில்.. மிகப்பெரியதும், மிகமுக்கியமானதுமான ஒன்றுதான்.. மைசூர் சமஸ்தானம்..!!