ஒருவேளை உண்மை தெரிந்தால், அவன், என் மேல் காட்டப் போகும் கோபத்தை எண்ணி பயந்து, அதை எதிர்கொள்ளத் துணிவில்லாமல்தான் இப்படி நடந்து கொள்கிறேனா? அவன் எப்படி ரியாக்ட் செய்வான் என்று யோசித்தாலே, என் முகம் இருண்டது. மனம் கலங்கியது! அந்த மாற்றம், அதுதான் உண்மை என்று பட்டவர்த்தனமாக எனக்குச் சொல்லியது!
என் இயலாமையை கோபத்தின் பின்னால் மறைத்து வைத்திருக்கிறேன் என்று அறிந்த பின் மனம் இன்னமும் வருந்தியது!
எப்படிப் பார்த்தாலும் இப்படியே, எத்தனை நாள் இருக்க முடியும்? இப்படி இருப்பதும் அனைவருக்கும் வருத்தம்தான் தருகிறது, அதுவும் என் மனதைத் திருடியவனுக்கு பெரிய வலியினைத் தருகிறது எனும் போது கூட, இதற்கு தீர்வினைத் தராமல் இருப்பது, அவனுக்கு நான் இழைக்கும் மிகப் பெரும் அநீதி அல்லவா?
எவனுக்கு, என் அன்பை எல்லாம் அள்ளி அள்ளிக் கொடுக்க நினைத்தேனோ, அவனுக்கு அன்பை வழங்காவிட்டாலும், வலியைத் தராமல் இருப்பது என் கடமையல்லவா?
வாழ்க்கையில் பெற்றவர்களின் பாசத்தை கொஞ்சமும் அனுபவிக்காத அவனுக்கும், எனக்கும், ஒருவருக்கொருவர்தானே துணை?
இந்த இடைபட்ட 8 மாதத்தில் அவனே பயங்கரமாக மாறியிருக்கிறான். உணர்வுகளை வெளிப்படுத்துகிறான். இந்தச் சமயத்தில், நான் என் உணர்வுகளை மறைத்தால், அது உண்மையான காதலுக்கு அடையாளமா? உண்மை தெரிந்து அவன் வெறுத்தாலும் பரவாயில்லை. ஆனால், அதை மறைத்து அவனுக்கு வலியினைத் தந்தால், காதலியாக இல்லை… ஒரு பெண்ணாக கூட இருக்க எனக்குத் தகுதியில்லை!
மெல்ல என் மனதில் தீர்வு தெரியாவிட்டாலும், ஓரளவு நான் நடந்து கொள்ள வேண்டிய முறை தெளிவாகியது! அந்தத் தெளிவு, மனதிற்கு நிம்மதியைத் தந்தது! அந்த நிம்மதி கொஞ்சம் கொஞ்சமாக, அடி ஆழத்தில் அவன் மேல் நான் புதைத்து வைத்திருந்த காதல் உணர்வுகளை மேலே கொண்டு வந்தது!
அந்த காதல் நினைவுகள் என் புன்னகையை இன்னும் அதிகமாக்கியது!
Nice can you please upload next part
Story supera iruku..