கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 31 10

அது என்னவோ, சொல்லி வைத்தாற் போல ராமசாமி தெருவில் இறங்க வேண்டியதுதான், எங்கேயோ தூங்கிக்கொண்டிருக்கும் அந்த தெரு நாய்களில், எதற்காவது மூக்கில் வியர்த்து, மெல்லிய உறுமலுடன் தன் எதிர்ப்பை காட்ட ஆரம்பிக்கும் கதை, சில நொடிகளில் மற்ற நாய்களும், முதலில் குரைக்க ஆரம்பித்த நாயுடன் சேர்ந்து அந்த தெருவே தாங்க முடியாத அளவிற்கு குரைத்தலில் ஈடுபட்டு, அந்த தெருவையே ஒரு யுத்தகளமாக மாற்றுவதில் சென்று முடியும். ஒரு புறம் நாய்களும் மறுபுறம் ராமசாமியுமாக வீயூகம் வகுத்து நிற்பார்கள்.

நாய்கள் கோரஸாக குரைக்க ஆரம்பித்தால், பொழுது விடிந்துவிட்டது; ராமசாமி தெருவில் நடந்து கொண்டு இருக்கிறார் என அந்த தெருவாசிகள் சொல்லும் அளவிற்கு அவருக்கும் அந்த தெரு நாய்களுக்குமிடையில் இருந்த நட்பு பிரபலமாகி போயிருந்தது.

தெருவில் இறங்கி சாதாரணமாக மற்றவர்களைப் போல் நடக்காமல் தன் கையிலிருக்கும் வாக்கிங் ஸ்டிக்கை ஆட்டி ஆட்டி அனாவசியமாக அவர் செய்யும் அபிநயத் தொந்தரவுகள் தாளாமல்தான் நாய்கள் தங்கள் பாதுகாப்பின் நிமித்தம் பக்கவாத்தியமாக குலைக்க ஆரம்பிக்கின்றன என்பது தெருவில் வசிப்போர்களின் வாதம்.

நான் என் பாதுகாப்புக்காக கையில் தடியோடு நடக்கிறேன் என சொல்லுவது ராமசாமியின் தரப்பு வாதமாக இருந்தது. எது எப்படியோ, அந்த தெருவில் காலை ஐந்து மணிக்கு எழ விரும்புகிறவர்கள் தங்கள் வீட்டில் அலாரம் வைப்பதை நிறுத்தி நெடுநாட்களாகிறது.

தனியாக அவர் வாக்கிங் கிளம்பினால் குறைந்த பட்சம், ஒரு கால் நொண்டியாகி, எதிர் வீட்டு முருங்கை மரத்தின் கீழ் படுத்திருக்கும் கருப்பனாவது அவரை நோக்கி குலைக்கும். அவர் கையில் வாக்கிங் ஸ்டிக் இல்லையென்று தெரிந்தால், அவரை கண்டிப்பாகத் துரத்தும்.

ராமசாமி தன் இனம் தெரியாத பயத்தில் தன் துண்டைக் காணோம், துணியைக் காணோமென இடுப்பில் கட்டியிருக்கும் வேட்டி அவிழ தெருவில் ஓடி, மீண்டும் தன் வீட்டுக்குள் நுழைந்து இரும்பு கிராதிக் கதைவை மூடிய பின்னரே, நொண்டிக் கருப்பன் இடைக்கால போர் நடவடிக்கையாக தான் குரைப்பதை நிறுத்தும்.

ராமசாமி வீட்டுக்குள் நுழைந்த பின்னர் தன் வாலையும், காதுகளையும் ஆட்டியவாறு, வெற்றியுடன் தெருவின் நான்கு புறங்களையும் நோக்கும். அதன் பின் கம்பீரமாக நொண்டிக்கொண்டு தன் இடத்துக்கு திரும்புவதும் அந்த தெருவில் தினசரி நடக்கும் ஒரு வாடிக்கை நிகழ்ச்சியாக இருந்தது.

ராமசாமி, ஹிண்டுவில் தான் நிம்மதியாக தெருவில் நடக்க முடியாமல் தவிப்பதை எழுதிவிட்டார். முனிசிபாலிட்டிக்கு நூற்றுக்கணக்கில் மனுக்களை அனுப்பிவிட்டார்.