எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 14 57

மீரா ஒரு தெளிவான முடிவுக்கு வந்து கொண்டிருக்கும்போதே.. வீட்டுக்குள் அழைப்புமணியின் சப்தம் காதை கிழித்தது..!! அதைக்கேட்டதும் அவளிடம் மெலிதான ஒரு பதற்றம்.. ஒரு சிறு அதிர்ச்சி.. குழப்ப ரேகைகள் ஓடுகிற முகத்துடன் வெடுக்கென எழுந்தாள்.. திரைச்சீலை விலக்கி ஜன்னலுக்கு வெளியே பார்த்தாள்..!! தூரத்தில் அசோக் தெரிந்தான்.. இப்போதுதான் படிக்கட்டை விட்டிறங்கி.. சாலையில் பிரவேசித்திருந்தான்.. இவளது வீடிருக்கும் திசையை நோக்கி நடை போட ஆரம்பித்திருந்தான்..!!

‘வீதியிலே அவன் என்றானால்.. வீட்டு வாசலில் யார்..??’

ஓரிரு வினாடிகள் குழப்பமாக நெற்றி சுருக்கிய மீரா.. பிறகு அவசரமாக திரும்பினாள்.. விடுவிடுவென நடந்து அந்த அறையை விட்டு வெளியே வந்தாள்.. ஹாலுக்குள் நுழைந்தவள் கதவினை நோக்கி நடந்தாள்.. படக்கென கதவை திறந்து பார்வையை வெளியே வீசினாள்..!!

வெளியே மனோகர் நின்றிருந்தான்..!! வெளுத்த முகம்.. அதில் ஒரு கருப்பு கண்ணாடி.. அடர்த்தியான கேசம்.. அதில் ஐந்தாறு நரைமுடி.. அகலமான நெற்றி.. அதில் இப்போது வியர்வை ஈரம்.. தடித்த உதடுகள்.. அதில் இப்போது அசட்டு சிரிப்பு..!! வெளியில் நின்றிருந்த மனோகரை பார்த்ததும்.. மீரா ஒரேநேரத்தில் ஒருவித எரிச்சலுக்கும், சலிப்புக்கும் உள்ளானாள்..!!

“என்ன..??” என்றாள் அந்த எரிச்சல் தொனிக்கும் குரலுடனே.

“என்ன என்ன..??” அவன் புரியாதவன் மாதிரி கேட்டான்.

“ப்ச்.. எதுக்காக வந்திருக்கீங்கன்னு கேட்டேன்..!!”

“ஹ்ஹ.. என் வீட்டுக்கு நான் வர்றதுக்கு காரண காரியத்தோடத்தான் வரணுமா..?? வழியை விடு..!!”

எகத்தாளமாக சொன்னவன்.. தனது கனத்த உடம்புடன் கதவை தள்ளிக்கொண்டு உள்ளே நுழைய.. அவன் தன்மீது இடித்துவிடக்கூடாதென, மீரா அவசரமாய் விலகி நின்று கொண்டாள்..!!

“ஷ்ஷ்ஷ்ஷ்ஷப்பாஆஆ..!! என்னா வெயிலு..?? ச்ச.. எல்லாம் அப்படியே அவிஞ்சுரும் போல இருக்கு..!!”

சலிப்புடன் சொன்ன மனோகர்.. குளிர்கண்ணாடியை கழற்றி பாக்கெட்டில் செருகிக்கொண்டான்..!! சட்டையின் மேலிரண்டு பட்டன்களை கழற்றி விட்டுக்கொண்டான்.. உரிமையுள்ளவனாக நடந்து சென்று உள்ளறைக்குள் நுழைந்தான்..!! கதவை அறைந்து சாத்திய மீரா.. ஹாலில் நின்றவாறே அவனை முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்..!! மனோகர் சென்று ஃப்ரிட்ஜை திறந்தான்.. உள்ளே அடுக்கி வைக்கப்பட்டிருக்கிற உணவுப்பண்டங்களை ஓரிரு வினாடிகள் நோட்டமிட்டான்..!!

“ஐ ஹேட் திஸ்..!!”

சொல்லிக்கொண்டே உள்ளேயிருந்து அந்த பழச்சாறு பாட்டிலை எடுத்தான்.. ஃப்ரிட்ஜ் மீதே அடுக்கி வைக்கப்பட்டிருந்த கண்ணாடி தம்ளர்களில் ஒன்றை எடுத்து.. அதில் அந்த வெண்ணிற பழச்சாறை நிரப்பிக்கொண்டான்..!! ஃப்ரிட்ஜை மூடிவிட்டு மீராவின் பக்கம் திரும்பினான்..!!

“ஐ ரியல்லி ஹேட் லைம் ஜூஸ்..!!”

என எரிச்சலாக சொல்லியபடியே.. க்ளாஸிலிருந்த எலுமிச்சைச்சாறை உறிஞ்சிக்கொண்டான்..!! கையில் ஜூஸ் தம்ளருடனே.. நடந்து ஹாலுக்கு வந்தான்..!! அவ்வளவு நேரமாக அவனையே முறைத்துக்கொண்டிருந்த மீரா.. இப்போது பார்வையை வேறுபக்கமாக திருப்பிக்கொண்டாள்..!! மனோகர் அவ்வப்போது பழச்சாறை உறிஞ்சிக்கொண்டே.. முகத்தை திருப்பி சுற்றும் முற்றும் பார்த்து.. பார்வையாலேயே அந்த வீட்டை அளவெடுத்தான்..!!

மனோகர்.. மதுசூதனனின் மருமகன்.. மதுசூதனனின் முதல் மனைவிக்கு பிறந்த மகளான புவனாவுடைய புருஷன்..!! பக்கவாதம் வந்து படுத்த படுக்கையாக கிடந்த மதுசூதனன்.. பத்து மாதங்களுக்கு முன்பாக உயிரை விட்டதில் இருந்து.. அவருடைய கம்பனி முதலான சொத்துக்களை எல்லாம்.. கண்காணிக்கிற பொறுப்பு மனோகருக்கு வந்தது சேர்ந்தது.. இல்லாவிட்டால்.. இவனாகவே அந்த பொறுப்பை எடுத்துக்கொண்டான் என்றும் சொல்லலாம்..!! கண்காணிக்க ஆரம்பித்த சொத்துக்களை எல்லாம்.. இப்போது ஒவ்வொன்றாக கையகப்படுத்திக் கொண்டிருக்கிறான்..!!

“வீடு மாதிரியா இருக்குது இது.. ஏதோ பண்டாரப்பசங்க தங்குற மடம் மாதிரி இருக்குது..!!” வீட்டை சுற்றி பார்த்த மனோகர் சலிப்பாக சொன்னான்.

“………………….” மீரா பதில் சொல்லாமல் அமைதியாகவே இருந்தாள்.

“ஹ்ம்ம்.. நெறைய வேலையாகும் போல இருக்கே..?? இன்டீரியர்லாம் கம்ப்ளீட்டா மாத்தனும்.. மொதல்ல இந்த கலரை மாத்தணும்.. வெள்ளவெளேர்னு அசிங்கமா..!!”

“………………….”

கொஞ்சமாய் மிச்சமிருந்த பழச்சாறையும், மனோகர் இப்போது தொண்டைக்குள் சரித்துக்கொண்டான். உதட்டை நாவால் நக்கிக்கொண்டான். க்ளாஸை டீப்பாயில் வைத்தவன், மீராவை ஏறிட்டு திடீரென சொன்னான்.