எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 14 57

நெடுநேரத்திற்கு பிறகு.. ஒருவழியாக மனதை ஆசுவாசப் படுத்திக்கொண்டு.. மீரா எழுந்தாள்..!! மெல்ல நடந்து சென்று குளியலறைக்குள் நுழைந்தாள்..!! உலோக குமிழை திருக.. ஷவரில் இருந்து நீர் கொட்டியது..!! உள்ளுக்குள் இன்னும் உஷ்ணம் கனன்று கொண்டிருக்க.. உச்சியில் குளிர்ந்த நீர் கொட்டிக்கொண்டிருக்க.. உயிரற்ற ஜடம் போல நனைந்து கொண்டிருந்தாள்..!!

குளித்து முடித்து வெளியே வந்து.. வேறு உடை அணிந்து கொண்டபோது.. அசோக்கின் நினைவுகள் அவள் மனதில் பொங்கின..!! பிறகு கண்ணாடி முன் நின்று தலைதுவட்டியபோது.. அவளது உருவத்துக்கு அருகே அவன் வந்து நின்றான்..!! மீண்டும் அவனுடைய நினைவு.. அவனை காதலிக்க ஆரம்பித்ததில் இருந்தே.. அவளை துரத்தி துரத்தி தூங்கவிடாமல் செய்கிற அவனுடைய நினைவு..!! ஒரு மாறுதலுக்காக இப்போது அவனுடனான சில இனிமையான நினைவுகள்..!!

கண்ணாடியில் தன் கண்களை பார்த்தாள்.. ‘இந்தக்கண்ணை பாத்துக்கிட்டே இருக்கணும் போல இருக்கு மீரா’ என்று அசோக் சொன்னது நினைவுக்கு வந்தது..!!

தேனில் நனைந்த மலரிதழ் போலான அந்த உதடுகளுக்கு அவளது பார்வை போனது.. அசோக் அந்த உதடுகளில் தந்த காதல் முத்தம் இதயத்தில் ஓடியது..!!

விரல்களால் கன்னத்தை வருடினாள்.. அவள் மிளகாய் கடித்தபோது, அந்த கன்னத்தினை பற்றி அவன் நீர் அருந்த செய்த நிகழ்வு மனதை வருடியது..!!

கையை உயர்த்தி அதன் பிம்பம் கவனித்தாள்.. ‘அ..அடிக்கடி இல்லன்னாலும்.. அப்பப்போவாவது மீட் பண்ணிக்கலாம்ல மீரா..?? ப்ளீஸ்..!!’ என்று அவன் அவளது கையை பிடித்துக்கொண்டு பரிதாபமாக கேட்டது ஞாபகத்துக்கு வந்தது..!! கூடவே.. கையில் சுருண்டிருந்த ப்ரேஸ்லட்டின் இதய வடிவ பென்டன்ட்.. இப்போது காணாமல் போயிருப்பதும் ஞாபகத்துக்கு வந்தது..!!

“இந்த பென்டன்ட் ரொம்ப அழகா இருக்குல..?? குட்டியான க்யூட்டான ஹார்ட்.. என் ஹார்ட் மாதிரியே..!! ஹ்ம்ம்.. சின்னதா இருந்தாலும்.. இட்ஸ் கோல்டன் ஹார்ட்.. அதுவும் என் ஹார்ட் மாதிரியே..!! ஹாஹா..!!”

அசோக் சிரித்தவாறே சொன்னது அவளது நினைவுக்கு வந்தது.. அதைத்தொடர்ந்து ஒரு சலிப்பான உணர்வு..!!

‘ப்ச்.. இதுவேற.. அடிக்கடி எங்கயாவது விழுந்து தொலைச்சுடுது..!! இதை இப்போ எங்க போய் தேடுறது..?? எங்க விழுந்திருக்கும்..??’

என்று மனதுக்குள் முனுமுனுத்தவாறே அந்த பென்டன்ட்டை தேட ஆரம்பித்தாள்.. முதலில் குளியலறை சென்று பார்த்தாள்.. பிறகு ஹாலுக்கு சென்று சோபாவில் தேடினாள்.. அங்கேயும் இல்லை..!! ‘அப்டினா பெட்ரூம்லதான் எங்கயாவது கெடக்கும்..’ என்று நினைத்துக்கொண்டவள்.. படுக்கையறைக்குள் நுழைந்தாள்..!! படுக்கை விரிப்பில் தேடினாள்.. காணவில்லை..!! ‘தரையில் எங்காவது விழுந்து கிடக்கிறதா..?’ என யோசித்தவள்.. தரையை பார்க்க முகத்தை திருப்பினாள்.. முகத்தில் சூரிய வெப்பம் சுள்ளென்று அடித்தது..!! தரையை தெளிவாக பார்க்க முடியாத வகையில்.. சூரிய கதிர்களின் பிரதிபலிப்பு அவளை தொந்தரவு செய்தது..!!

“ப்ச்..!!”

என்று சலிப்பை உதிர்த்தவள், எழுந்தாள்.. ஜன்னலை நோக்கி நடந்தாள்..!! திரைச்சீலையை பற்றி இழுத்து ஜன்னலை மூட எத்தனித்தவள்.. எதேச்சையாக பார்வை வெளியே பாய, ஒருகணம் தயங்கி அப்படியே நின்றாள்..!! ஜன்னலுக்கு வெளியே தூரமாக பார்த்தாள்.. அங்கே அவள் கண்ட காட்சியில் உடனே பதறிப்போனாள்..!!

‘அது.. அந்த ஃப்ளக்ஸ் போர்டுக்கு அருகே நிற்பது.. அவர்கள்தானே.. அசோக்கும் சாலமனும்தானே..??’

தூரத்தில் தெரிந்த அவர்களுடைய உருவத்தை வைத்தும்.. அவர்கள் அணிந்திருந்த ஆடையை வைத்துமே.. மீராவால் எளிதாக அவர்களை அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது..!! அடையாளம் கண்டதுமே.. அவளது ஹார்ட்.. ஹை ப்ரஷரில் ரத்தத்தை பம்ப் செய்து.. அவளுடைய அத்தனை நரம்புகளிலும் சிதறியடித்து.. ‘படக் படக்’ என ஹைஸ்பீடில் கிடந்து துடிக்க ஆரம்பித்தது..!!

மனிதர்களை போல அவர்களுடைய மனதிற்கு ஒற்றை முகம் கிடையாது.. அது எப்போதும் பன்முகங்கள் கொண்டதாகவே இருக்கிறது.. அறுதியான ஒரு வரையறைக்குள் அகப்பட மறுக்கிறது..!! ‘ஒருவன் மனது ஒன்பதடா.. அதில் ஒளிந்து கிடப்பது எண்பதடா’ என்று கவியரசர் சொன்னது உங்களுக்கு ஞாபகம் வரலாம்..!! பலதரப்பட்ட சூழ்நிலைகளில்.. பலவிதமான முகங்களை மனிதமனம் மாட்டிக்கொள்கிறது.. அது எல்லோருமே அறிந்த ஒன்றுதான்..!!

நான் இங்கே சொல்லவிருப்பது சற்று வித்தியாசமானது..!! எதிர்பாராத இக்கட்டான ஒற்றைச்சூழலில்கூட.. மனிதருடைய ஒற்றைமனம்.. இந்த மாதிரி பன்முகங்களை.. ஒரே நேரத்தில் வெளிக்காட்டக் கூடும்..!! இக்கட்டான ஒரு சூழ்நிலையில்.. நம்மில் எத்தனை பேரால் தெளிவாக சிந்திக்க முடிகிறது..?? ஒருமனதாக ஒரு முடிவெடுக்க தடுமாறுகிறோமே..?? ஏன் அப்படி..??

‘மனம் என்பது மூளையில் எழுகிற எண்ணங்களின் தொகுப்புதான்’ என்கிறது அறிவியல் ஆராய்ச்சி..!! எதிர்பாராத ஒரு நிகழ்வினால்.. எண்ணங்களில் ஏற்படுகிற குளறுபடியினால்.. மனம் ஒரே நேரத்தில் பலவித முகங்களை உடனுக்குடன் மாற்றிக்கொள்ளலாம்..!! தூரத்தில் அசோக்கை பார்க்க நேரிட்ட மீராவுக்கும் அதுதான் நேர்ந்தது..!!

பார்த்த விழிகள் பார்த்தபடியே இருந்தன.. ஜன்னல் கம்பிகளை பற்றிய விரல்கள் பற்றியபடியே இருந்தன.. மீராவுடைய உடலும் பார்வையும் உறைந்து போயிருக்க.. அவளுடைய உளமும் சிந்தனையும் உலுக்கிவிடப் பட்டிருந்தன..!! அடுக்கடுக்காய் பல குழப்பக் கேள்விகள் அவசரமாய் கிளம்பி.. அவளுடைய மனதின் மையத்தில் குவிய ஆரம்பித்தன..!!