எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 14 57

“ப்ச்.. இப்போ என்ன ஆயிடுச்சுன்னு இப்படி பொலம்புற..??”

“பின்ன என்னடா.. அவளை கண்டுபிடிக்கிறதுக்காக இப்படி தெருத்தெருவா நாய் மாதிரி அலைய விடுறியே.. உனக்கு கொஞ்சமாவது மனசாட்சி இருக்காடா..?? இன்னும் எத்தனை வீடு ஏறி இறங்கப் போறோமோ.. என்னன்ன எழவெடுத்த பிரச்சனைலாம் நீ இழுத்துட்டு வரப்போறியோ எனக்கு தெரில.. ச்சை..!!”

“ஏய்.. கொஞ்சம் பொலம்பாம வர்றியா..!! என்ன கஷ்டமானாலும் சரி.. அவளை நான் கண்டுபிடிக்காம விடப்போறது இல்ல..!!”

“உன் ஆளு, நீ கஷ்டப்படுற.. என்னையும் எதுக்குடா கூட கூப்டுக்குட்டு இம்சை பண்ற..??”

“அது உன் தலையெழுத்து.. வா வா..!!”

சாலமனின் தோள் மீது கைபோட்டு அவனை இழுத்து செல்கிற அசோக்கையே.. மீரா வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்..!! முணுக்கென்று அவளுடைய கண்களில் கண்ணீர் பூப்பதை அவளால் கட்டுப்படுத்த முடியவில்லை.. வாயைப் பொத்திக்கொண்டு அழுதாள்..!! வேதனையில் வெடவெடக்கிற உதடுகளை.. பற்களால் அழுத்தி கடித்துக் கொண்டாள்.. ‘ஸாரிடா அசோக்.. ஸாரி..’ என்று மெலிதாக முணுமுணுத்தாள்..!!

“ஹேய்.. அப்படி எதை அவ்வளவு இன்ட்ரஸ்ட்டா பாத்துட்டு இருக்குற..??”

அருகில் குரல் கேட்டதும்.. கண்களில் வழிந்த நீரை அவசரமாய் துடைத்துவிட்டு.. மீரா படக்கென திரும்பினாள்..!! உதட்டில் ஒரு இளிப்புடன் மனோகர் நின்றுகொண்டிருந்தான்..!! அவனை பார்த்ததுமே மீராவுக்குள் மீண்டும் ஒருவித எரிச்சல்..!! குரலில் உடனடியாய் ஒரு கடுமையை வரவழைத்துக்கொண்டு சொன்னாள்..!!

“உங்ககிட்ட ஏற்கனவே ரெண்டு மூணு தடவை சொல்லிருக்கேன்..!!”

“என்னன்னு..??”

“என் பெட்ரூம்குள்ள வராதீங்கன்னு..!!”

“ஹேய்.. கூல்..!! ரிலாக்ஸ்..!! இது அங்க விழுந்து கெடந்தது.. அதான் உன்கிட்ட கொடுக்கலாம்னு வந்தேன்..!!”

மனோகர் அமர்த்தலாக சொன்னவாறே.. தன்னுடைய வலது கையை மீராவுக்கு முன்பாக நீட்டினான்.. விரித்து காட்டினான்..!! அவனது உள்ளங்கையில் அந்த இதய வடிவ பென்டன்ட் தகதகத்தது..!! அதைப்பார்த்ததும் மீராவுடைய கோவம் கொஞ்சம் வடிந்தது.. படக்கென அந்த பென்டட்டை எடுத்தாள்.. கையை சுற்றியிருந்த ப்ரேஸ்லட்டின் கொக்கியில் அதை மாட்டி.. டைட் செய்தாள்..!!

“தேங்க்ஸ்..!!” என்றாள்.

“ஹ்ம்ம்.. ப்ரேஸ்லட் நல்லாருக்கு..!! மாமா வாங்கி தந்ததா..??” மனோகரின் கேள்வி ஏனோ மீராவை சுருக்கென்று தைக்க.. வெடுக்கென்று அவனை ஏறிட்டு முறைத்தாள்..!!

“இது என் சம்பாத்தியம்..!!” என்று சூடாக சொன்னாள்.

“ஹேய்.. என்ன நீ..?? எதுக்கெடுத்தாலும் சும்மா சும்மா கோவப்படுற..??”