மதன மோக ரூப சுந்தரி – 3 14

என்று உற்சாகமாக கத்திக்கொண்டே ஆதிரா அவளை நோக்கி ஓடினாள்..!! ஆனால்.. தாமிராவோ ஒருவித திகைப்புடன் சிலைபோல் உறைந்திருந்தாள்.. அவளுடைய கண்கள் பயத்தில் அகலமாய் விரிந்திருந்தன..!!

“அக்காஆஆ..!!” என்று ஈனஸ்வரத்தில் முனுமுனுத்தாள்.

தாமிராவை நோக்கி ஓடிய ஆதிரா இப்போது அப்படியே பட்டென நின்றாள்.. அவளுடைய முகத்தில் கொப்பளித்த மகிழ்ச்சி சுத்தமாக வடிந்து போய்.. குப்பென ஒரு திகில் சாயத்தை அப்பிக்கொண்டது..!! ஆதிராவின் திகிலுக்கு காரணம்.. மரத்துக்கு பின்புறம் இருந்து வெளிப்பட்ட அந்த இன்னொரு உருவம்.. தாமிராவின் முதுகுப்பக்கம் தோன்றி அவளுக்கு மிகநெருக்கமாக நின்றிருந்தது..!!

“அக்காஆஆ..!!”

தாமிரா தொடர்ந்து பரிதாபமாக அழைத்துக் கொண்டிருந்தாள்..!! ஆதிராவோ அந்த உருவத்தைக் கண்ட மிரட்சியில் இருந்தாள்.. ஒருகையை உயர்த்தி, விரல்களை விரித்து அசைத்தவாறே, அவர்களை நோக்கி மெல்ல நகர்ந்தாள்..!! அந்த உருவத்தின் முகம் தெளிவாக தெரியவில்லை.. ஆதிரா மிகவும் பிரயத்தனப்பட்டு அந்த உருவத்தின் முகத்தை காண எத்தனித்தாள்.. இமைகளை கசக்கி கசக்கி விழித்து விழித்து பார்த்தாள்.. பிரயோஜனம் இல்லை.. முகமெல்லாம் கரியப்பிக்கொண்ட மாதிரி மசமசப்பாக காட்சியளித்ததே ஒழிய, தெளிவு பிறக்கவில்லை..!!

அவஸ்தையுடன் தலையை இப்படியும் அப்படியுமாய் அசைத்த ஆதிரா.. படக்கென பதறியடித்துக் கொண்டு எழுந்தாள்..!! அவளது இதயம் தாறுமாறாக அடித்துக் கொண்டது.. அவளுடைய மார்புகள் குபுக் குபுக்கென மேலும் கீழும் ஏறி இறங்கின.. தஸ்புஸ்சென்று மூச்சிரைத்தது..!! ஒருகணம் அவளுக்கு எதுவும் புரியவில்லை.. படுக்கையில் அமர்ந்து மலங்க மலங்க விழித்துக் கொண்டிருந்தாள்..!! அப்புறம்.. எல்லாமே கனவு என்று உணர்ந்ததும்தான் அவளிடம் ஒரு நிம்மதி பெருமூச்சு வெளிப்பட்டது..!!

பக்கவாட்டில் திரும்பி பார்த்தாள்.. சிபி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான்.. அவனுடைய ஒருகை இவளுடைய இடுப்பில் தவழ்ந்திருந்தது..!! தலையை திருப்பி கடிகாரத்தை பார்த்தாள்.. நள்ளிரவு தாண்டி இரண்டு மணி நேரம் ஆகியிருந்தது..!! தொண்டை வறண்டுபோனது மாதிரி ஒரு உணர்வு அவளுக்கு.. தாகமெடுத்தது..!! தனது இடுப்பை வளைத்திருந்த சிபியின் கரத்தை மெல்ல விலக்கினாள்.. மெத்தையில் இருந்து இறங்கினாள்..!! நடந்து சென்று டேபிள் மீதிருந்த ஜாடியை எடுக்க.. அதன் எடை குறைவாக இருந்தது.. அதனுள் தண்ணீர் இல்லை என்பது அந்த ஜாடியை எடுத்ததுமே அவளுக்கு புரிந்து போனது..!!

“ப்ச்..!!” என்று சலிப்பை வெளிப்படுத்தினாள்.

கதவு திறந்து அறையைவிட்டு வெளியே வந்தாள்.. மாடிப்படி இறங்கி ஹாலுக்குள் பிரவேசித்தாள்..!! எதற்காக இப்படி ஒரு கனவு என்று யோசித்தவாறே நடந்தாள்.. சிங்கமலையில் வனக்கொடி சொன்னது, திரவியம் திருவிழா பற்றி குறிப்பிட்டது, அப்புறம் அந்த முயல்.. எல்லாமுமாக சேர்ந்துதான் இப்படி ஒரு கனவு உருவாகி இருக்கவேண்டும் என்று தோன்றியது..!! கிச்சனுக்குள் நுழைந்த தாமிரா.. ஒரு சொம்பு நிறைய நீர் அள்ளி தொண்டைக்குள் ஊற்றிக் கொண்டாள்.. தாகம் தீர்ந்து தொண்டையின் வறட்சி நின்றது..!!