மதன மோக ரூப சுந்தரி – 3 14

அத்தியாயம் 12

அகழி செல்லும் மலைப்பாதையில் கார் மிதமான வேகத்தில் ஊர்ந்துகொண்டிருந்தது.. நீர் சொட்டுகிற தலைமயிருடன் சிபி காரை செலுத்திக் கொண்டிருந்தான்.. அவனுக்கருகே தெப்பலாக நனைந்த தேகத்துடன் ஆதிரா அமர்ந்திருந்தாள்..!! திறந்திருந்த ஜன்னலின் வழியே காருக்குள் வீசிய குளிர்காற்று ஆதிராவின் மேனியை வருட.. அவளுக்குள் ஜிவ்வென்று ஒரு சிலிர்ப்பு.. மார்புப்பந்துகளுக்கு இடையே ஆழமாய் ஒரு இறுக்கத்தை அவளால் உணர முடிந்தது..!!

“விண்டோ வேணா க்ளோஸ் பண்ணிக்க ஆதிரா..!!”

எதேச்சையாக மனைவியை ஏறிட்ட சிபி கனிவுடன் சொல்ல.. ஆதிரா கார்க் கண்ணாடியை ஏற்றி விட்டுக் கொண்டாள்.. அந்தக் கண்ணாடியிலேயே தலையையும் சாய்த்துக் கொண்டாள்.. சாலைக்கு பக்கவாட்டில் சலசலப்புடன் ஓடிய குழலாற்றையே வெறித்து பார்த்தாள்..!! காருக்குள் இப்போது ஒரு கதகதப்பு பரவினாலும்.. அதையும் மீறி ஆதிராவுக்கு குளிரெடுத்தது..!! உடல் வெடவெடக்க, உதடுகள் படபடத்து துடித்தன.. கீழ்வரிசைப் பற்கள் கிடுகிடுத்து மேல்வரிசைப் பற்களுடன் அடித்துக் கொண்டன..!! உதட்டோடும் உடலோடும் சேர்ந்து அவளது உள்ளமும் மெலிதாக நடுங்கிக் கொண்டிருந்தது..!!

ஆதிரா மனதளவில் சற்றே தடுமாறிப் போயிருந்தாள்.. அவளுடைய புத்தியில் ஒரு குழப்ப விரிசல் விழுந்திருந்தது..!! தன்னைச் சுற்றி ஏதோ அசாதாரண சம்பவங்கள் நடப்பதுபோல் அவளுக்குள் ஒரு உணர்வு.. அவளது மனத் தடுமாற்றத்திற்கு அந்த உணர்வே காரணம்..!! அப்படி உணர்வதெல்லாம் உண்மைதானா அல்லது அத்தனையும் மனம் உருவாக்கிக்கொண்ட மாய பிம்பங்களா என்றொரு கேள்வியும் அவளுக்குள் அழுத்தமாக எழுந்தது.. அந்தக் கேள்விக்கு சரியான பதில் சொல்லமுடியாமல்தான் அவளது புத்தியில் ஏற்பட்ட அந்த குழப்ப விரிசல்..!! தனது உணர்வையும் அறிவையும் தானே நம்பமுடியாத நிலையில்தான் ஆதிரா இருந்தாள்..!!

‘ஒரு மோசமான விபத்தால் ஒருவருட நினைவுகளை தொலைத்த மூளைதானே..?? திருட்டுப்போன ஞாபகங்களை திரும்ப கொணர்வதற்கும் திராணியற்ற மூளைதானே..?? தளர்ந்து போயிருக்கிற நிலையில் தவறாக என்னை வழி நடத்துகிறதோ..?? இயல்பை துறந்துவிட்டு இல்லாததை எல்லாம் கற்பனை செய்கிறதோ..?? அருவத்திற்கு உருவம் கொடுக்கிறதோ..?? நீருக்கடியில் பார்த்த உருவம் நிஜமா போலியா..?? நள்ளிரவில் கண்ட காட்சி நனவா கற்பனையா..??’

ஆதிரா மிகவும் குழம்பித்தான் போயிருந்தாள்..!! அவளது குழப்பத்தை கணவனிடம் சொல்லவும் அவளுக்கு விருப்பம் இல்லை.. அவளே தெளிவற்றுப் போயிருக்கையில் அவனிடம் என்னவென்று சொல்வாள்..?? அதுவுமில்லாமல்.. அப்படி சொல்வதனால் அகழியில் ஐந்தாறு நாட்கள் கழிக்கிற அவளது ஆசைக்கு ஆபத்து வந்துவிடுமோ என்கிற அவஸ்தையான எண்ணம் வேறு ஒருபக்கம்..!! அதனால்தான்..

“என்னாச்சு ஆதிரா.. ஏதோ சீரியஸா யோசிச்சுட்டு வர்ற..??” என்று சிபி கேட்டபோது,

“ஒ..ஒன்னுல்லத்தான்.. இன்ஸ்பெக்டர் சொன்னதைத்தான் யோசிச்சுட்டு இருந்தேன்..!!” என குழப்பத்தை புதைத்து இயல்புக்கு திரும்ப முயன்றாள்.

மேலும் சிறிது நேரத்தில் இருவரும் வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள்..!! காருக்குள் இருந்து ஆதிரா இறங்கிய கோலத்தை கண்டதுமே..

“என்னக்கா.. என்னாச்சு..??” என்று பதற்றமாக கேட்டாள் எதிரே வந்த தென்றல்.

“ஒ..ஒன்னுல்ல தென்றல்.. தண்ணிக்குள்ள தவறி விழுந்துட்டேன்..!!”

“அச்சச்சோ.. எப்படிக்கா..??”

“ப்ச்.. அதை விடு.. அம்மா எங்க..??”

“அம்மா எங்க வீட்ல இருக்காங்கக்கா.. இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துருவாங்க..!! அண்ணன் ஊர்லருந்து வந்திருக்கான்.. அதான்.. என்னை மொதல்ல அனுப்பி வச்சாங்க..!!”

“ஓ..!!”

“சமையல் வேலைலாம் முடிச்சுட்டேன்க்கா.. சாப்பிடுறீங்களா..??”

“இல்ல தென்றல்.. பசிக்கல.. கொஞ்ச நேரம் ஆகட்டும்.. அம்மா வந்துரட்டும்..!!”

“ம்ம்.. சரிக்கா..!!”