மதன மோக ரூப சுந்தரி – 3 14

“தாமிரா காணாம போனதை நீங்க எப்படி எடுத்துக்குறீங்க..??”

“எப்படினா..?? எனக்கு புரியல..!!”

“எப்படி சொல்றதுனா.. அவ காணாம போனதுல எனக்கு நெறைய கொழப்பம் இருக்கு.. நெஜமாவே குறிஞ்சிதான்..” ஆதிரா சொல்லிக்கொண்டிருக்கையிலேயே,

“இல்லைங்க.. குறிஞ்சிதான் காரணம்னு எனக்கு தோணல..!!”

என கதிர் இடையில் புகுந்து பட்டென்று சொன்னான்..!! அதைக் கேட்டதும் ஆதிராவிடம் மெலிதாக ஒரு ஆச்சர்யம்.. முகத்திலும் குரலிலும் அந்த ஆச்சரியத்தின் பிரதிபலிப்போடு திரும்ப கேட்டாள்..!!

“ஏ..ஏன் அப்படி சொல்றீங்க..?? அ..அதான்.. உங்க அம்மாவே.. அதை கண்ணால..”

“இல்லைங்க ஆதிரா.. அம்மா ரொம்ப பயந்தவங்க.. சும்மாவே எதை பாத்தாலும் குறிஞ்சி குறிஞ்சின்னு சொல்லிட்டு இருப்பாங்க.. எந்த மாதிரி சூழ்நிலைல எதை பாத்து அவங்க அந்த மாதிரி சொல்றாங்கன்னு எனக்கு தெரியல..!! அவங்க சொல்றதை எல்லாம் சீரியஸா எடுத்துக்கிட்டு நாம நம்ப வேணாம்..!!”

“ஓ..!! அப்படினா.. குறிஞ்சின்ற விஷயம் மேலயே உங்களுக்கு நம்பிக்கை இல்லையா..??”

“அப்படி இல்ல.. குறிஞ்சின்ற விஷயம் மேல எனக்கு எந்த அபிப்ராயமும் இல்ல.. உங்களை மாதிரிதான்.. நம்பலாமா வேணாமான்னு கன்ஃப்யூஷன்ல இருக்குற சராசரி ஆள்தான் நான்..!! ஆனா குறிஞ்சியோட ஆவி தாமிராவை தூக்கிட்டு போய்டுச்சுன்னு சொல்றதைத்தான் என்னால நம்ப முடியல..!!”

“அதான் ஏன்னு கேக்குறேன்..??”

“எப்படி சொல்றது.. இந்த ஊரே குறிஞ்சியை பத்தி தப்பா பேசுறப்போ.. ராட்சசி, சூனியக்காரின்னுலாம் கேவலமா திட்டுறப்போ.. குறிஞ்சியை நல்லவன்னு சொன்ன ஒரே ஆள் தாமிராதான்..!! அப்படிப்பட்ட தாமிரா மேல குறிஞ்சிக்கு என்ன கோவம்..?? குறிஞ்சி பத்தி தாமிரா சொன்னதெல்லாம் இன்னும் எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு.. அதெல்லாம் கேட்டப்புறம் அந்த குறிஞ்சியோட ஆவிதான் தாமிராவை தூக்கிட்டு போயிருக்கும்னு.. என்னால நம்ப முடியலங்க ஆதிரா..!!”

கதிர் மிக இயல்பாகத்தான் பேசினான்.. ஆனால் அவன் பேச பேச ஆதிராவிடம் ஒரு மாற்றம்.. அவளுடைய மூளையில் பளீர் பளீரென ஒரு மின்னல் தாக்குதல்.. முகத்தில் ஒருவித திகைப்பு கலந்த இறுக்கம்..!! தொலைந்து போன சில நினைவுகள் அவளது மனதுக்குள் இப்போது ஊற்றெடுக்க.. அவளிடம் மெலிதாக ஒரு தடுமாற்றம்..!!

“எ..என்ன சொல்றீங்க கதிர்..??”

“குறிஞ்சியை பத்தி இந்த ஊர்க்காரங்க சொல்றதெல்லாம் தப்புன்னு நிரூபிக்க.. தனியா நின்னு போராடுனவ தாமிரா..!! அவளுக்கு அந்த குறிஞ்சியாலேயே ஆபத்துனா.. நம்புறதுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு..!!”

“எ..எனக்கு புரியல.. அவ என்ன போராடுனா..??”

“ஓ..!! உ..உங்களுக்கு அதுலாம் ஞாபகம் இல்லையா..?? குறிஞ்சியோட உண்மைக்கதை என்னன்னு தாமிரா ஒரு ஆராய்ச்சி செஞ்சாளே.. ஞாபகம் இல்ல..??”

இப்போது கதிர் குழப்பமாக கேட்க, ஆதிராவுக்கு தலை வலிப்பது மாதிரி இருந்தது.. முகத்தை அவஸ்தையாக சுருக்கியவள், நெற்றியை பற்றி பிசைந்து கொண்டாள்.. காலில் ஏற்பட்டிருந்த வெட்டுக்காயத்தின் வலி இப்போது இன்னும் அதிகரிப்பது போல ஒரு உணர்வு.. கால்கள் மெலிதாக தடுமாற, அருகிலிருந்த கல்த்தூணை ஆதரவாக பற்றிக் கொண்டாள்..!! தாமிராவின் ஆராய்ச்சி பற்றிய நினைவுகள் ஒவ்வொன்றாக அவளுக்கு ஞாபகம் வர.. சற்று மூச்சிரைத்தவாறே அமைதியாக அந்த ஞாபகங்களை சேகரித்துக் கொண்டாள்..!!