மதன மோக ரூப சுந்தரி – 3 14

தென்றலின் பதிலைக் கூட எதிர்பாராமல் ஆதிரா வீட்டுக்குள் நுழைந்து விடுவிடுவென நடந்தாள்.. காரை நிறுத்திவிட்டு சற்று தாமதமாக வந்த சிபியும் மனைவியை பின்தொடர்ந்தான்..!!

அவர்களது அறைக்கு சென்று மாற்று உடை அள்ளிக்கொண்டாள் ஆதிரா.. திரும்ப தரைத்தளத்துக்கு வந்து குளியலறைக்குள் புகுந்துகொண்டாள்..!! சுவற்றோடு பொருந்தியிருந்த குமிழைப் பற்றி திருக.. மேலிருந்து ஜிவ்வென நீர்த்திவலைகள் கொட்டின..!! சரி செய்யப்பட்டிருந்த கீஸரின் உட்சென்று வெப்பமேற்றிக்கொண்ட நீர்க்கற்றைகள்.. எஃகு வட்டின் சிறுசிறு துவாரங்களின் வழியே வெதுவெதுப்பாக வெளிக்கொட்டின..!! ஏதோ ஒரு சிந்தனையில் எங்கேயோ வெறித்த பார்வையுடனே ஷவரில் நனைந்துகொண்டிருந்தாள் ஆதிரா..!!

குளித்து முடித்து வேறு உடை அணிந்துகொண்டாள்.. குளியலறையில் இருந்து வெளிப்பட்டபோது வனக்கொடி எதிர்ப்பட்டாள்..!! ஆற்றுக்குள் விழுந்த சம்பவத்தை பற்றி வனக்கொடி பதைபதைப்புடன் கேட்க.. ஆதிராவோ அதுபற்றிய ஆர்வமில்லாமல் அசுவாரசியமாகவே பதில் அளித்தாள்..!! பிறகு.. பேச்சை மாற்றும் விதமாக.. வனக்கொடி மகனின் வருகை பற்றி விசாரித்தாள்..!!

“கதிர் வந்துட்டார் போல..??”

“ஆ..ஆமாம்மா..!! காலைலயே வந்துட்டான்.. கார்ல நீங்க அந்தப்பக்கம் போறீங்க.. இவன் இந்தப்பக்கம் வந்துட்டான்..!!”

“ம்ம்.. எப்படி இருக்காரு..??”

“அவனுக்கென்னம்மா.. நல்லாருக்கான்..!! வஞ்சிரமீனு கொழம்பு வச்சா வக்கனையா திம்பான்.. சாப்புட வச்சுட்டு வர செத்த நேரமாயிருச்சு..!! களமேழி போனீகளே வந்துட்டிகளா.. பசியா இருப்பிகளே சாப்புட்டிகளான்னு.. எனக்கு நெனைப்பு பூரா இங்கயேதான் இருந்துச்சு..!! அதான்.. ஆக்கிப்போட்டுட்டு அவசர அவசரமா ஓடியாறேன்..!!”

“அதனால என்னம்மா.. பரவால..!! அதான் தென்றல் இங்க இருக்காளே..?? அதுமில்லாம எனக்கு பசியே இல்லம்மா.. வர்ற வழிலதான் நல்லா சாப்பிட்டு வந்தேன்..!! அவர்தான் ஒன்னும் சாப்பிடல.. பசியா இருப்பார்னு நெனைக்கிறேன்.. அவரை வர சொல்றேன்.. அவருக்கு மட்டும் கொஞ்சம் சாப்பாடு எடுத்து வைங்க..!!”

வனக்கொடியிடம் சொல்லிவிட்டு மாடிக்கு படியேறினாள் ஆதிரா.. அறையை அடைந்தவள் சிபியை கீழே அனுப்பினாள்..!! ஈரக்கூந்தலை உலர்த்தலாம் என்று பால்கனிக்கு வந்தவள்.. வீட்டுக்கு முன்புறம் ஓடிய குழலாற்றை காண நேரிட்டதுமே.. வந்தவேலையை மறந்துவிட்டு வேறு சிந்தனைகளில் மூழ்கிவிட்டாள்..!! அதே குழப்ப சிந்தனைகள்தான்.. குழலாற்றுக்குள் சற்றுமுன்பு வீழ்ந்தெழுந்த வினாடிகள்.. குறிஞ்சியைப்பற்றி சிறுவயதுமுதல் கேள்விப்பட்ட புனைவுகள்.. அகழி வந்ததுமுதல் அடுக்கடுக்காக நடந்த சம்பவங்கள்.. ‘அக்காஆஆ’ என்று காதுக்குள் ஒலிக்கிற தாமிராவின் ஏக்கக்குரல்..!!

ஆதிரா உணர்ச்சிக் கொந்தளிப்புடன் உடல் சிலிர்க்க நின்றிருந்தாள்..!! அவளும் தாமிராவும் சிறுமிகளாக இருந்தபோது.. ஆற்றங்கரை புல்வெளியில் இருவரும் ஆடிய கண்கட்டி விளையாட்டு.. இப்போது அவளுடைய ஞாபகத்துக்கு வந்தது..!! அதோ.. ஆற்றோரத்தில் கிளைகள் விரித்து அகலமாக நின்றிருக்கும் அந்த மரத்தின் அடிவாரத்தில்தான்..!! கண்களில் கருப்புத் துணியை கட்டிக்கொண்டு.. காற்றில் கைகள் அசைத்து தங்கையை தேடியவாறே.. குயிலின் குரலில் பாடினாள் சிறுமி ஆதிரா..!!

“கட்டிலும் கட்டிலும் சேர்ந்துச்சா..??”

“சேர்ந்துச்சு.. சேர்ந்துச்சு..!!”

– அக்காவின் பிடியில் சிக்கிக்கொள்ளாமல்.. அவர்களை சுற்றி வரையப்பட்டிருந்த சிறுவட்டத்துக்குள் அங்குமிங்கும் ஓடியவாறே.. வாய்கொள்ளா சிரிப்புடன் பதில்ப்பாட்டு பாடினாள் குட்டி தாமிரா..!!

“காராமணி பூத்துச்சா..??”

“பூத்துச்சு.. பூத்துச்சு..!!”

“வெட்டின கட்டை தழைச்சுச்சா..??”

“தழைச்சுச்சு.. தழைச்சுச்சு..!!”

“வேரில்லா கத்திரி காய்ச்சுச்சா..??”

“காய்ச்சுச்சு.. காய்ச்சுச்சு..!!”

தங்கை பற்றிய சிந்தனையில் மூழ்கி சிலை போலவே உறைந்திருந்தாள் ஆதிரா.. எவ்வளவு நேரம் அவ்வாறு நின்றிருந்தாள் என்பது அவளுக்கே நினைவில்லாத மாதிரி..!! திடீரென இரண்டு வலுவான கரங்கள் அவளை பின்பக்கமாக இருந்து அணைத்துக் கொள்ள.. ஆரம்பத்தில் சற்று பதறிப்போய்தான் சுயநினைவுக்கு வந்தாள்.. உடலை ஒருமாதிரி முறுக்கி விழுக்கென்று துள்ளினாள்..!! அப்புறம்.. அணைத்துக் கொண்டவன் தனது கணவன்தான் என்பது புரிந்ததும்.. அப்படியே அடங்கிப் போனாள்..!! உதட்டில் ஒரு மெலிதான முறுவலுடன்.. அவனுடைய அணைப்புக்குள் சுகமாய் புதைந்து போனாள்..!!