மதன மோக ரூப சுந்தரி – 3 14

“குறிஞ்சி வீட்டுக்குள்ள நொழைஞ்சு.. சுவத்துல பேர் எழுதி வச்சுட்டு வரணும்.. நீ உன் பேரை.. நான் என் பேரை..!! “Game or Shame..??” – தாமிரா கூலாக சொல்ல, ஆதிராவோ பதறினாள்.

இருட்ட ஆரம்பிக்கிற சமயத்தில் குறிஞ்சி வீட்டுக்கு முன்பாக வந்து நின்றனர்.. இளங்குமரிகள் இருவரும்..!! ஆளுக்கொரு கையில் நீளமான, தடியான ஆணி ஒன்றை பற்றியிருந்தனர்.. ஆதிராவின் கையிலிருந்த ஆணி மட்டும் நடுக்கத்தில் கிடுகிடுவென ஆடியது..!!

“வேணாண்டி.. போயிறலாம் வா..!!” – விதிர்விதிர்த்துப்போய் ஆதிரா சொல்லிக் கொண்டிருக்கையிலேயே.. வில்லிலிருந்து கிளம்பிய அம்பாக புறப்பட்டாள் தாமிரா.. வீட்டை நோக்கி விடுவிடுவென ஓடினாள்..!!

“ஏய்.. நில்லுடி..!!”

“ஒன்னும் ஆகாது வாடி..!!!” – தங்கையின் குரலில் சற்று தைரியம் பெற்று ஆதிராவும் அவள் பின்னால் மூச்சிரைக்க ஓடினாள்.

வீட்டை முற்றிலும் மூடுமாறு சுற்றிலும் அடித்து வைக்கப்பட்ட மரத்தகடுகளில் ஒன்றை பெயர்த்தெடுத்தாள் தாமிரா.. உருவான சிறு இடைவெளியில் உடலை திணித்து உள்ளே விழுந்தனர் உடன்பிறப்புகள் இருவரும்..!! மரத்தகடு திறப்பின் வழியாக உள்ளே சிந்திய சிறு ஒளிக்கற்றை தவிர.. வீடு மொத்தத்தையும் அடர் இருள் கவ்வியிருந்தது..!! உள்ளே விழுந்த வேகத்தில் இருவரும் எழுந்து இருட்டுக்குள் ஓடினர்..!! மூன்றடி உயரத்திற்கு குட்டையாக இருந்த, மங்கலான வெளிச்சம் படர்ந்த மண்சுவற்றில்.. ஆதிராவும், தாமிராவும் அவரவர் பெயர்களை ஆணி கொண்டு எழுத முனைந்தனர்..!! தாமிராவின் ஆணி மட்டும் ‘தா’ எழுதுவதற்குள் கையிலிருந்து நழுவி இருட்டுக்குள் விழுந்தது.. அவளது விருப்பப்படியே.. அவளுடைய திட்டப்படியே..!! தங்கை இருட்டுக்குள் ஆணியை தேடி முடிப்பதற்குள்.. தனது பெயரை சுவற்றில் பொறித்து முடித்தாள் ஆதிரா.. அந்த போட்டியில் வென்றாள்..!!

சிறிது நேரத்தில் குறிஞ்சி வீட்டை விட்டு வெளியே வந்தபிறகு..

“என்னடி இது..??” குழப்பமாக கேட்ட ஆதிராவிற்கு,

“கீழ ஆணி தேடினேன்ல.. அப்போ இது கைல மாட்டுச்சு.. மண்ணுல புதைச்சு வச்சிருந்தாங்க.. என்னன்னு பாக்கலாம்னு எடுத்துட்டு வந்துட்டேன்..!!” கைகள் விரித்து காட்டினாள் தாமிரா.

அந்த கைகளில்.. சில மாந்திரீக சமாச்சாரங்கள்.. யந்திரம் எனப்படுகிற துத்தநாகத்தாலான தகடு.. சிதைந்து பிரிந்திருந்த சிவப்புநிற பை.. அந்தப்பைக்குள் ஒரு சிறிய மண்சட்டி.. அந்த மண்சட்டிக்குள் வெண்துணி சுற்றிக்கொண்ட ஒரு மரப்பாவை.. ஆற்றுமணல்.. எரிகாட்டு சாம்பல்.. இன்னும்.. அழுகிப்போன ஏதோ உணவுப்பொருட்கள்.. காய்ந்துபோன சில மூலிகை செடிகள்..!! குமட்டிக்கொண்டு வந்தது ஆதிராவுக்கு.. வாந்தியே எடுத்துவிட்டாள்..!!

அதன்பிறகும் சில நினைவுகள் அவசர அவசரமாய் ஆதிராவின் மூளையில் பளிச்சிட்டன..!!

“உன் பொண்ணு என்ன வேலை பண்ணிருக்கான்னு கேளு மாப்ளை.. அந்த தகடு புதைச்சு குறிஞ்சியை அடக்கிவைக்க நாங்க எவ்வளவு கஷ்டப்பட்ருப்போம் தெரியுமா..??” வீட்டுக்குள் நுழையாமல் வாசலில் நின்று கத்தினார் ஆதிராவின் மாமா மருதகிரி.. பூவள்ளியின் அண்ணன்..!!

“செய்வியா.. இனிமே செய்வியா..??” தணிகைநம்பி பெல்ட்டால் விளாச..

“ஆஆஆ.. ஆஆஆ..!!” என்று தரையில் புரண்டு அலறி துடித்தாள் தாமிரா..!!

“வேணாம்பா.. விட்ருங்கப்பா.. ப்ளீஸ்ப்பா.. பாவம்பா அவ..!!” பழி முழுதையும் தான் ஏற்றுக்கொண்டு அடிவாங்கிய தங்கைக்காக கண்ணீர் சிந்தினாள் ஆதிரா.