“கேக்கிறனேன்னு தப்பா நினைக்காதீங்க தம்பி … சுகன்யா கிட்ட உங்களுக்கு என்ன கோபம்?”
“நோ … நோ … எனக்கென்ன கோபம் சார்? அப்படியெல்லாம் ஒண்ணுமில்லையே?” அவசரமாக அவரை மறுத்தான்.
“ம்ம்ம் … வீட்டுக்கு நல்லபடியா, ரெண்டு நாளைக்கு முன்னாடி நீங்க திரும்பி வந்ததை, சுகன்யா கிட்ட நீங்களே ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம் … அவளுக்கு இந்த விஷயத்துல உங்க மேல கொஞ்சம் வருத்தம்தான் …” அவர் குரலில் சிறிது ஏளனமிருப்பதாக செல்வா உணர்ந்தான்.
“சாரி சார் … நான் சொல்றதை நீங்க நம்ப மாட்டீங்க … காலையிலேருந்து நூறு தரம் சுகன்யா செல்லை டிரை பண்ணிட்டேன்..”
“அப்படியா..”
“ஆமாம் சார் … சுகன்யா நெம்பர் எனக்கு கிடைக்கவே இல்லே..”
“ம்ம்ம்…”
“அதான் இப்ப உங்களைத் சிரமம் கொடுக்கிறேன்..”
“நான் என்ன பண்ணணும் இப்ப?”
“இன் ஃபேக்ட், சுகன்யா கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்ன்னு நான் துடிச்சிக்கிட்டிருக்கேன் ..” அவன் தன் நிலையை அவருக்கு புரிய வைக்க முயன்றான்.
“ம்ம்ம் … அப்படி என்ன … முக்கியமான … சாரி தம்பி … என் கிட்ட நீங்க சொல்லலாம்ன்னு நினைச்சா சொல்லுங்களேன்?”
“கண்டிப்பா … சார் … எங்கம்மாவும் எங்க கல்யாணத்துக்கு ஓ.கே. சொல்லிட்டாங்க! இது பத்தி எங்கப்பா உங்க கிட்ட மேல் கொண்டு இன்னைக்கு பேசுவார்ன்னு நினைக்கிறேன்.”