இல்ல சார், அவிங்களுக்கு உங்களை நல்லா தெரிஞ்சிருக்கும் போல. அவங்க கான்ஃபிடண்ட்டா சொல்லுறாங்க, நீங்க பாக்க அலவ் பண்ணுவீங்கன்னு. வா, போன்னு சொல்ற அளவுக்கு பழக்கம் மாதிரி தெரியுது. அதான்…
லுக், என் காசுக்காக, என்னைத் தெரிஞ்ச மாதிரி காட்டிக்க, ஆயிரம் பேரு வருவாங்க. அவிங்களை ஃபில்டர் பண்ணத்தான் உங்களை அப்பாயிண்ட் பண்ணியிருக்கேன். இந்த உறவே வேணாம்னு சொல்லியாச்சில்ல. அப்புறம் எதுக்கு இங்க வர்றாங்களாம்? உங்க பாசை மரியாதை இல்லாம பேசுறவிங்களை, நீங்களே திட்டியிருக்க வேணாம்? என்கிட்ட வந்து அதையேச் சொல்றீங்க?
இனி அவிங்க பாக்கனும்னு சொல்லி நீங்க வந்து நின்னா, உங்களை வேலையை விட்டு தூக்கிடுவேன். ஓகே?
அவிங்களா போறாங்களா, இல்லை வாட்ச்மேனைக் கூப்பிடனுமான்னு கேளுங்க என்று கத்தியிருக்கிறான்.
இது எல்லாமே, அறைக்கு வெளியே இருந்த லாவண்யாவின் காதிலும் விழுந்தது. அவளால், அந்த அவமானத்தைத் தாங்கமுடியவில்லை. கிடுகிடுவென்று வெளியே வந்துவிட்டாள்.
ஆனால், அத்தனைப் பிரச்சினைக்கும் மூல காரணம் ஒன்றுதான்.
அது, லாவண்யா என்ற பெயரை, அவனது செக்ரட்டரி, சரண்யா என்று உள் வாங்கிக் கொண்டதுதான். அது லாவண்யாவிற்கும் தெரியாது! தெரிந்திருந்தால், அவளுக்குப் புரிந்திருக்கும்.
ஏனெனில், சரண்யா என்பது, அவனுடைய சித்தியின் அதாவது, அவன் அப்பாவின் இரண்டாம் மனைவியின் பெயர்.