எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 12 57

அந்த பேருந்து நிலையத்தில் பணிபுரிகிற, அரசு போக்குவரத்து கண்காணிப்பாளர் ஒருவரை.. பஜ்ஜி, சமோசா, பாதாம்பால் எல்லாம் வாங்கித்தந்து கைக்குள் போட்டுக் கொண்டார்கள்.. அவர் மூலமாக அந்த மூன்று வழித்தடங்களில் வேலையமர்த்தப்பட்ட, அத்தனை நடத்துனர்களின் விவரங்களையும் வாங்கிக் கொண்டனர்.. ஒவ்வொரு நடத்துனரையும் சந்தித்து, மேலே சொன்ன வாக்கியங்களை கூறி விசாரித்தனர்.. ‘அடடே.. அந்தப்பொண்ணா.. எனக்கு ரொம்ப நல்லா தெரியுமே..?’ என்று யாராவது சொல்லிவிட மாட்டார்களா என்று எதிர்பார்த்தனர்.. ஏங்கினர்..!!

ஆனால்.. அவர்களுடைய எதிர்பார்ப்பும், ஏக்கமும் ஏமாற்றமாகத்தான் உருமாறிக் கொண்டிருந்தன..!!

“எனக்கு கண்ணாலம் ஆயிடுச்சுப்பா.. பஸ்ல வர்ற புள்ளைகளை சைட் அடிக்கிறத விட்டு, பல வருஷம் ஆயிப் போச்சு.. ஹ்ம்ம்.. அதுலாம் ஒரு காலம்..!!” என்றான் நடுத்தர வயது நடத்துனர் ஒருவன்.

“அதெல்லாம் வுடு.. அவளுக்கும் உனக்கும் எப்டி கனக்சனு..?? ரெண்டு பேரும் இன்னாலாம் பண்ணீங்கோ.. ஒரே குஜால்தானா..?? பார்ட்டி எப்டி..??” – இது ஒரு இளவயது ஜொள்ளு.

“ஏய்.. போங்கடா அந்தாண்ட.. உங்களுக்குலாம் வேற வேலையே இல்லையாடா.. அப்டியே அலையுறானுவ !!” – புரிந்து கொள்ளாமல் சீறியது ஒரு பெருசு.

அசோக்கும் சாலமனும், இரண்டு நாட்களின் பெரும்பான்மையான நேரத்தை வடபழனி பேருந்து நிலையத்தில்தான் கழித்தனர்..!! அந்த இரண்டு நாட்களிலும்.. அட்ரஸ் கண்டுபிடிக்கிற முயற்சியில் முன்னேற்றம் உண்டா என கேட்பதற்காக.. நான்கு முறை ஸ்ரீனிவாச பிரசாத்துக்கு அசோக் கால் செய்தான்..!! அவரும் ‘சொல்லுடா அசோக்..’ என்பார்.. ‘ஸாரிடா.. இன்னைக்கு ரொம்ப வேலையா போச்சு.. ஒன்னும் பண்ணமுடியல..’ என்று வருந்துவார்.. ‘இந்த மட …. இருக்கானே…’ என்று யாராவது மக்கள் பிரதிநிதியை, கெட்ட வார்த்தையில் திட்டுவார்.. ‘இன்னும் ரெண்டு நாள் டைம் குடுடா.. கண்டிப்பா முடிச்சுடுறேன்..’ என்று நம்பிக்கை தெரிவிப்பார்.. ‘ஒன்னும் வொர்ரி பண்ணிக்காத.. கூலா இரு..’ என்று ஆறுதலாக சொல்லிவிட்டு, காலை கட் செய்வார்..!!

இரண்டு நாட்கள் முடிந்தபோது.. அசோக்கும், சாலமனும் அவர்கள் லிஸ்டில் இருந்த அனைத்து நடத்துனர்களையும் விசாரித்து முடித்திருந்தனர்.. ஒரே ஒருவரை தவிர..!! உடல்நலம் சரியில்லாமல், விடுப்பில் இருந்த அவரையும்.. மூன்றாவது நாள் காலை பத்து மணியளவில், மிகச்சரியாக வளைத்து பிடித்தனர்..!! அவரிடமும் அவர்களுக்கு எந்த தகவலும் பெயரவில்லை..!! இவர்கள் ஒவ்வொரு கேள்வியாக கேட்க.. அவர் கையை விரித்தார்.. உதட்டை பிதுக்கினார்.. ‘ம்ஹூம்.. ம்ஹூம்..’ என்று இப்படியும் அப்படியும் தலையை ஆட்டினார்..!! இறுதியில்..

“ஐயயயயயே.. நவுருங்கப்பா.. நானே நாஷ்டா துன்னாம, நாக்கு வறண்டு போய் கெடக்கேன்.. நீங்க வேற..?? ஷ்ஷ்ஷ்ஷ்.. அப்டியே க்கேரா இருக்கு..!!” என்று சலிப்பாக சொன்னவர், நாஷ்டா கடையை நோக்கி நடையை கட்டினார்.

அவர்களுடைய முயற்சி அப்படி அட்டர் ஃப்ளாப் ஆனதில்.. அசோக்கும், சாலமனும் ரொம்பவே நொந்து போயினர்..!! ‘ச்ச.. எல்லாம் வேஸ்டா போச்சே..’ என்று எரிச்சலாக முனுமுனுத்தவர்கள்.. பிறகு பேருந்து நிலையத்தை விட்டு வெளியே வந்தனர்..!! தளர்ந்துபோன நடையுடன் அவர்கள் வெளியே வர.. அவர்களுக்கு மிக நெருக்கமாக ஒரு பைக் ‘விர்ர்ர்ர்’ என்று சீறிப் பறந்தது..!! ஆரம்பத்தில் அந்த பைக்கை கவனியாத சாலமன்.. கடைசி நேரத்தில் சுதாரித்து விலகிக்கொள்ள முயன்றும்.. அவனுடைய கைவிரல்களை ‘பட்’ என்று தட்டிவிட்டு விரைந்தது அந்த பைக்..!! ஏற்கனவே கடுப்பில் இருந்த சாலமனுக்கு.. சுர்ரென்று ஏறியது டென்ஷன்.. அந்த பைக்கை பார்த்து கத்தினான்..!!

“டேய்.. பாடு..!!! பொண்ணு பின்னால இருந்தா.. த்தா.. கண்ணு தெரியாதாடா உங்களுக்கு..??”

அவன் கத்தியது பைக் ஓட்டியவன் காதில் விழுவதற்குள்ளேயே.. தொலைதூரம் சென்றிருந்தது அந்த வண்டி..!! பின் ஸீட்டில் உட்காந்திருந்த இளம்பெண்.. கைகள் ரெண்டையும் விரித்து.. காதலனின் வேகத்தை ரசித்தாள்..!! முகத்தை குரங்கு மாதிரி வைத்துக்கொண்டு.. சாலமன் அசோக்கை திரும்பி பார்க்க.. அவனோ பிரம்மை பிடித்தவன் மாதிரி.. அந்த பைக் பறந்த திசையையே வெறித்துக் கொண்டிருந்தான்..!! எதுவும் புரியாமல் குழம்பிய சாலமன்..

“என்னாச்சுடா..??” என கேட்டான்.

“மச்சி.. அந்த பைக்கை பாத்தியா..??”

Updated: June 14, 2021 — 8:33 am

1 Comment

  1. Super.i realy enjoyed.pls continued.dont stopped.

Comments are closed.